1ஆண்டவர் என்னிடம் கூறியது இதுவே:
“இஸ்ரயேல் மக்கள் வேற்றுத்
தெய்வங்கள்மேல் பற்றுக்கொண்டு,
உயர்ந்த திராட்சை அடைகளை*
விரும்புகின்றனர்.
எனினும் அவர்கள்மேல்
ஆண்டவர் அன்பு வைத்துள்ளார்.
இதற்கு அடையாளமாக
நீ மறுபடியும் போய்,
வேறொருவனால் காதலிக்கப்பட்டவளும்
விபசாரியுமான ஒரு பெண்ணின்மேல்
காதல் கொள்.”
2அவ்வாறே நான் அவளைப்
பதினைந்து வெள்ளிக்காசுகளையும்*
ஒன்றரை கலம்** அளவுள்ள
வாற்கோதுமையும் கொடுத்து
எனக்கென வாங்கிக்கொண்டேன்.
3பின்பு நான் அவளை நோக்கி,
‘நீ வேசித்தொழில் புரியாமலும்
வேறொருவனுக்கு உடைமையாகாமலும்,
நெடுநாள் எனக்கே உரியவளாய்
வாழவேண்டும்.
நானும் அவ்வண்ணமே
உனக்காக வாழ்வேன்’ என்றேன்.
4இஸ்ரயேல் மக்கள் பல நாள்கள்
அரசனின்றி, தலைவனின்றி,
பலியின்றி, பலி பீடமின்றி,
குருத்துவ உடையின்றி,
குலதெய்வச் சிலைகளுமின்றி
இருப்பார்கள்.
5அதற்குப் பிறகு,
இஸ்ரயேல் மக்கள்
தங்கள் கடவுளாகிய ஆண்டவரையும்
தங்கள் அரசனாகிய தாவீதையும்
தேடி வருவார்கள்;
இறுதி நாள்களில் ஆண்டவரையும்
அவர்தம் நன்மைகளையும் நாடி
நடுக்கத்தோடு வருவார்கள்.