இஸ்ரயேலின் உண்மையற்ற இதயம்

1இஸ்ரயேல் தழைத்து வளர்ந்த

திராட்சைக்கொடி, அது மிகுதியான

கனிகளைத்

தனக்கே தாங்கி நிற்கின்றது;

எவ்வளவு மிகுதியாகக்

கனிகளைக் கொடுத்ததோ,

அவ்வளவு மிகுதியாய்ப்

பலிபீடங்களை அமைத்தது;

எத்தகைய சிறப்புடன்

நாடு செழிப்புற்றதோ,

அதற்கு இணையாய்ச்

சிலைத் தூண்கள்

சிறப்புப் பெற்றன.

2இருமனம் கொண்ட

மக்களாகிய அவர்கள்,

தங்கள் குற்றத்திற்காகத்

தண்டனை பெறுவார்கள்;

ஆண்டவர் அவர்களுடைய

பலிபீடங்களைத் தகர்த்திடுவார்;

அவர்களுடைய சிலைத் தூண்களை

நொறுக்கிடுவார்.

3அப்போது அவர்கள்,

“நமக்கு அரசன் இல்லை;

ஆண்டவருக்கு நாம்

அஞ்சி நடக்கவில்லை;

அரசன் இருந்தாலும்,

நமக்கு என்ன செய்வான்?”

என்பார்கள்.

4வீண் வார்த்தைகளையே

அவர்கள் பேசுகின்றார்கள்.

பொய்யாணை இட்டு

உடன்படிக்கை செய்கின்றார்கள்;

ஆதலால், வயலின் உழவுச் சால்களில்

முளைக்கும் நச்சுப் பூண்டுகள் போலத்

தண்டனைத் தீர்ப்பு முளைக்கும்.

5சமாரியாவில் குடியிருப்போர்

பெத்தாவேனிலுள்ள

கன்றுக் குட்டியை முன்னிட்டு

நடுங்குவர்;

அதன் மேன்மை இப்பொழுது

மறைந்துபோயிற்று;

அதைக் குறித்து அதன் மக்கள்

துயர் அடைவார்கள்;

அதன் குருக்களும் அதற்காகப் புலம்புவார்கள்.

6அதுவே அசீரியாவிலுள்ள

யாரேபு மன்னனுக்கு

அன்பளிப்பாகக் கொண்டுபோகப்படும்.

எப்ராயிம் வெட்கமடைவான்,

இஸ்ரயேல் தன் ஆலோசனையால்

நாணமடைவான்.

7சமாரியாவின் அரசன்

நீர்மேல் குமிழிபோல் அழிந்துபோவான்.

8இஸ்ரயேலின் பாவமாகிய

சிலை வழிபாட்டின்

உயர்ந்த இடமெல்லாம் அழிக்கப்படும்;

முள்களும், முட்புதர்களும்

அவற்றின் பலிபீடங்கள்மேல் வளரும்;

அப்போது அவர்கள் மலைகளைப் பார்த்து,

‘எங்களை மூடிக்கொள்ளுங்கள்’

குன்றுகளைப் பார்த்து,

‘எங்கள்மேல் விழுங்கள்’

என்று சொல்வார்கள்.

தண்டனைத் தீர்ப்புப்பற்றிய ஆண்டவரின் அறிவிப்பு

9இஸ்ரயேலர்

கிபயாவில் தங்கியிருந்த நாளிலிருந்தே

பாவம் செய்து வந்தார்கள்;

கிபயாவில்

பொல்லார்மேல் எழுந்த கடும் போர்

அவர்கள்மேலும் வராதா?

10நான் வந்து அவர்களைத் தண்டிப்பேன்;

அவர்கள் செய்த

இரட்டைத் தீச் செயல்களுக்குத்

தண்டனை வழங்கும் பொருட்டு

அவர்களுக்கு எதிராக

வேற்றினத்தார் ஒன்றுகூடுவர்.

11எப்ராயிம்,

நன்றாகப் பழக்கப்பட்டதும்,

புணையடிக்க விரும்புவதுமான

பசுவாய் இருக்கின்றான்;

நானோ அதன் அழகான கழுத்தின்மேல்

நுகத்தடியை வைப்பேன்;

எப்ராயிமை ஏரில் பூட்டுவேன்;

யூதா உழுவான்;

யாக்கோபு அவனுக்குப் பரம்படிப்பான்.

12நீதியை நீங்கள்

விதைத்துக் கொள்ளுங்கள்;

அன்பின் கனியை

அறுவடை செய்யுங்கள்;

உங்கள் தரிசு நிலத்தை

உழுது பண்படுத்துங்கள்;

ஏனெனில் ஆண்டவர் வந்து

உங்கள்மேல் நேர்மையைப் பொழியுமாறு

நீங்கள் அவரைத் தேடும் காலம்

நெருங்கிவந்துவிட்டது.

13நீங்கள் கொடுமையை உழுதீர்கள்;

தீவினையை அறுவடை செய்தீர்கள்;

பொய்ம்மைக் கனியைத் தின்றீர்கள்;

உங்கள் தேர்ப்படைகளின்* மேலும்,

வீரர்களின் எண்ணிக்கையின் மேலும்

நீங்கள் நம்பிக்கை வைத்தீர்கள்.

14ஆதலால் உங்கள் மக்களிடையே

போர்க் குரல் எழும்பும்;

உங்கள் அரண்கள் யாவும் அழிக்கப்படும்;

போரின் நாளில்

பெத்தர்பேலைச் சல்மான் அழித்தபோது

அன்னையர் தம் பிள்ளைகளோடு

மோதியடிக்கப்பட்டது போல

அது இருக்கும்.

15பெத்தேலே!

உன் கொடிய தீவினைக்காக

உனக்கும் இவ்வாறே செய்யப்படும்.

பொழுது விடியும்போது

இஸ்ரயேலின் அரசன்

அழிந்து போவது உறுதி.


10:8 லூக் 23:30; திவெ 6:16. 10:9 நீதி 19:1-30. 10:12 எரே 4:3.
10:13 “உன் வழியின்” என்பது எபிரேய பாடம்.