ஆண்டவரின் தீர்ப்புகள்

1பலிபீடத்தருகில் ஆண்டவர் நிற்பதைக் கண்டேன். அவர் சொன்னார்:

தூணின் முகட்டை இடித்துப் போடு;

மேல்தளம் ஆட்டம் கொடுக்கட்டும்;

மக்கள் அனைவருடைய தலையிலும்

அதை உடைத்துத் தள்ளு;

அவர்களுள் எஞ்சியிருப்போரை

நான் வாளால் கொன்றுபோடுவேன்;

அவர்களில் எவரும்

ஓடிப்போக மாட்டார்;

ஒருவர் கூடத்

தப்பிப் பிழைக்கவும் மாட்டார்.

2பாதாளம் வரையில்

அவர்கள் இறங்கினாலும்

அங்கிருந்தும் என் கை

அவர்களை இழுத்து வரும்;

வான் மட்டும் அவர்கள் ஏறிப்போனாலும்,

அங்கிருந்தும் நான்

அவர்களைப் பிடித்து வருவேன்;

3கர்மேல் மலையுச்சியில் .

ஓடி ஒளிந்துகொண்டாலும்,

அவர்களைத் தேடிப் பிடித்து

அங்கிருந்து கொண்டு வருவேன்;

என் கண்களுக்குத் தப்பி

ஆழ்கடலில் மறைந்தாலும்,

அங்கு அவர்களைக் கடிக்கும்படி

பாம்புக்குக் கட்டளையிடுவேன்.

4தங்கள் பகைவர்முன் அடிமைகளாய்க்

கொண்டு போகப்பட்டாலும்,

அங்கே அவர்களைக் கொல்லும்படி

வாளுக்கு ஆணையிடுவேன்;

அவர்களுக்கு நன்மை செய்யாது

தீங்கு செய்வதிலேயே

நான் கண்ணாயிருப்பேன்.

5படைகளின் கடவுளாகிய

ஆண்டவர் தொட

மண்ணுலகம் பாகாய் உருகுகின்றது;

அதில் வாழ்வோர் அனைவரும்

புலம்புகின்றனர்:

நாடு முழுவதும்

நைல்நதியின் வெள்ளமென

சுழற்றியெறியப்படுகின்றது;

எகிப்து நாட்டின் நைல்நதிபோல்

அலைக்கழிக்கப்பட்டு அடங்குகின்றது.

6அவர் வானத்தில்

தம் மேலறைகளைக் கட்டுகின்றார்;

வானின் வளைவை

நிலத்தில் அடித்தளமிட்டு

நாட்டுகின்றார்;

கடல்களின் நீரை முகந்தெடுத்து

நிலத்தின்மேல் பொழிகின்றார்;

“ஆண்டவர்” என்பது அவரது பெயராம்.

இஸ்ரயேலுக்குத் தனிச் சலுகை இல்லை

7“இஸ்ரயேல் மக்களே,

நீங்கள் எனக்கு

எத்தியோப்பியரைப்

போன்றவர்கள்தானே?

இஸ்ரயேல் மக்களை

எகிப்து நாட்டினின்றும்,

பெலிஸ்தியரைக் கப்தோரிலிருந்தும்,

சிரியரைக் கீரிலிருந்தும்

நான் அழைத்து வரவில்லையா?”

என்கிறார் ஆண்டவர்.

8தலைவராகிய ஆண்டவரின் கண்கள்

பாவம் செய்யும் அரசை

உற்றுப் பார்க்கின்றன;

“மண்ணுலகில் இராதபடி

அதை நான் அழித்து விடுவேன்.

ஆயினும், யாக்கோபின் வீட்டாரை

நான் முற்றிலும் அழிக்கமாட்டேன்”

என்கிறார் ஆண்டவர்.

9நான் ஆணை பிறப்பிப்பேன்;

எல்லா மக்களினங்கள் நடுவிலும்

இஸ்ரயேல் வீட்டாரைச்

சல்லடையில்

தானியத்தைச் சலிப்பதுபோலச்

சலிக்கப் போகின்றேன்;

ஆயினும், கோதுமை மணி ஒன்றும்

தரையில் விழாது.

10“தீமை எங்களை அணுகாது,

எங்கள்மேல் வராது” என்று

என் மக்களுள்

எந்தப் பாவிகள் கூறுகின்றார்களோ,

அவர்கள் அனைவரும்

வாளால் மடிவார்கள்.

இஸ்ரயேலின் மறுவாழ்வு

11“அந்நாள்களில்

விழுந்துகிடக்கும்

தாவீதின் கூடாரத்தை

மீண்டும் உயர்த்துவேன்.

அதிலுள்ள கிழிசல்களைப்

பழுதுபார்த்துச்

சிதைந்தவற்றைச் சீர்படுத்திப்

பண்டை நாளில் இருந்ததுபோல்

மீண்டும் கட்டியெழுப்புவேன்.

12அப்பொழுது,

ஏதோமில் எஞ்சியிருப்போரையும்

எனது பெயரைத் தாங்கியிருக்கும்

பிற இனத்தார் அனைவரையும்

அவர்கள் தங்கள்

உடைமை ஆக்கிக் கொள்வார்கள்,”

என்கிறார்

இதைச் செயல்படுத்தும் ஆண்டவர்.

13“இதோ! நாள்கள் வரப்போகின்றன;

அப்போது,

அறுவடை செய்வோரை உழுவோரும்,

கனி பிழிவோரை விதைப்போரும்

தொடர்ந்து முன்னேறுவர்;

மலைகள் இனிய இரசத்தைப் பொழியும்;

குன்றுகள்தோறும்

அது வழிந்தோடும்,”

என்கிறார் ஆண்டவர்.

14“என் மக்களாகிய இஸ்ரயேலை

முன்னைய நன்னிலைக்குக்

கொண்டுவருவேன்;

அவர்கள் பாழடைந்த நகர்களைத்

திரும்பக் கட்டி

அவற்றில் குடியேறுவார்கள்;

திராட்சைத் தோட்டங்களை அமைத்து

அவற்றின் கனிரசத்தை

அருந்துவார்கள்.

பழத்தோட்டங்கள் அமைத்து

அவற்றின் கனிகளை உண்பார்கள்.

15அவர்களைத் தங்கள் நாட்டில்

மீண்டும் நான் வேரூன்றச் செய்வேன்;

நான் அவர்களுக்கு அளித்திருக்கும்

நாட்டிலிருந்து

இனி ஒருபோதும் அவர்கள்

பிடுங்கப்படமாட்டார்கள்,” என்கிறார்

உங்கள் கடவுளாகிய ஆண்டவர்.


9:11-12 திப 15:16-18.