இயற்கை வழிபாடு

1கடவுளை அறியாத மனிதர்

அனைவரும் இயல்பிலேயே

அறிவிலிகள் ஆனார்கள்.

கண்ணுக்குப் புலப்படும்

நல்லவற்றினின்று

இருப்பவரைக் கண்டறிய

முடியாதோர் ஆனார்கள்.

கைவினைகளைக்

கருத்தாய் நோக்கியிருந்தும்

கைவினைஞரை அவர்கள்

கண்டு கொள்ளவில்லை.

2மாறாக, தீயோ, காற்றோ,

சூறாவளியோ,

விண்மீன்களின் சுழற்சியோ,

அலைமோதும் வெள்ளமோ,

வானத்தின் சுடர்களோதாம்

உலகை ஆளுகின்ற தெய்வங்கள்

என்று அவர்கள் கருதினார்கள்.

3அவற்றின் அழகில் மயங்கி

அவற்றை அவர்கள்

தெய்வங்களாகக்

கொண்டார்கள் என்றால்,

அவற்றிற்கெல்லாம் ஆண்டவர்

அவற்றினும் எத்துணை மேலானவர்

என அறிந்துகொள்ளட்டும்;

ஏனெனில் அழகின்

தலையூற்றாகிய கடவுளே

அவற்றை உண்டாக்கினார்.

4அவற்றின் ஆற்றலையும்

செயல்பாட்டையும் கண்டு

அவர்கள் வியந்தார்கள் என்றால்,

அவற்றையெல்லாம் உருவாக்கியவர்

அவற்றைவிட எத்துணை

வலிமையுள்ளவர் என்பதை

அவற்றிலிருந்து அறிந்து கொள்ளட்டும்.

5ஏனெனில் படைப்புகளின்

பெருமையினின்றும் அழகினின்றும்

அவற்றைப் படைத்தவரை

ஒப்புநோக்கிக் கண்டுணரலாம்.

6இருப்பினும், இம்மனிதர்கள்

சிறிதளவே குற்றச்சாட்டுக்கு

உரியவர்கள். ஏனெனில்

கடவுளைத் தேடும்போதும்

அவரைக் கண்டடைய

விரும்பும்போதும்

ஒருவேளை அவர்கள் தவறக்கூடும்.

7அவருடைய

வேலைப்பாடுகளின் நடுவே

வாழும்பொழுது

கடவுளை அவர்கள்

தேடிக்கொண்டிருக்கின்றார்கள்.

தாங்கள் காண்பதையே

நம்பிவிடுகின்றார்கள்;

ஏனெனில் அவை அழகாக உள்ளன.

8இருப்பினும், அவர்களுக்கும்

மன்னிப்பே கிடையாது;

9உலகை ஆராய்ந்தறியும் அளவுக்கு

ஆற்றல் அவர்களுக்கு இருந்த

போதிலும், இவற்றுக்கெல்லாம்

ஆண்டவரை

இன்னும் மிக விரைவில்

அறியத் தவறியது ஏன்?

சிலைவழிபாடு

10ஆனால் பொன், வெள்ளியால்

திறமையாக உருவாக்கப்பட்டவையும்,

விலங்குகளின் சாயலாய்ச்

செய்யப்பட்டவையுமான

மனிதக் கைவேலைப்பாடுகளையோ

பண்டைக் காலக் கைவேலைப்பாடாகிய

பயனற்றக் கல்லையோ

தெய்வங்கள் என்று அழைத்தவர்கள்

இரங்கத் தக்கவர்கள்;

செத்துப் போனவற்றின்மீது

அவர்கள் நம்பிக்கை வைக்கிறார்கள்.

11திறமையுள்ள தச்சர் ஒருவர்

எளிதில் கையாளக்கூடிய

மரம் ஒன்றை வெட்டுகிறார்;

அதன் மேற்பட்டைகளையெல்லாம்

நன்றாக உரிக்கிறார்;

பிறகு அதைக் கொண்டு

வாழ்வின் தேவைகளுக்குப்

பயன்படும் ஒரு பொருளைச்

சிறந்த வேலைப்பாடுகளுடன் செய்கிறார்.

12வேலைக்குப் பயன்படாத

மரக்கழிவுகளை எரித்து,

உணவு தயாரித்து,

வயிறார உண்கிறார்.

13ஆயினும் அவற்றுள் எஞ்சியதும்,

ஒன்றுக்கும் உதவாததும்,

கோணலும் மூட்டுமுடிச்சுகளும்

நிறைந்ததுமான ஒரு மரத்துண்டை

அவர் எடுத்து, ஓய்வு நேரத்தில்

அதைக் கருத்தாய்ச் செதுக்கி,

கலைத்திறனோடு அதை இழைத்து,

மனிதரின் சாயலில்

அதை உருவாக்குகிறார்.

14அல்லது ஒரு பயனற்ற

விலங்கின் உருவத்ததைச் செய்து,

செந்நிறக் கலவையால் அதைப் பூசி,

அதன் மேற்பரப்பில் உள்ள

சிறு பள்ளங்களை

அவர் சிவப்பு வண்ணம் பூசி

மறைக்கிறார்.

15அதற்குத் தகுந்ததொரு

மாடம் செய்து,

அதைச் சுவரில் ஆணியால்

பொருத்தி,

அதில் சிலையை வைக்கிறார்;

16தனக்குத்தானே

உதவி செய்ய முடியாது

என்பதை அறிந்து,

அது விழாதபடி பார்த்துக்

கொள்கிறார்; ஏனெனில்

அது வெறும் சிலைதான்;

அதற்கு உதவி தேவை.

17அவர் தம்முடைய உடைமைகளுக்காகவும்

திருமணத்துக்காகவும்

குழந்தைகளுக்காகவும்

வேண்டும்போது

உயிரற்ற ஒரு சிலையுடன்

பேச வெட்கப்படுவதில்லை;

வலிமையற்ற ஒன்றிடம்

உடல்நலத்திற்காக வேண்டுகிறார்.

18செத்துப்போன ஒன்றிடம்

வாழ்வுக்காக மன்றாடுகிறார்;

பட்டறிவு இல்லாத ஒன்றிடம்

உதவி கேட்கிறார்; ஓர் அடிகூட

எடுத்து வைக்கமுடியாத ஒன்றிடம்

நல்ல பயணத்திற்காக இறைஞ்சுகிறார்.

19பொருள் ஈட்டலிலும் அலுவலிலும்

செயல்பாட்டிலும் வெற்றி தரும்படி

வலுவற்ற ஒன்றிடம் அவர் வேண்டுகிறார்.


13:1-9 உரோ 1:20-32. 13:10-14:31 எசா 44:9-20; எரே 10:1-16; பாரூ 6:3-72.