ஒலோபெரினின் தலையை யூதித்து கொய்தல்

1பொழுது சாய்ந்தபோது ஒலோபெரினின் பணியாளர்கள் விரைவாக வெளியேறினார்கள். பகோவா அலுவலர்களைத் தன் தலைவன் முன்னிலையிலிருந்து வெளியே அனுப்பிவிட்டு, கூடாரத்துக்கு வெளியிலிருந்து தாழிட்டான். நீண்ட நேரம் நீடித்த விருந்தினால் களைப்புற்றிருந்ததால் அவர்களும் படுக்கச் சென்றார்கள்.
2யூதித்து கூடாரத்திற்குள் தனிமையாய் விடப்பட்டார். மது மயக்கத்தில் இருந்த ஒலோபெரின் தன் படுக்கைமேல் விழுந்து கிடந்தான்.
3யூதித்து தம் பணிப்பெண்ணிடம் படுக்கையறைக்கு வெளியே நிற்கும்படியும், நாள்தோறும் செய்துவந்தது போலத் தாம் வெளியே வரும்வரை காத்திருக்கும்படியும் கூறினார்; வேண்டுதல் செய்யத் தாம் புறப்பட விருப்பதாக அவளிடம் சொன்னார்; இதையே பகோவாவிடமும் தெரிவித்திருந்தார்.
4அனைவரும் அங்கிருந்து அகன்றனர்; சிறியோர்முதல் பெரியோர்வரை யாருமே படுக்கையறையில் விடப்படவில்லை. ஒலோபெரினின் படுக்கை அருகே யூதித்து நின்றுகொண்டு, “ஆண்டவரே, எல்லாம் வல்ல கடவுளே, எருசலேமின் மேன்மைக்காக இவ்வேளையில் நான் செய்யவிருப்பதைக் கண்ணோக்கும்.
5உமது உரிமைச் சொத்தாகிய இஸ்ரயேலுக்குத் துணை புரியவும், எங்களுக்கு எதிராக எழுந்துள்ள பகைவர்களை அழிக்கும்படி நான் செய்த சூழ்ச்சியைச் செயல்படுத்தவும் இதுவே தக்க நேரம்” என்று தமக்குள் சொல்லிக் கொண்டார்.
6பிறகு, ஒலோபெரினின் தலைப்பக்கம் இருந்த தூணுக்குச் சென்று, அதில் மாட்டியிருந்த அவனது வாளை யூதித்து எடுத்தார்;
7அவனது படுக்கையை அணுகி, அவனுடைய தலைமுடியைப் பிடித்துக்கொண்டு, “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே, எனக்கு இன்று வலிமை அளித்தருளும்” என்று வேண்டினார்;
8பிறகு தம் வலிமையெல்லாம் கொண்டு அவனது கழுத்தை இரு முறை வெட்டித் தலையைத் துண்டித்தார்;
9அவனது உடலைப் படுக்கையிலிருந்து கீழே தள்ளினார்; மேற்கவிகையைத் தூண்களிலிருந்து இறக்கினார்; சிறிது காலம்தாழ்த்தி வெளியே சென்று, ஒலோபெரினின் தலையைத் தம் பணிப்பெண்ணிடம் கொடுத்தார்.

யூதித்து பெத்தூலியாவுக்குத் திரும்புதல்

10பணிப்பெண் ஒலோபெரினின் தலையைத் தன் உணவுப் பைக்குள் வைத்துக்கொண்டாள். பிறகு அவர்கள் இருவரும் தங்கள் வழக்கம்போல வேண்டுதல் செய்ய ஒன்றாய் வெளியேறினார்கள்; பாளையத்தின் வழியாய்ச் சென்று, பள்ளத்தாக்கைச் சுற்றி, மலைமீது ஏறிப் பெத்தூலியாவுக்குப் போய், அதன் வாயிலை அடைந்தார்கள்.
11வாயிலில் காவல் புரிந்து கொண்டிருந்தவர்களை நோக்கி யூதித்து தொலையிலிருந்தே, “திறங்கள், வாயிலைத் திறங்கள். கடவுள், நம் கடவுள் நம்மோடு இருக்கிறார்; அவர் இஸ்ரயேலருக்குத் தம் வலிமைமையும் நம் பகைவர்களுக்கு எதிராய்த் தம் ஆற்றலையும் இன்று வெளிப்படுத்தியுள்ளார்” என்று கத்தினார்.
12நகர மக்கள் யூதித்துடைய குரலைக் கேட்டபோது, வாயிலுக்கு விரைவாக இறங்கிவந்து மூப்பர்களை அழைத்தார்கள்.
13சிறியோர்முதல் பெரியோர்வரை அனைவரும் சேர்ந்து ஓடிவந்தார்கள். யூதித்து வந்தசேர்ந்ததை அவர்களால் நம்ப முடியவில்லை. அவர்கள் வாயிலைத் திறந்து, அப்பெண்களை வரவேற்றார்கள்; தீ மூட்டி ஒளி உண்டாக்கி அவர்களைச் சூழ்ந்து நின்றார்கள்.
14யூதித்து அவர்களிடம் உரத்தகுரலில், “கடவுளை வாழ்த்துங்கள்; போற்றுங்கள், கடவுளைப் போற்றுங்கள். இஸ்ரயேல் இனத்தார் மீது அவர் தம் இரக்கத்தைப் பொழிந்துள்ளார். நம் பகைவர்களை என் கையால் இன்று இரவே அழித்துவிட்டார்” என்று அறிவித்தார்.
15பிறகு பையிலிருந்து ஒலோபெரினின் தலையை வெளியே எடுத்து அவர்களிடம் காட்டி, “இதோ, அசீரியப் படைத் தலைவன் ஒலோபெரினின் தலை! இதோ, மேற்கவிகை! இதன்கீழ்தான் அவன் குடிமயக்கத்தில் விழுந்து கிடந்தான். ஆண்டவர் ஒரு பெண்ணின் கையால் அவனை வெட்டி வீழ்த்தினார்.
16ஆண்டவர்மேல் ஆணை! நான் சென்ற பாதையில் என்னைக் காப்பாற்றியவர் அவரே. என் முகத்தோற்றமே அவனை வஞ்சித்து அழித்தது. நான் கறைபடவோ இழிவுறவோ அவன் என்னுடன் பாவம் செய்யவில்லை” என்றார்.
17மக்கள் யாவரும் பெரிதும் மலைத்துப்போயினர்; தலை குனிந்து கடவுளைத் தொழுது, “எங்கள் கடவுளே, நீர் போற்றி! நீரே இன்று உம் மக்களின் பகைவர்களை அழித்தொழித்தீர்” என்று ஒருவாய்ப்படப் போற்றினர்.
18பின்னர் ஊசியா யூதித்திடம் “மகளே, உலகில் உள்ள எல்லாப் பெண்களையும்விட நீ உன்னத கடவுளின் ஆசி பெற்றவள். விண்ணையும் மண்ணையும் படைத்த கடவுளாகிய ஆண்டவர் போற்றி! அவரே நம் பகைவர்களின் தலைவனது தலையை வெட்டி வீழ்த்த உன்னை வழிநடத்தியிருக்கிறார்.
19கடவுளின் ஆற்றலை நினைவுகூரும் மாந்தரின் உள்ளத்திலிருந்து உனது நம்பிக்கை ஒருபோதும் நீங்காது.
20இதனால் இறவாப் புகழ் பெறக் கடவுள் உனக்கு அருள்வாராக; நலன்களால் உன்னை நிரப்புவாராக; ஏனெனில், நம் மக்களினத்தார் ஒடுக்கப்பட்டபோது நீ உன் உயிரைப் பணயம் வைத்தாய்; நம் கடவுள் திருமுன் நேர்மையாக நடந்து, நமக்கு வரவிருந்த பேரழிவைத் தடுத்துவிட்டாய்” என்றார். அதற்கு மக்கள் அனைவரும், “அவ்வாறே ஆகட்டும், அவ்வாறே ஆகட்டும்” என்று உரைத்தனர்.