வீழ்ச்சியுற்ற எருசலேம்

1ஐயோ! பொன் இப்படி மங்கிப் போயிற்றே!

பசும்பொன் இப்படி மாற்றுக் குறைந்து

போயிற்றே!

திருத்தலக் கற்கள்

தெருமுனை எங்கும்

சிதறிக் கிடக்கின்றனவே!

2பசும்பொன்னுக்கு இணையான

சீயோனின் அருமை மைந்தர் இன்று

குயவனின் கைவினையாம்

மண்பாண்டம் ஆயினரே!

3குள்ளநரிகளும்

பாலூட்டித் தம் குட்டிகளைப்

பேணிக்காக்கும்!

பாலைநிலத் தீக்கோழியென

என் மக்களாம் மகள்

கொடியவள் ஆயினளே!

4பால்குடி மறவாத மழலைகளின் நாவு

தாகத்தால்

அண்ணத்தில் ஒட்டிக்கொள்ளும்!

பச்சிளங் குழந்தைகள்

கெஞ்சுகின்ற உணவுதனை

அளித்திடுவார் யாருமிலர்!

5சுவையுணவு அருந்தினோர்

நடுத்தெருவில் நலிகின்றனர்!

பட்டுடுத்தி வளர்ந்தோர்

குப்பைமேட்டில் கிடக்கின்றனர்!

6ஒருவரும் கை வைக்காமல்

நொடிப்பொழுதில் வீழ்ச்சியுற்ற

சோதோமின் பாவத்தைவிட,

என் மக்களாம் மகளின் குற்றம் பெரிதாமே!

7அவள் இளவரசர்

பனியினும் தூயவராய்ப்

பாலினும் வெண்மையராய்ப்

பவளத்தினும் சிவந்த மேனியராய்

நீல மணிக் கட்டழகராய் இருந்தனர்!

8இப்பொழுதோ, அவர்கள் தோற்றம்

கரியினும் கருமை ஆனது;

அவர்களைத் தெருக்களில்

அடையாளம் காண இயலவில்லை!

அவர்கள் தோல்

எலும்போடு ஒட்டியிருந்தது.

காய்ந்த மரம்போல்

அது உலர்ந்து போனது!

9பசியினால் மாண்டவர்களினும்

வாளினால் மாண்டோர்

நற்பேறு பெற்றோர்!

ஏனெனில், முன்னையோர்

வயல் தரும் விளைச்சலின்றிக்

குத்துண்டவர் போல் மாய்ந்தனர்!

10இரங்கும் பெண்டிரின் கைகள்

தம் குழந்தைகளை வேகவைத்தன!

என் மக்களாகிய மகள்

அழிவுற்றபோது

பிள்ளைகளே அன்னையர்க்கு

உணவாயினர்!

11ஆண்டவர் தம் சீற்றத்தைத்

தீர்த்துக் கொண்டார்;

தம் கோபக் கனலைக் கொட்டினார்;

சீயோனில் நெருப்பை மூட்டினார்;

அது அதன் அடித்தளங்களை

விழுங்கிற்று.

12பகைவரும் எதிரிகளும்

எருசலேம் வாயில்களில்

நுழைவர் என்று

மண்ணுலகின் மன்னரோ

பூவுலகில் வாழ்வோரோ

நம்பவில்லை.

13நகரின் நடுவே

நீதிமானின் இரத்தம் சிந்திய

இறைவாக்கினரின் பாவமும்

குருக்களின் குற்றமுமே

இதற்குக் காரணமாம்!

14அவர்கள் குருடரெனத்

தெருக்களில் தடுமாறினர்;

அவர்கள்மீது இரத்தக் கறை

எவ்வளவு படிந்திருந்ததெனில்,

அவர்கள் ஆடைகளைக்கூட

எவராலும் தொட இயலவில்லை.

15விலகுங்கள்! தீட்டு! விலகுங்கள்!

விலகுங்கள்!தொடாதீர்கள்! என்று

அவர்களைப் பார்த்துக் கூவினார்கள்;

அவர்கள் அகதிகளாய்

அலைந்து திரிந்தார்கள்.

‘இனி நம்மிடம் குடியிரார்,’

‘இனி எம்மிடையே

தங்கக்கூடாது’ என்று

வேற்றினத்தார் கூறினர்.

16ஆண்டவரே தம் முன்னிலையினின்று

அவர்களைச் சிதறடித்தார்;

இனி அவர்களைக்

கண்ணோக்கமாட்டார்.

குருவை மதிப்பார் இல்லை;

முதியோர்க்கு இரங்குவார் இல்லை.

17உதவியை வீணில் எதிர்பார்த்து

எம் கண்கள் பூத்துப்போயின!

எம்மை விடுவிக்க இயலாத

நாட்டினர்க்காய்க்

கண் விழித்துக் காத்திருந்தோம்!

18எம் நடமாட்டம் கவனிக்கப்பட்டது;

எம் தெருக்களில் கூட

எம்மால் நடக்க முடியவில்லை;

எம் முடிவு நெருங்கிவிட்டது;

எம் நாள்கள் முடிந்துவிட்டன;

எம் முடிவு வந்து விட்டது.

19வானத்துப் பருந்துகளிலும் விரைவாய்

எம்மைத் துரத்துவோர் வருகின்றனர்;

மலைகளில் எங்களைத்

துரத்தி வந்தார்கள்;

பாலையில் எங்களுக்காய்ப்

பதுங்கி இருந்தார்கள்.

20ஆண்டவரின் திருப்பொழிவு பெற்று

எம் உயிர் மூச்சாய்த் திகழ்ந்தவர்,

அவர்கள் வெட்டிய குழியில் வீழ்ந்தனர்!

‘அவரது நிழலில்

வேற்றினத்தார் நடுவில்

நாம் வாழ்வோம்’ என்று

அவரைக் குறித்தே எண்ணியிருந்தோம்!

21ஊசு நாட்டில் வாழும் மகளே!

ஏதோம்!

அகமகிழ்ந்து அக்களித்திடு!

கிண்ணம் உன்னையும் வந்தடையும்!

நீ குடிவெறி கொண்டு

ஆடையின்றிக் கிடப்பாய்!

22மகளே! சீயோன்!

உன் குற்றப்பழி நீங்கிவிட்டது;

உன் அடிமைத்தனம்

இனியும் தொடராது;

மகளே! ஏதோம்!

உன் குற்றத்திற்காக

நீ தண்டிக்கப்படுவாய்!

உன் பாவங்கள் வெளிப்படுத்தப்படும்!


4:6 தொநூ 19:24. 4:10 இச 28:57; எசே 5:10.