எஸ்தர் (கி) முன்னுரை


பாரசீகர்களின் ஆட்சியில் (கி.மு.538-333) யூதர்கள் ஓரளவு உரிமையுடன் வாழ்ந்து, சில சலுகைகள் பெற்றிருந்தார்கள். இதைப் பின்னணியாகக் கொண்டு இயற்றப்பட்டதே ‘எஸ்தர்’ என்னும் இந்நூல்.

இது எபிரேய மொழியில் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம். சிறு சிறு நீக்கங்கள், சுருக்கங்களைத் தவிர, இதன் கிரேக்க பாடம் ஆறு பெரும் இணைப்புகளைக் கொண்டுள்ளது:

  1. மொர்தெக்காயின் கனவும் மன்னருக்கு எதிரான சூழ்ச்சி வெளிப்படுதலும் (1:1a-1r);
  2. யூதர்களைக் கொன்றொழிப்பதற்கான அரசாணை (3:13a-13g);
  3. மொர்தெக்காய், எஸ்தர் ஆகியோரின் மன்றாட்டு (4:17a-17z);
  4. எஸ்தர் மன்னரிடம் வேண்டுகோள் விடுத்தல் (5:1-2b);
  5. யூதர்களுக்குச் சலுகைகள் வழங்கும் அரசாணை (8:12a-12x);
  6. மொர்தெக்காயின் கனவு நனவாதல் (10:3a-3b).

இவை கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் எபிரேயப் பாடத்துடன் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். இந்தப் பதிப்பில் சிறப்புப் பெயர்களும் வசன எண் வரிசையும் கிரேக்க பாடத்தையொட்டி அமைந்துள்ளன.

எபிரேய பாடம் விளக்கும் நிகழ்ச்சிகளின் போக்கில் எவ்வகை மாற்றத்தையும் கிரேக்க இணைப்புகள் தோற்றுவிக்கவில்லை; எனினும் கடவுளைப் பற்றிய வெளிப்படையான குறிப்புகளை நூல் முழுவதும் புகுத்துவதன்மூலம், கடவுளின் பாதுகாப்பு எப்போதும் அவருடைய மக்களான இஸ்ரயேலருக்கு உண்டு என்னும் உண்மையைக் கோடிட்டுக் காட்டுகின்றன.

பாரசீகர்களிடமிருந்து யூதர் விடுதலை பெற்றதன் நினைவாகக் கொண்டாடப்பட்ட ‘பூரிம்’ திருவிழாவின் போது இந்நூல் பொதுவில் படிக்கப்பட்டது.

நூலின் பிரிவுகள்

  1. முகவுரை 1:1a - 1r
  2. எஸ்தரின் உயர்வு 1:1s - 2:18
  3. யூதர்களுக்கு எதிரான சூழ்ச்சி 2:19 - 5:14
  4. யூதர்களின் வெற்றி 6:1 - 9:32
  5. முடிவுரை 10:1 - 3l