புத்தாண்டு விழாப் படையல்கள்
(லேவி 23:23-25)

1ஏழாம் மாதம் முதல் நாளன்று உங்களுக்குத் திருப்பேரவை இருக்கும்; நீங்கள் கடினவேலை ஏதும் செய்யக்கூடாது. உங்களுக்காக எக்காளங்கள் முழங்கும் நாள் அது.
2ஆண்டவருக்கு உகந்த நறுமணமான எரிபலியை நீங்கள் செலுத்த வேண்டும். அதற்கு வேண்டியவை; இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் ஏழு; இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும்.
3அத்துடன் உணவுப் படையலாக எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு, காளைக்காக ஆறு படியும், ஆட்டுக் கிடாய்க்காக நான்கு படி அளவில் இருக்கும்.
4ஏழு ஆட்டுக்குட்டிகள் ஒவ்வொன்றுக்கும் இரண்டுபடி அளவாக இருக்கும்.
5மேலும், உங்களுக்குக் கறை நீக்கம் செய்யப் பாவம்போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக் கிடாய் ஒன்று தேவை.
6இவை தவிர மாதந்தோறும் அளிக்கும் எரிபலி, அதற்குரிய உணவுப் படையல், எந்நாளும் செலுத்தும் எரிபலி, அதற்குரிய நீர்மப் படையல் ஆகியவை அவர்கள் முறைமையின்படி ஆண்டவருக்கு உகந்த நறுமணமான நெருப்புப் பலியாக அமையும்.

பாவம் போக்கும் நாளுக்கான படையல்
(லேவி 23:26-32)

7இந்த ஏழாம் மாதம் பத்தாம் நாளில் உங்கள் திருப்பேரவை கூடும்; அப்போது உங்களை நீங்களே வருத்திக் கொள்ளுங்கள்; நீங்கள் எந்த வேலையும் செய்யாதிருங்கள்.
8ஆண்டவருக்கு உகந்த நறுமணமான எரிபலியொன்றை நீங்கள் அவருக்குச் செலுத்துங்கள். அதற்குத் தேவையானவை; இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் ஏழு; இவை பழுதற்றவையாய் இருக்கவேண்டும்.
9அத்துடன் உணவுப்படையலாக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவு காளைக்காக ஆறுபடியும் ஆட்டுக்கிடாய்க்காக நான்குபடி அளவில் இருக்கும்.
10ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றுக்கும் இரண்டுபடி என்ற அளவில் இருக்கும்.
11மேலும், கறை நீக்கத்திற்கான பாவம் போக்கும் பலி, எந்நாளும் செலுத்தும் எரிபலி, அதற்குரிய உணவுப் படையல், அதற்குரிய நீர்மப்படையல் ஆகியவை தவிரப் பாவம் போக்கும் பலியாக ஒரு வெள்ளாட்டுக் கிடாய் செலுத்துவாய்.

கூடாரத் திருநாள் படையல்கள்
(லேவி 23:23-44)

12ஏழாம் மாதம் பதினைந்தாம் நாளில் உங்கள் திருப்பேரவை கூடும்; நீங்கள் கடின வேலை ஏதும் செய்யக்கூடாது; ஏழு நாள்கள் நீங்கள் ஆண்டவருக்கு விழா எடுக்க வேண்டும்.
13ஆண்டவருக்கு உகந்த நறுமணமான எரிபலியாகவும், நெருப்புப் பலியாகவும் நீங்கள் செலுத்த வேண்டியவை; இளங்காளைகள் பதின் மூன்று, ஆட்டுக்கிடாய்கள் இரண்டு, ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் பதினான்கு; இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும்.
14அத்துடன் உணவுப் படையலான எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு, பதின்மூன்று காளைகளில் ஒவ்வொன்றுக்கும் ஆறு படி இரண்டு ஆட்டுக்கிடாய்களில் ஒவ்வொன்றுக்கும் நான்குபடி பங்கு.
15பதினான்கு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்கும் இரண்டு படி அளவில் இருக்கும்.
16மேலும், எந்நாளும் செலுத்தும் எரிபலி, அதற்குரிய உணவுப் படையல், அதற்குரிய நீர்மப் படையல் ஆகியவை தவிரப் பாவம் போக்கும் பலியாகவும் ஒரு வெள்ளாட்டுக்கிடாய் செலுத்துவாய்.
17இரண்டாம் நாள்; இளங்காளைகள் பன்னிரண்டு, ஆட்டுக்கிடாய்கள் இரண்டு, ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் பதினான்கு; இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும்.
18அவற்றுடன் முறைமைப்படி காளைகள், ஆட்டுக் கிடாய்கள், ஆட்டுக்குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்கேற்ப அவற்றிற்குரிய உணவுப் படையல், நீர்மப் படையல்கள்.
19மேலும், எந்நாளும் செலுத்தும் எரிபலி, அதற்குரிய உணவுப் படையல், அவற்றுக்குரிய நீர்மப் படையல் ஆகியவை தவிரப் பாவம்போக்கும் பலியாகவும் ஒரு வெள்ளாட்டுக் கிடாய்.
20மூன்றாம் நாள்; காளைகள் பதினொன்று, ஆட்டுக் கிடாய்கள் இரண்டு, ஒரு வயதுடையனவும் பழுதற்றனவுமான ஆட்டுக்குட்டிகள் பதினான்கு; இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும்.
21அவற்றுடன் முறைமைப்படி காளைகள், ஆட்டுக்கிடாய்கள், ஆட்டுக்குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்கேற்ப அவற்றுக்குரிய படையல், நீர்மப் படையல்கள்.
22மேலும், எந்நாளும் செலுத்தும் எரிபலி, அதற்குரிய உணவுப்படையல், நீர்மப் படையல் ஆகியவை தவிரப் பாவம் போக்கும் பலியாகவும் ஒரு வெள்ளாட்டுக் கிடாய்.
23நான்காம் நாள்; காளைகள் பத்து, ஆட்டுக்கிடாய்கள் இரண்டு, ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் பதினான்கு; இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும்.
24அவற்றுடன் முறைமைப்படி காளைகள், ஆட்டுக்கிடாய்கள், ஆட்டுக்குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்கேற்ப அவற்றுக்குரிய உணவுப் படையல், நீர்மப் படையல்கள்;
25மேலும், எந்நாளும் செலுத்தும் எரிபலி, அதற்குரிய உணவுப் படையல், அதன் நீர்மப் படையல் ஆகியவை தவிரப் பாவம் போக்கும் பலியாகவும் ஒரு வெள்ளாட்டுக்கிடாய்.
26ஐந்தாம் நாள்; காளைகள் ஒன்பது, ஆட்டுக்கிடாய்கள் இரண்டு, ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் பதினான்கு; இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும்;
27அவற்றுடன் முறைமைப்படி காளைகள், ஆட்டுக்கிடாய்கள், ஆட்டுக்குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்கேற்ப அவற்றுக்குரிய நீர்மப் படையல்கள்.
28மேலும், எந்நாளும் செலுத்தும் எரிபலி, அதற்குரிய உணவுப் படையல், நீர்மப் படையல் ஆகியவை தவிர பாவம் போக்கும் பலியாகவும் ஒரு வெள்ளாட்டுக் கிடாய்.
29ஆறாம் நாள்; காளைகள் எட்டு, ஆட்டுக்கிடாய்கள் இரண்டு, ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் பதினான்கு; இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும்.
30அவற்றுடன் முறைமைப்படி காளைகள், ஆட்டுக்கிடாய்கள், ஆட்டுக்குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்கேற்ப அவற்றுக்குரிய உணவுப்படையல், நீர்மப் படையல்கள்,
31மேலும், எந்நாளும் செலுத்தும் எரிபலி, அதற்குரிய அதன் உணவுப் படையல், நீர்மப் படையல் ஆகியவை தவிர பாவம்போக்கும் பலியாகவும் ஒரு வெள்ளாட்டுக்கிடாய்.
32ஏழாம் நாள்; காளைகள் ஏழு, ஆட்டுக்கிடாய்கள் இரண்டு, ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் பதினான்கு; இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும்.
33அவற்றுடன் முறைமைப்படி காளைகள், ஆட்டுக்கிடாய்கள், ஆட்டுக்குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்கேற்ப அவற்றுக்குரிய உணவுப் படையல், நீர்மப் படையல்கள்.
34மேலும், எந்நாளும் செலுத்தம் எரிபலி, அதற்குரிய உணவுப் படையல், நீர்மப் படையல் ஆகியவை தவிர பாவம் போக்கும் பலியாகவும் ஒரு வெள்ளாட்டுக் கிடாய்.
35எட்டாம் நாளன்று சிறப்புக் கூட்டம் நடைபெறும்; நீங்கள் கடின வேலை ஏதும் செய்யக்கூடாது.
36ஆண்டவருக்கு உகந்த நறுமணமான எரிபலியாகவும், நெருப்புக் பலியாகவும் நீங்கள் செலுத்த வேண்டுபவை; காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் ஏழு; இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும்.
37அவற்றுடன் முறைமைப்படி காளை, ஆட்டுக்குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்கேற்ப உணவுப் படையல், அவற்றுக்குரிய நீர்மப் படையல்கள்;
38மேலும், எந்நாளும் செலுத்தும் எரிபலி, அதற்குரிய உணவுப் படையல், நீர்மப்படையல் ஆகியவை தவிரப் பாவம்போக்கும் பலியாகவும் ஒரு வெள்ளாட்டுக்கிடாய்.
39நியமிக்கப்பட்ட திருநாள்களில் நீங்கள் ஆண்டவருக்குப் படைக்க வேண்டியவை இவையே. உங்கள் பொருத்தனைகள், தன்னார்வப் படையல்கள், எரிபலிகள், உணவுப் படையல்கள், நீர்மப் படையல்கள், நல்லுறவுப் பலிகள் ஆகியவை நீங்கலாகச் செய்ய வேண்டியவை இவையே.
40ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் மோசே இஸ்ரயேல் மக்களுக்குச் சொன்னார்.

29:7-11 லேவி 16:29-34.