1மண்ணுலகை ஆள்பவர்களே,
நீதியின்மேல் அன்பு செலுத்துங்கள்;
நன்மனத்துடன் ஆண்டவரைப் பற்றி
நினைந்திடுங்கள்;
நேர்மையான உள்ளத்துடன்
அவரைத் தேடுங்கள்.
2அவரைச் சோதியாதோர்
அவரைக் கண்டடைகின்றனர்;
அவரை நம்பினோர்க்கு
அவர் தம்மை வெளிப்படுத்துகின்றார்.
3நெறிகெட்ட எண்ணம் மனிதரைக்
கடவுளிடமிருந்து பிரித்துவிடும்.
அவரது ஆற்றல் சோதிக்கப்படும் பொழுது,
அது அறிவிலிகளை
அடையாளம் காட்டிவிடும்.
4வஞ்சனை நிறைந்த ஆன்மாவில்
ஞானம் நுழைவதில்லை;
பாவத்திற்கு அடிமையான உடலில்
ஞானம் குடிகொள்வதில்லை.
5நற்பயிற்சி பெற்ற உள்ளம்
வஞ்சனையினின்று விலகியோடும்;
அறிவற்ற எண்ணங்களை விட்டு அகலும்;
அநீதி அணுகுகையில்
அது நாணி ஒதுங்கும்.
6ஞானம் மனிதநேயமுள்ள ஆவி;
ஆயினும் இறைவனைப் பழிப்போரை
அது தண்டியாமல் விடாது.
கடவுள் அவர்களுடைய
உள்ளுணர்வுகளின் சாட்சி;
உள்ளத்தை உள்ளவாறு
உற்று நோக்குபவர்;
நாவின் சொற்களைக்
கேட்பவரும் அவரே.
7ஆண்டவரின் ஆவி
உலகை நிரப்பியுள்ளது;
அனைத்தையும் ஒருங்கிணைக்கும்
அந்த ஆவி
ஒவ்வொரு சொல்லையும் அறிகின்றது.
8நேர்மையற்றதைப் பேசுவோர்
மறைந்திருக்க முடியாது;
தண்டனை வேளையில்
நீதியினின்று தப்பமுடியாது.
9இறைப்பற்றில்லாதோரின் சூழ்ச்சிகள்
நுணுகி ஆராயப்படும்;
அவர்களுடைய சொற்கள்
ஆண்டவரின் காதுக்கு எட்டும்;
அவர்களுடைய நெறிகெட்ட செயல்கள்
கண்டிக்கப்படும்.
10விழிப்புடைய காது
அனைத்தையும் கேட்கின்றது.
முறையீடுகளின் முணுமுணுப்பு
செவிக்கு எட்டாமல் போவதில்லை.
11பயனற்ற முணுமுணுப்புப்பற்றி
எச்சரிக்கையாக இருங்கள்;
பழிச்சொல் கூறாது
உங்கள் நாவை அடக்குங்கள்.
ஏனெனில் மறைவாய்ப் பேசிய எதுவும்
விளைவின்றிப் போகாது.
பொய் சொல்லும் வாய்
ஆன்மாவைக் கொல்லும்.
12நெறிதவறிய வாழ்வால்
சாவை வரவேற்றுக்கொள்ளாதீர்கள்;
உங்கள் செயல்களாலேயே
அழிவை வருவித்துக்கொள்ளாதீர்கள்.
13சாவைக் கடவுள் உண்டாக்கவில்லை;
வாழ்வோரின் அழிவில்
அவர் மகிழ்வதில்லை.
14இருக்கவேண்டும் என்பதற்காகவே
அவர் அனைத்தையும் படைத்தார்.
உலகின் உயிர்கள் யாவும்
நலம் பயப்பவை;
அழிவைத் தரும் நஞ்சு எதுவும்
அவற்றில் இல்லை;
கீழுலகின் ஆட்சி மண்ணுலகில் இல்லை.
15நீதிக்கு இறப்பு என்பது இல்லை.
16இறைப்பற்றில்லாதவர்கள்
தங்கள் செயலாலும் சொல்லாலும்
இறப்பை வரவழைத்தார்கள்;
அதை நண்பனாகக் கருதி
அதற்காக ஏங்கினார்கள்;
அதனோடு
ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்;
அதனோடு தோழமை கொள்ள
அவர்கள் பொருத்தமானவர்களே.