2“உலகத்திலுள்ள எல்லா
மக்களினங்களுக்குள்ளும்
உங்களைத்தான் நான் சிறப்பாக
அறிந்துகோண்டேன்;
ஆதலால், உங்கள்
தீச்செயல் அனைத்திற்காகவும்
நான் உங்களைத் தண்டிப்பேன்.
3தங்களுக்குள் உடன்பாடு இல்லாமல்
இருவர் சேர்ந்து நடப்பார்களோ?
4இரை அகப்படாமல் இருக்கும்போது
காட்டில் சிங்கம் கர்ச்சிக்குமோ?
ஒன்றையும் பிடிக்காமல் இருக்கையிலேயே
குகையிலிருந்து இளஞ்சிங்கம்
முழக்கம் செய்யுமோ?
5வேடன் தரையில்
வலைவிரிக்காதிருக்கும்போதே
பறவை கண்ணியில்
சிக்கிக்கொள்வதுண்டோ?
ஒன்றுமே சிக்காதிருக்கும்போது
பொறி தரையைவிட்டுத்
துள்ளுவதுண்டோ?
6நகரில் எக்காளம் ஊதப்படுமானால்,
மக்கள் அஞ்சி நடுங்காமல்
இருப்பார்களோ?
ஆண்டவர் அனுப்பவில்லையெனில்,
நகருக்குத் தீமை தானாக வந்திடுமோ?
7தம் ஊழியர்களாகிய
இறைவாக்கினர்களுக்குத்
தம் மறைபொருளை வெளிப்படுத்தாமல்,
தலைவராகிய ஆண்டவர்
ஏதும் செய்வதில்லை.
8சிங்கம் கர்ச்சனை செய்கின்றது;
அஞ்சி நடுங்காதவர் எவர்?
தலைவராகிய ஆண்டவர் பேசியிருக்க,
இறைவாக்கு உரைக்காதவர் எவர்?
9“அசீரியாவின் கோட்டைகள் மேலும்
எகிப்து நாட்டின் கோட்டைகள் மேலும்
நின்றுகொண்டு
இவ்வாறு பறைசாற்று;
சமாரியாவின் மலைகள்மேல்
வந்து கூடுங்கள்;
அங்கு ஏற்படும் குழப்பங்களையும்
நடக்கும் கொடுமைகளையும்
பாருங்கள்.
10நலமானதைச் செய்ய
அவர்களுக்குத் தெரிவ தில்லை”
என்கிறார் ஆண்டவர்.
“அவர்கள் தங்கள் கோட்டைகளை
வன்முறைகளாலும்
கொள்ளைகளாலும் நிரப்புகிறார்கள்.”
11ஆகையால், தலைவராகிய ஆண்டவர்
கூறுவது இதுவே:
“பகைவன் ஒருவன் வந்து
நாட்டைச் சூழ்ந்து கொள்வான்;
அரண்களையெல்லாம்
தரைமட்டமாக்குவான்;
உங்கள் கோட்டைகள்
கொள்ளையிடப்படும்.
12ஆண்டவர் கூறுவது இதுவே:
“சிங்கத்தின் வாயிலிருந்து
இடையன் தன் ஆட்டின்
இரண்டு கால்களையோ
காதின் ஒருபகுதியையோ
பிடுங்கி எடுப்பது போல,
சமாரியாவில் குடியிருந்து,
பஞ்சணைகள்மீதும் மெத்தைகள்மீதும்
சாய்ந்து இன்புறும் இஸ்ரயேல் மக்கள்
விடுவிக்கப்படுவதும் இருக்கும்.”
13“கேளுங்கள்;
யாக்கோபின் வீட்டாருக்கு எதிராகச்
சான்று பகருங்கள்,”
என்கிறார் தலைவரும்
படைகளின் கடவுளுமாகிய ஆண்டவர்.
14“இஸ்ரயேலை
அதன் குற்றங்களுக்காகத்
தண்டிக்கும் நாளில்,
பெத்தேலில் உள்ள
பலிபீடங்களை அழிப்பேன்;
பலிபீடத்தின் கொம்புகள்
வெட்டப்பட்டுத் தரையில் விழும்.
15குளிர்கால வேனிற்கால மாளிகைகளை
இடித்துத் தள்ளுவேன்;
தந்தத்தாலான வீடுகள்
அழிந்து போகும்;
மாபெரும் இல்லங்களும்
பாழாய்ப் போகும்,”
என்கிறார் ஆண்டவர்.