செங்கடலால் அழிவும் மீட்பும்

1இறைப்பற்றில்லாதவர்களைக்

கடவுளின் சீற்றம் இரக்கமின்றி

இறுதிவரை தாக்கியது.

ஏனெனில் அவர்கள்

செய்யவிருந்ததைக் கடவுள்

முன்னரே அறிந்திருந்தார்.

2இஸ்ரயேலர் புறப்பட்டுச் செல்ல

விடைகொடுத்து,

விரைவில் அவர்களை வெளியே

அனுப்பி வைத்த

அதே எகிப்தியர்கள்

பிறகு தங்கள் மனத்தை

மாற்றிக்கொண்டு

அவர்களைப் பின்தொடர்ந்தார்கள்.

3எகிப்தியர்கள் தங்களுள்

இறந்தவர்களின் கல்லறைகளில் புலம்பி,

அவர்களுக்காக இன்னும் துயரம்

கொண்டாடுகையில்,

இன்னோர் அறிவற்ற சூழ்ச்சியில்

இறங்கினார்கள்;

முன்பு யாரை வெளியேறும்படி

வேண்டிக் கொண்டார்களோ,

அவர்களையே தப்பியோடுவோரைப்

போலத் துரத்திச் சென்றார்கள்.

4தங்கள் நடத்தைக்கு ஏற்ற முடிவுக்கே

அவர்கள் தள்ளப்பட்டார்கள்;

அதனால் இதற்குமுன்

நடந்தவற்றையெல்லாம்

அவர்கள் மறந்து விட்டார்கள்;

இவ்வாறு தங்கள் துன்பத்தில்

குறையாயிருந்த தண்டனையே

நிறைவு செய்தார்கள்.

5இவ்வாறு

உம் மக்கள் வியத்தகு

பயணத்தைத் தொடர்ந்து சென்றார்கள்.

அவர்களுடைய பகைவர்களோ

விந்தையான சாவை

எதிர்கொண்டார்கள்.

6உம் பிள்ளைகள்

தீங்கின்றிக் காக்கப்படும்படி,

படைப்பு முழுவதும்

உம் கட்டளைகளுக்குப் பணிந்து,

மீண்டும் தன் இயல்பில்

புத்துயிர்ப்பெற்றது.

7அவர்களது பாசறைக்கு

முகில் நிழல் கொடுத்தது.

முன்பு தண்ணீர் இருந்த இடத்தில்

பின்பு உலர்ந்த தரை தோன்றிற்று.

செங்கடலினூடே தங்குதடை இல்லாத

வழியும், சீறிப்பாயும் அலைகளினூடே

புல்திடலும் உண்டாயின.

8உமது கைவன்மையால்

காப்பாற்றப் பட்ட மக்கள் அனைவரும்

அவ்வழியே கடந்து சென்றனர்.

உம்முடைய வியத்தகு செயல்களை

உற்று நோக்கிய வண்ணம் சென்றனர்.

9குதிரைகளைப் போலக்

குதித்துக்கொண்டும்,

ஆட்டுக்குட்டிகளைப் போலத்

துள்ளிக் கொண்டும்,

தங்களை விடுவித்த

ஆண்டவராகிய உம்மைப் புகழ்ந்து

கொண்டே சென்றனர்.

இயற்கையில் ஏற்பட்ட மாற்றம்

10அவர்கள் வேற்று நாட்டில்

தங்கியிருந்தபோது

நிகழ்ந்தவற்றை இன்னும் நினைவு

கூர்ந்தார்கள்;

விலங்குகளுக்கு மாறாக நிலம்

கொசுக்களைத் தோற்றுவித்ததையும்

, மீன்களுக்கு மாறாகத் தவளைக்

கூட்டங்களை ஆறு உமிழ்ந்ததையும்

அவர்கள் இன்னும் நினைவில்

வைத்திருந்தார்கள்.

11பின்பு சுவையான இறைச்சியை

அவர்கள் விரும்பி வேண்டியபோது,

புதுவகைப் பறவைகளைக் கண்டார்கள்.

12ஏனெனில் அவர்களுடைய

விருப்பத்தை நிறைவு செய்யக்

கடலிலிருந்து காடைகள்

புறப்பட்டுவந்தன.

எகிப்தியர்களின் குற்றமும் தண்டனையும்

13பேரிடியால் எச்சரிக்கப்பட்ட

பின்னரே பாவிகள்

தண்டிக்கப்பட்டார்கள்;

தாங்கள் செய்த தீச்செயல்களுக்காக

நீதியின்படி துன்புற்றார்கள்;

ஏனெனில், அன்னியர்மட்டில்

பகைமையுடன் நடந்து கொண்டார்கள்.

14சோதோம் நகரைச் சேர்ந்தோர்

தங்களை நாடிவந்த

வேற்றினத்தார்க்கு

இடம் கொடுக்க மறுத்தார்கள்.

எகிப்தியர்களோ தங்களுக்கு

நன்மை செய்தவர்களையே

அடிமைப்படுத்தினார்கள்.

15இது மட்டுமன்று;

சோதோம் நகரைச் சேர்ந்தோர்

உறுதியாகத் தண்டனைத் தீர்ப்புக்கு

உள்ளாவார்கள்; ஏனெனில்

அவர்கள் அயல்நாட்டினரைப்

பகைவர்களென நடத்தினார்கள்.

16எகிப்தியர்களோ அயல்நாட்டினரை

விழாக்கோலத்துடன் வரவேற்று,

அவர்களுக்கு எல்லா உரிமையும்

அளித்தபின்னரும்

கொடுந்தொல்லைகள் தந்து

அவர்களைத் துன்புறுத்தினார்கள்.

17நீதிமானின் கதவு அருகில்

சோதோம் நகரைச் சேர்ந்தோர்

கவ்விய காரிருளால் சூழப்பட்டு,

தம்தம் கதவைத் தடவிப்பார்த்து

வழி தேடியதுபோல்,

எகிப்தியர்களும் பார்வையற்றுப்

போயினர்.

இயற்கையில் விளங்கிய இறைவனின் ஆற்றல்

18யாழின் சுருதிகள்

மாறாமலே இருந்துகொண்டு,

பண்ணின் இயல்லை மாற்றி

அமைப்பதுபோல்

இயற்கையின் ஆற்றல்களும்

செயல்படுகின்றன.

நிகழ்ந்தவற்றைக் கண்டு

இந்த உண்மையைத்

தெளிவாக அறிந்துகொள்ளலாம்.

19நிலத்தில் வாழும் விலங்குகள்

நீரில் வாழும் விலங்குகளாக மாறின;

நீந்தித் திரியும் உயிரினங்கள்

நிலத்திற்கு ஏறிவந்தன.

20நீரின் நடுவிலும் நெருப்பு

தன் இயல்பான ஆற்றலைக்

கொண்டிருந்தது;

நீரும் தன் அவிக்கும் இயல்வை

மறந்துவிட்டது.

21மாறாக,

அழியக்கூடிய உயிரினங்கள்

நெருப்புக்குள் நடந்தபோதும்,

அவற்றின் சதையை

அது சுட்டெரிக்கவில்லை;

பனிக்கட்டிபோல் எளிதில்

உருகும் தன்மை கொண்ட

அந்த விண்ணக

உணவையும் உருக்கவில்லை.

22ஆண்டவரே,

நீர் எல்லாவற்றிலும் உம் மக்களை

உயர்த்தி மேன்மைப்படுத்தினீர்;

எல்லா நேரத்திலும்

எல்லா இடத்திலும்

நீர் அவர்களுக்குத்

துணைபுரியத் தவறவில்லை.


19:1-9 விப 14:1-4. 19:14 தொநூ 19:1-11.