சிலைவழிபாட்டிற்கு வரும் தண்டனைத் தீர்ப்பு

1எப்ராயிம் பேசியபோது ஏனையோர்

நடுங்கினர்; இஸ்ரயேலில் அவன்

மிக உயர்ந்திருந்தான்; ஆனால்,

பாகாலை வழிபட்ட

குற்றத்திற்காய் மடிந்தான்.

2இப்போதும், அவர்கள்

பாவத்தின்மேல் பாவம்

செய்கிறார்கள்;

சிலைகளைத் தங்களுக்கென

வார்த்துக் கொள்கிறார்கள்;

அவர்களுடைய வெள்ளியில்

செய்யப்பட்ட சிலைகள் அவை;

அவை யாவும்

தட்டானின் கைவேலைகளே;

“இவற்றுக்குப் பலியிடுங்கள்”*

என்கிறார்கள் அவர்கள்;

மனிதர் கன்றுக்குட்டிகளை

முத்தமிடுகின்றார்கள்.

3ஆதலால் அவர்கள்

காலையில் காணும் மேகம்போலும்,

விரைவில் உலர்ந்துபோகும்

பனித்துளி போலும்,

சுழற்காற்றில் சிக்கிய

களத்துத் துரும்பு போலும்

பலகணி வழியாய் வெளிப்பட்ட

புகைபோலும் ஆவார்கள்.

4எகிப்து நாட்டினின்று

உன்னை விடுவித்த நாள் முதல்

நானே உன் கடவுளாகிய ஆண்டவர்;

என்னைத்தவிர

வேறு கடவுளை நீ அறியாய்;

என்னையன்றி வேறு மீட்பரும் இல்லை.

5வறண்ட நிலமாகிய பாலைவெளியில்

உன்னை அறிந்து ஆதரித்தவர் நானே;

6வளமான மேய்ச்சல் கிடைத்தபடியால்

அவர்கள் மனநிறைவுற்றார்கள்;

மன நிறைவடைந்ததும் செருக்குற்று

என்னை மறந்து போனார்கள்.

7ஆதலால் நான் அவர்களுக்கு

ஒரு சிங்கம்போலிருப்பேன்;

வேங்கைபோலப் பாயுமாறு

வழியோரத்தில் மறைந்திருப்பேன்.

8குட்டியைப் பறிகொடுத்த

பெண் கரடிபோல்

அவர்கள்மேல் பாய்ந்து

அவர்கள் நெஞ்சைக் கிழிப்பேன்;

சிங்கத்தைப் போல் அங்கேயே

அவர்களைத் தின்றொழிப்பேன்;

காட்டுவிலங்கு

அவர்களைக் கிழித்தெறியும்.

9இஸ்ரயேலே, உன்னை நான்

அழிக்கப் போகின்றேன்;

*உனக்கு உதவி செய்ய வல்லவன் யார்?*

10‘எனக்கு அரசன் வேண்டும்,

தலைவர்கள் வேண்டும்’ என்று

என்னிடம் கேட்டாய்.

உன்னை மீட்கும் அரசன் எங்கே?

உன் நகர் அனைத்திலும் உள்ள

தலைவர்கள் எங்கே?*

11வேண்டா வெறுப்போடு உனக்கு நான்

ஓர் அரசனைத் தந்தேன்;

என் சினத்தில் நான்

அவனை அகற்றிவிட்டேன்.

அழிவு வருவது திண்ணம்

12எப்ராயிமின் தீச்செயல்

சேர்த்து வைக்கப்பட்டுள்ளது;

அவனுடைய பாவம்

சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

13அவனுக்கான பேறுகால வேதனை

வந்தாயிற்று; ஆனால்,

அவன் ஓர் அறிவற்ற பிள்ளை;

பிறக்கும் நேரம் வந்து விட்டது;

ஆனால், கருப்பையை விட்டு

வெளியேற மறுக்கிறான்.

14பாதாளத்தின் பிடியினின்று

அவர்களை விடுவிப்பேனோ?

சாவிலிருந்து அவர்களை மீட்பேனோ?

சாவே! உன்

கொள்ளை நோய்கள் எங்கே?

பாதாளமே! உன்

அழிவு வேலை எங்கே?

தற்போது இரக்கம் என்னிடம் இல்லை.

15எப்ராயிம் தன் சகோதரருள்

கனி தரும் மரம் போலிருக்கலாம்;

ஆயினும் ஆண்டவரின் மூச்சாகிய

கீழைக் காற்று

பாலை நிலத்திலிருந்து கிளம்பி வரும்;

வந்து அவனுடைய நீரோடைகளையும்,

நீரூற்றுகளையும்

வறண்டு போகச் செய்யும்.

அவனது கருவூலத்திலிருந்து

விலையுயர்ந்த பொருள்களை எல்லாம்

வாரிக்கொண்டு போகும்.

16சமாரியா தன் கடவுளை எதிர்த்துக்

கலகமூட்டிற்று;

அது தன் குற்றப் பழியைச் சுமக்கும்;

அதன் குடிமக்கள்

வாளால் மடிவார்கள்,

அவர்களுடைய குழந்தைகள்

மோதியடிக்கப்படுவார்கள்;

அவர்களுடைய கர்ப்பவதிகள்

கிழித்தெறியப் படுவார்கள்.


13:5-6 இச 8:11-17. 13:10 1 சாமு 8:5-6. 13:11 1 சாமு 10:17-24; 15:26. 13:14 1 கொரி 15:55.
13:2 "பலிகளுடைய" என்பது எபிரேய பாடம். 13:9 உனக்கு உதவி செய்ய வல்லவன் யார்?" என்பதற்கு "என்னில் உனக்கு உண்டு" என்பது எபிரேய பாடம். 13:10 "எங்கே?" என்பதற்கு "நானே" என்பது எபிரேய பாடம்.