சமய பெருவிழாக்கள்

1ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
2“இஸ்ரயேல் மக்களிடம் நீ இவ்வாறு கூறு: நீங்கள் சபையாகக் கூடிப் புனிதமாய்க் கடைப்பிடிக்க வேண்டிய ஆண்டவருக்குரிய பண்டிகை நாள்களாவன:
3ஆறு நாள்கள் நீங்கள் வேலை செய்யலாம். ஏழாம் நாளோ முழுமையாக ஓய்வெடுக்கும் நாள்; புனித சபை கூடும் நாள். அன்று நீங்கள் ஒரு வேலையும் செய்யவேண்டாம். நீங்கள் வாழும் இடமெங்கும் அது ஆண்டவருக்கான ஓய்வுநாள்.
4நீங்கள் சபையாகக் கூடிக் குறிப்பிட்ட நாள்களில் புனிதமாய்க் கடைப்பிடிக்க வேண்டிய ஆண்டவரின் பண்டிகை நாள்களாவன;

பாஸ்காவும் புளிப்பற்ற அப்பமும்
(எண் 28:16-25)

5முதல் மாதம் பதினான்காம் நாள் மாலையில் ஆண்டவருக்கான பாஸ்கா.
6அந்த மாதம் பதினைந்தாம் நாள் ஆண்டவருக்கான புளிப்பற்ற அப்பப் பண்டிகை; ஏழுநாள் புளிப்பற்ற அப்பங்களை உண்பீர்கள்.
7பண்டிகையின் முதல் நாள் சபை கூடும் புனித நாள். அன்று வேலை செய்யலாகாது.
8ஏழுநாளும் ஆண்டவருக்கு எரிபலி செலுத்த வேண்டும். ஏழாம் நாள் சபை கூடும் புனித நாள். அன்று வேலை செய்யலாகாது.
9ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
10இஸ்ரயேல் மக்களிடம் நீ சொல்ல வேண்டியது; நான் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டில் நீங்கள் வந்து அறுவடை செய்யும் போது அறுவடையின் முதல் விளைச்சலான ஒரு கதிர்க் கட்டினைக் குருவிடம் கொண்டுவர வேண்டும்.
11உங்கள் சார்பாக ஏற்கத் தக்கதாக, குரு அந்தத் தானியக் கதிர்க்கட்டினை, ஓய்வு நாளுக்குப் பின்வரும் அடுத்த நாளில் ஆண்டவரின் திருமுன் ஆரத்திப் பலியாக்குவார்.
12அதனை ஆரத்தியாக காட்டுகிற அன்று, ஆண்டவருக்கு எரிபலியாக ஓராண்டான பழுதற்ற ஆட்டுக்குட்டி ஒன்றைச் செலுத்துங்கள்.
13உணவுப்படையலாக இருபதுபடி* அளவுள்ள மரக்காலில் பத்தில் இரண்டு பங்கான மிருதுவான மாவை எண்ணெயில் பிசைந்து ஆண்டவர் விரும்பும் நறுமணமிக்க எரிபலியாகச் செலுத்துங்கள். திராட்சைப் பழ இரசத்தை நீர்மப் படையலாகப் படையுங்கள்.
14உங்கள் கடவுளின் காணிக்கையை நீங்கள் கொண்டுவரும் அந்த நாள்வரை, அப்பமோ, சுட்ட கதிரோ, பச்சைக் கதிரோ, உண்ணலாகாது. இது நீங்கள் வாழும் இடமெங்கும் உங்களுக்குப்பின் வரும் உங்கள் வழிமரபினரும் கடைப்பிடிக்க வேண்டிய என்றுமுள நியமம் ஆகும்.

அறுவடைப் பெருவிழா
(எண் 28:26-31)

15ஆரத்திப் பலியாகக் கதிர்க்கட்டினைக் கொண்டுவந்த ஓய்வு நாளின் மறு நாளிலிருந்து ஏழு வாரங்களைக் கணக்கிடவும்.
16ஏழாம் ஓய்வு நாளுக்கு மறுநாளான ஐம்பதாம் நாளில் ஆண்டவருக்குப் புது உணவுப் படையலைச் செலுத்துங்கள்.
17நீங்கள் வாழும் இடங்களிலிருந்து இருபது படி அளவுள்ள ஒரு மரக்கால் மிருதுவான மாவில் பத்தில் இரு பகுதி எடுத்து, புளிப்பேற்றி இரண்டு அப்பங்களைச் சுட்டு, அவற்றை ஆண்டவருக்கு முதற்பலனின் ஆரத்திப் பலியாகக் கொண்டு வாருங்கள்.
18இந்த அப்பத்துடன், ஓராண்டான பழுதற்ற ஏழு ஆட்டுக் குட்டிகளையும், ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக் கிடாய்களையும். உணவுப் படையலோடும் நீர்மப் படையலோடும் ஆண்டவருக்கு எரிபலியாகச் செலுத்துங்கள். இது ஆண்டவருக்கு உகந்த நறுமணமிக்க நெருப்புப்பலியாக இருக்கும்.
19வெள்ளாட்டுக் கிடாய்களில் ஒன்றைப் பாவம் போக்கும் பலியாகவும், ஓராண்டான இரண்டு ஆட்டுக் குட்டிகளை நல்லுறவுப் பலியாகவும் செலுத்துங்கள்.
20இந்த இரண்டு ஆட்டுக்குட்டிகளை முதற்பலனான அப்பத்துடன் குரு ஆண்டவர் திருமுன் ஆரத்திப் பலியாக்குவார். அவை ஆண்டவருக்குத் தூயதான காணிக்கைகள்; குருவுக்குரியவை.
21அந்நாளை திருப்பேரவை நாளாக அறிவியுங்கள். எத்தகைய வேலையும் அன்று செய்யலாகாது. இது நீங்கள் வாழும் இடமெங்கும் உங்கள் தலைமுறைதோறும் கடைப்பிடிக்க வேண்டிய என்றுமுள நியமம் ஆகும்.
22உங்கள் நாட்டில் நீங்கள் அறுவடை செய்யும்போது உங்கள் வயலோரத்தில் இருப்பதை முற்றிலும் அறுத்துவிடாமலும் சிந்திக்கிடக்கும் கதிர்களைப் பொறுக்காமலும் இருங்கள். அவற்றை எளியவருக்கும் அந்நியருக்கும் விட்டுவிடுங்கள். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!

புத்தாண்டுப் பெருவிழா
(எண் 29:1-6)

23ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
24நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறு: ஏழாம் மாதம் முதல்நாள் உங்களுக்கு ஓய்வு நாள்; அதைத் திருப்பேரவையாகக் கூடி எக்காளம் ஊதிக் கொண்டாடுங்கள்.
25எத்தகைய வேலையும் அன்று செய்யாமல் ஆண்டவருக்கு நெருப்புப் பலி செலுத்துங்கள்.

பாவக் கழுவாய் நிறைவேற்றும் நாள்
(எண் 29:7-11)

26ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
27அந்த ஏழாம் மாதம் பத்தாம் நாள், பாவக் கழுவாய் நாள்; புனித சபை கூடும் நாள். அன்று நீங்கள் உங்களையே தாழ்த்திக்கொண்டு, ஆண்டவருக்கு எரிபலி செலுத்த வேண்டும்.
28அந்த நாளில் எத்தகைய வேலையும் செய்யலாகாது. ஏனெனில், அது கடவுளாகிய ஆண்டவரின் திருமுன் உங்களுக்காகப் பாவக்கழுவாய் நிறைவேற்றும் நாள்.
29அந்த நாளில் தம்மைத் தாழ்த்திக்கொள்ளாத எந்த மனிதரும் தம் இனத்தில் இராதபடி அழிக்கப்படுவார்.
30அந்த நாளில் யாராவது ஏதாவது வேலை செய்தால், அவரை அவர் இனத்திலிருந்து அழித்துவிடுவேன்.
31நீங்கள் எந்த வேலையும் செய்யக்கூடாது. இது உங்கள் தலைமுறைதோறும் நீங்கள் வாழுமிடங்கள் எல்லாம் பின்பற்ற வேண்டிய என்றுமுள நியமம் ஆகும்.
32அன்று உங்களுக்கு முழுமையான ஓய்வு நாள்; அன்று உங்களைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். அந்த மாதத்தின் ஒன்பதாம் நாளினை மாலைமுதல் மறுநாள் மாலை வரை, ஓய்வுநாளாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

கூடாரப் பெருவிழா
(எண் 29:12-40)

33ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
34நீ இஸ்ரயேல் மக்களிடம் கூற வேண்டியது; ஏழாம் மாதம் பதினைந்தாம் நாளன்று ஆண்டவரின் கூடாரப்பெருவிழா தொடங்குகின்றது. அது ஏழு நாள்கள் தொடரும்.
35முதல்நாள் திருப்பேரவை கூடும் நாள்; அன்று எத்தகைய வேலையையும் செய்யவேண்டாம்.
36ஏழு நாள்களும் ஆண்டவருக்கு நெருப்புப்பலி செலுத்துங்கள். எட்டாம் நாளன்று திருப்பேரவை கூடும்; அன்றும் ஆண்டவருக்கு நெருப்புப்பலி செலுத்துங்கள். அது நிறைவுநாள். அன்று எத்தகைய வேலையையும் செய்யலாகாது.
37ஓய்வுநாளில் ஆண்டவருக்குச் செலுத்தும் காணிக்கைகள், நேர்ச்சைகள், தன்னார்வப் பலிகள் தவிர,
38அந்தந்த நாள்களுக்கு ஏற்ப, எரிபலி, உணவுப்படையல், இரத்தப்பலி, நீர்மப்படையல் முதலிய பலிகளைச் செலுத்தத் தக்கதாகவும் சபையாய்க் கூடி அந்த நாளைப் புனிதமாய்க் கடைப்பிடியுங்கள். இவையே நீங்கள் கொண்டாட வேண்டிய விழாக்கள்.
39நிலத்தின் பலனைச் சேகரிக்கும் ஏழாம் மாதம் பதினைந்தாம் நாள்விழா; அது ஏழு நாளளவு கொண்டாடப்பட வேண்டும். முதல் நாளும், எட்டாம் நாளும் ஓய்வு நாள்கள்.
40முதல் நாள், கவர்ச்சிகரமான மரங்களின் பழங்களையும், பேரீச்ச ஓலை, மற்றும் கொழுமையான தளிர்களையும், அலரி இலைகளையும் கொண்டு வந்து, ஆண்டவர் திருமுன் மகிழ்ந்திருங்கள்.
41ஆண்டுதோறும் ஏழு நாளளவு இப்பெருவிழா கொண்டாடப்படவேண்டும். ஏழாம் மாதத்தில் அது கொண்டாடப்படவேண்டும். இது நீங்கள் தலைமுறைதோறும் கடைப்பிடிக்க வேண்டிய என்றுமுள நியமம் ஆகும்.
42ஏழு நாள் கூடாரங்களில் குடியிருங்கள்; இஸ்ரயேலில் பிறந்த யாவரும் அவ்வாறே கூடாரங்களில் குடியிருக்க வேண்டும்.
43இஸ்ரயேலரை எகிப்திலிருந்து நான் கொண்டுவந்தபோது, அவர்கள் கூடாரங்களில் வாழ்ந்தார்கள் என்பதை இதன்மூலம் உன் வழிமரபினர் அறிந்துகொள்வர். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!
44இவ்வாறு, மோசே ஆண்டவரின் விழாக்களின் வரலாற்றை இஸ்ரயேல் மக்களுக்கு எடுத்துரைத்தார்.

23:3 விப 20:8-10; 23:12; 31:15; 34:21; 35:2; இச 5:12-14. 23:5 விப 12:1-13; இச 16:1-2. 23:6-8 விப 12:14-20; 23:15; 34:18; இச 16:3-8. 23:15-21 விப 23:16; 34:22; இச 16:9-12. 23:22 லேவி 19:9-10; இச 24:19-22. 23:26-32 லேவி 16:29-34. 23:33-36 இச 16:13-15.
23:13 ‘ஓர் ஏப்பா’ என்பது எபிரேய பாடம்.