1. ஞானமும் மனிதரின் முடிவும்

நீதியைத் தேடுதலே இறவாமைக்கு வழி

1மண்ணுலகை ஆள்பவர்களே,

நீதியின்மேல் அன்பு செலுத்துங்கள்;

நன்மனத்துடன் ஆண்டவரைப் பற்றி

நினைந்திடுங்கள்;

நேர்மையான உள்ளத்துடன்

அவரைத் தேடுங்கள்.

2அவரைச் சோதியாதோர்

அவரைக் கண்டடைகின்றனர்;

அவரை நம்பினோர்க்கு

அவர் தம்மை வெளிப்படுத்துகின்றார்.

3நெறிகெட்ட எண்ணம் மனிதரைக்

கடவுளிடமிருந்து பிரித்துவிடும்.

அவரது ஆற்றல் சோதிக்கப்படும் பொழுது,

அது அறிவிலிகளை

அடையாளம் காட்டிவிடும்.

4வஞ்சனை நிறைந்த ஆன்மாவில்

ஞானம் நுழைவதில்லை;

பாவத்திற்கு அடிமையான உடலில்

ஞானம் குடிகொள்வதில்லை.

5நற்பயிற்சி பெற்ற உள்ளம்

வஞ்சனையினின்று விலகியோடும்;

அறிவற்ற எண்ணங்களை விட்டு அகலும்;

அநீதி அணுகுகையில்

அது நாணி ஒதுங்கும்.

6ஞானம் மனிதநேயமுள்ள ஆவி;

ஆயினும் இறைவனைப் பழிப்போரை

அது தண்டியாமல் விடாது.

கடவுள் அவர்களுடைய

உள்ளுணர்வுகளின் சாட்சி;

உள்ளத்தை உள்ளவாறு

உற்று நோக்குபவர்;

நாவின் சொற்களைக்

கேட்பவரும் அவரே.

7ஆண்டவரின் ஆவி

உலகை நிரப்பியுள்ளது;

அனைத்தையும் ஒருங்கிணைக்கும்

அந்த ஆவி

ஒவ்வொரு சொல்லையும் அறிகின்றது.

8நேர்மையற்றதைப் பேசுவோர்

மறைந்திருக்க முடியாது;

தண்டனை வேளையில்

நீதியினின்று தப்பமுடியாது.

9இறைப்பற்றில்லாதோரின் சூழ்ச்சிகள்

நுணுகி ஆராயப்படும்;

அவர்களுடைய சொற்கள்

ஆண்டவரின் காதுக்கு எட்டும்;

அவர்களுடைய நெறிகெட்ட செயல்கள்

கண்டிக்கப்படும்.

10விழிப்புடைய காது

அனைத்தையும் கேட்கின்றது.

முறையீடுகளின் முணுமுணுப்பு

செவிக்கு எட்டாமல் போவதில்லை.

11பயனற்ற முணுமுணுப்புப்பற்றி

எச்சரிக்கையாக இருங்கள்;

பழிச்சொல் கூறாது

உங்கள் நாவை அடக்குங்கள்.

ஏனெனில் மறைவாய்ப் பேசிய எதுவும்

விளைவின்றிப் போகாது.

பொய் சொல்லும் வாய்

ஆன்மாவைக் கொல்லும்.

12நெறிதவறிய வாழ்வால்

சாவை வரவேற்றுக்கொள்ளாதீர்கள்;

உங்கள் செயல்களாலேயே

அழிவை வருவித்துக்கொள்ளாதீர்கள்.

13சாவைக் கடவுள் உண்டாக்கவில்லை;

வாழ்வோரின் அழிவில்

அவர் மகிழ்வதில்லை.

14இருக்கவேண்டும் என்பதற்காகவே

அவர் அனைத்தையும் படைத்தார்.

உலகின் உயிர்கள் யாவும்

நலம் பயப்பவை;

அழிவைத் தரும் நஞ்சு எதுவும்

அவற்றில் இல்லை;

கீழுலகின் ஆட்சி மண்ணுலகில் இல்லை.

15நீதிக்கு இறப்பு என்பது இல்லை.

இறைப்பற்றில்லாதவர்கள் வாழ்வை நோக்கும் முறை

16இறைப்பற்றில்லாதவர்கள்

தங்கள் செயலாலும் சொல்லாலும்
இறப்பை வரவழைத்தார்கள்;

அதை நண்பனாகக் கருதி

அதற்காக ஏங்கினார்கள்;

அதனோடு

ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்;

அதனோடு தோழமை கொள்ள

அவர்கள் பொருத்தமானவர்களே.


1:1 சாஞா 6:1-11. 1:4 சீஞா 15:7. 1:13 எசே 18:32; 33:11; 1 பேது 3:9. 1:16 நீமொ 8:36; எசா 28:15.