எருசலேமின் பாவமும் மீட்பும்

1கலகம் செய்ததும் தீட்டுப்பட்டதும்

மக்களை ஒடுக்கியதுமான நகருக்கு

ஐயோ கேடு!

2எந்தச் சொல்லுக்கும் அவள்

செவி சாய்ப்பதில்லை;

கண்டிப்புரையை அவள் ஏற்பதுமில்லை;

ஆண்டவர்மேல் அவள்

நம்பிக்கை வைப்பதில்லை;

தன் கடவுளை அண்டி வருவதுமில்லை.

3அந்நகரின் தலைவர்கள்

கர்ச்சனை செய்யும் சிங்கங்கள்;

அதன் நீதிபதிகள்,

மாலையில் கிடைப்பதை

காலைவரை வைத்திராத ஓநாய்கள்.

4அதன் இறைவாக்கினர்

வீண் பெருமை பேசும்

வஞ்சகமிக்க மனிதர்;

அதன் குருக்கள்

புனிதமானதைக் களங்கப்படுத்தித்

திருச்சட்டத்தை உதறித் தள்ளுபவர்கள்.

5அதனுள் இருக்கும் ஆண்டவரோ

நீதியுள்ளவர்;

அவர் கொடுமை செய்யாதவர்;

காலைதோறும் அவர்

தமது தீர்ப்பை வழங்குகின்றார்;

வைகறைதோறும் அது

தவறாமல் வெளிப்படும்;

ஆனால் கொடியவனுக்கு

வெட்கமே இல்லை.

6வேற்றினத்தாரை நான்

வெட்டி வீழ்த்தினேன்;

அவர்களுடைய கோட்டைகளைத்

தகர்த்தெறிந்தேன்;

அவர்களுடைய தெருக்களை

வெறுமையாக்கினேன்;

அவற்றில் நடந்துசெல்பவர்

எவருமில்லை;

யாரும் இராதபடி, எவரும் குடியிராதபடி

அவர்களுடைய நகர்கள்

பாழடைந்து போயின.

7“உறுதியாக எனக்கு நீ அஞ்சி நடப்பாய்;

எனது கண்டிப்புரையை

ஏற்றுக் கொள்வாய்;

நான் வழங்கிய

தண்டனைத் தீர்ப்புகளை எல்லாம்

நீ மறக்கமாட்டாய்” என்று

நான் எண்ணினேன்;

அவர்களோ தங்கள் செயல்களைச்

சீர்கேடாக்க

இன்னும் மிகுதியாய் ஆவல் கொண்டனர்.

8ஆதலால் ஆண்டவர்

இவ்வாறு கூறுகின்றார்:

“நான் குற்றம் சாட்டுவதற்கு

எழுந்திடும் அந்த நாளுக்காகக் காத்திரு;

வேற்றினத்தாரை ஒன்று சேர்த்து,

அரசுகளையும் ஒன்று திரட்டி,

என் கடும்சினத்தையும்

கோபத்தீயின் கொடுமை முழுவதையும்,

அவர்கள் மேல் கொட்டிவிடத்

திட்டமிட்டுள்ளேன்;

ஏனெனில், என் வெஞ்சினத் தீக்கு

உலகெல்லாம் இரையாகும்.

9அக்காலத்தில் நான்

மக்களினங்களுக்குத்

தூய நாவினை அருள்வேன்;

அப்போது அவர்கள் அனைவரும்

ஆண்டவரின் பெயரால்

மன்றாடி ஒருமனப்பட்டு

அவருக்குப் பணிபுரிவார்கள்.

10எத்தியோப்பியாவின் ஆறுகளுக்கும்

அப்பாலிருந்து என்னை மன்றாடுவோர் —

சிதறுண்ட என் மக்கள் —

எனக்குக் காணிக்கை

கொண்டு வருவார்கள்.

11எனக்கு எதிராக எழுந்து

நீ செய்த குற்றங்களை முன்னிட்டு

அந்நாளில் அவமானம் அடையமாட்டாய்;

ஏனெனில், அப்பொழுது

இறுமாப்புடன் அக்களித்திருப்போரை

உன்னிடமிருந்து அகற்றிவிடுவேன்;

இனி ஒருபோதும் எனது திருமலையில்

செருக்கு அடையமாட்டாய்.

12ஏழை எளியோரை உன் நடுவில்

நான் விட்டுவைப்பேன்;

அவர்கள் ஆண்டவரின் பெயரில்

நம்பிக்கை கொள்வார்கள்.

13இஸ்ரயேலில் எஞ்சியோர்

கொடுமை செய்யமாட்டார்கள்;

வஞ்சகப் பேச்சு

அவர்களது வாயில் வராது;

அச்சுறுத்துவார் யாருமின்றி,

அவர்கள் மந்தைபோல் மேய்ந்து

இளைப்பாறுவார்கள்.”

மகிழ்ச்சிப் பாடல்

14மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி;

இஸ்ரயேலே! ஆரவாரம் செய்;

மகளே எருசலேம்!

உன் முழு உள்ளத்தோடு

அகமகிழ்ந்து அக்களி.

15ஆண்டவர் உன் தண்டனைத் தீர்ப்பைத்

தள்ளிவிட்டார்;

உன் பகைவர்களை அப்புறப்படுத்தினார்;

இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர்

உன் நடுவில் இருக்கின்றார்;

நீ இனி எந்தத் தீங்கிற்கும் அஞ்சமாட்டாய்.

16அந்நாளில் எருசலேமை நோக்கி

இவ்வாறு கூறப்படும்:

“சீயோனே, அஞ்சவேண்டாம்;

உன் கைகள் சோர்வடைய வேண்டாம்.

17உன் கடவுளாகிய ஆண்டவர்

உன் நடுவில் இருக்கின்றார்;

அவர் மாவீரர்; மீட்பு அளிப்பவர்;

உன்பொருட்டு அவர் மகிழ்ந்து

களிகூருவார்;

தம் அன்பினால் உனக்குப்

புத்துயிர் அளிப்பார்;

உன்னைக் குறித்து

மகிழ்ந்து ஆடிப்பாடுவார்.

18அது திருவிழாக் காலம்போல் இருக்கும்.

உனது துன்பத்தை அகற்றிவிட்டேன்;

ஆகவே, இனி நீ இழிவடையமாட்டாய்.

19இதோ!, உன்னை ஒடுக்கியவர்களை

அந்நாளில் நான் தண்டிப்பேன்;

கால் ஊனமுற்றவர்களைக்

காப்பாற்றுவேன்;

ஒதுக்கப்பட்டவர்களை ஒன்று சேர்ப்பேன்;

அவமானமுற்ற அவர்களை

உலகெங்கும் பெயரும் புகழும்

பெறச்செய்வேன்.

20அக்காலத்தில் உங்களை

ஒன்றாய்க் கூட்டிச்சேர்த்து

உங்கள் தாய்நாட்டுக்கு

அழைத்து வருவேன்;

ஆம், உங்கள் கண்முன்பாகவே

உங்களை முன்னைய

நன்னிலைக்கு உயர்த்தி,

உலகின் எல்லா மக்களிடையேயும்

நீங்கள் பெயரும் புகழும்

பெறுமாறு செய்வேன்”

என்கிறார் ஆண்டவர்.


3:13 திவெ 14:5.