எருசலேமுக்குரிய தண்டனை

1ஐயோ! மகள் சீயோனை ஆண்டவர்

தம் சினமென்னும் மேகத்தால் மூடினார்!

அவர் இஸ்ரயேலின் மேன்மையை

விண்ணினின்று

மண்ணுக்குத் தள்ளினார்!

அவரது சினத்தின் நாளில்

தம் கால்மணையை

மனத்தில் கொள்ளவில்லை!

2ஆண்டவர் யாக்கோபின்

அனைத்துக் குடியிருப்புகளையும்

இரக்கமின்றி அழித்தார்;

அவர் சீற்றமடைந்து

மகள் யூதாவின் அரண்களைத்

தகர்த்தார்;

அவற்றைத் தரைமட்டமாக்கினார்.

அவரது நாட்டையும்

அதன் தலைவர்களையும்

மேன்மை குலையச் செய்தார்.

3அவர் வெஞ்சினம் கொண்டு

இஸ்ரயேலின் கொம்பை

முற்றிலும் வெட்டிவிட்டார்;

பகைவன் வந்தபொழுது

தம் வலக்கையைப்

பின்புறம் மறைத்துக்கொண்டார்;

சூழ்ந்திருக்கும் யாவற்றையும்

எரிக்கும் தீப்பிழம்பென,

அவர் யாக்கோபின் மீது

பற்றியெரிந்தார்.

4எதிரி போலத்

தமது வில்லை நாணேற்றினார்;

பகைவன் போலத்

தம் வலக்கையை ஓங்கினார்;

கண்ணுக்கு இனியவை

அனைத்தையும் அழித்தார்;

மகள் சீயோனின் கூடாரத்தில்

தம் சினத்தை

நெருப்பெனக் கொட்டினார்.

5என் தலைவர் எதிரி போலானார்;

அவர் இஸ்ரயேலை அழித்தார்;

அதன் கோட்டை கொத்தளங்களைத்

தகர்த்தார்;

மகள் யூதாவின் அழுகையையும்

புலம்பலையும் மிகுதியாக்கினார்.

6தோட்டத்துப் பரணைப்

பிரித்தெறிவது போலத்

தம் கூடாரத்தையும் பிரித்தெறிந்தார்;

சபை கூடும் இடத்தையும் அழித்தார்;

சீயோனில் ஆண்டவர்

விழாக்களையும் ஓய்வுநாளையும்

மறக்கச் செய்தார்;

அவர் வெஞ்சினமுற்று

அரசனையும் குருவையும்

வெறுத்து ஒதுக்கினார்.

7என் தலைவர் தம் பலிபீடத்தை

வெறுத்தொதுக்கினார்.

தம் திருத்தூயகத்தைக் கைவிட்டார்;

அதன் கோட்டைச் சுவர்களைப்

பகைவரிடம் கையளித்தார்;

விழா நாளில் ஆரவாரம் செய்வதுபோல

ஆண்டவரின் இல்லத்தில்

அவர்கள் ஆரவாரம் செய்தனர்;

8மகள் சீயோனின் மதிலை அழிக்க

ஆண்டவர் திட்டமிட்டார்;

அதற்கென நூலினால் அளந்தார்;

அதை அழிப்பதை நிறுத்தத்

தம் கையை மடக்கிக் கொள்ளவில்லை;

அரணும் மதிலும் புலம்பச் செய்தார்;

அவை ஒருங்கே சரிந்து வீழ்ந்தன.

9அவளின் வாயிற்கதவுகள்

மண்ணில் புதைந்து கிடந்தன;

அதன் தாழ்களை

உடைத்துச் சிதறடித்தார்;

அவளின் அரசனும் தலைவர்களும்

வேற்றினத்தாரிடையே உள்ளனர்!

திருச்சட்டம் இல்லை;

அவளின் இறைவாக்கினரும்

ஆண்டவரின் காட்சி பெறவில்லை.

10மகள் சீயோனின் பெரியோர்

தரையில் மௌனமாய்

அமர்ந்துள்ளனர்;

அவர்கள் தங்கள் தலைமேல்

புழுதியைத் தூவிக் கொண்டுள்ளனர்;

சாக்கு உடை உடுத்தியுள்ளனர்;

எருசலேமின் கன்னிப் பெண்கள்

தங்கள் தலைகளைத்

தரை மட்டும் தாழ்த்தியுள்ளனர்.

11என் கண்கள் கண்ணீர் சொரிந்து

சோர்ந்துள்ளன!

என் குலை நடுங்குகின்றது!

என் துயரத்தால் என் ஈரல் வெடித்துத்

தரையில் சிதறுகின்றது!

என் மக்களாகிய மகள்

நசுக்கப் பட்டுள்ளாள்!

நகர் வீதிகளில்

குழந்தைகளும் மழலைகளும்

மயங்கிக் கிடக்கின்றனர்!

12அவர்கள் தங்கள் அன்னையரிடம்,

‘அப்பம், திராட்சை இரசம் எங்கே?’

என்று கேட்கின்றனர்!

படுகாயமுற்றோரைப்போல,

நகர் வீதிகளில் அவர்கள்

மயங்கி வீழ்கின்றனர்!

தாய் மடியில்

உயிர்விட்டவர்போல் ஆகின்றனர்!

13மகளே! எருசலேம்!

உன் சார்பாக நான் என்ன சொல்வேன்?

உன்னை எதற்கு ஒப்பிடுவேன்?

மகள் சீயோனே!

கன்னிப் பெண்ணே!

யாருக்கு உன்னை இணையாக்கித்

தேற்றுவேன் உன்னை?

உன் காயம் கடலைப்போல்

விரிந்துள்ளதே!

உன்னைக் குணமாக்க

யாரால் முடியும்?

14உன் இறைவாக்கினர் உனக்காகப்

பொய்யும் புரட்டுமான

காட்சிகளைக் கண்டனர்;

நீ நாடுகடத்தப்பட இருப்பதைத்

தவிர்க்குமாறு,

உன் நெறிகேடுகளை அவர்கள்

உனக்கு எடுத்துச் சொல்லவில்லை;

அவர்கள் பொய்யையும்

அபத்தங்களையும் காட்சியாகக் கண்டு,

உனக்குப் பொய்வாக்கு உரைத்தனர்!

15அவ்வழியாய்க் கடந்து செல்வோர்

உன்னைப் பார்த்துக்

கைகொட்டிச் சிரித்தனர்!

மகள் எருசலேமை நோக்கித்

தலையை ஆட்டிச்

சீழ்க்கையடித்தனர்!

“அழகின் நிறைவும்

மண்ணுலகின் மகிழ்ச்சியுமாக இருந்த

மாநகர் இதுதானா?” என்றனர்.

16உன் எதிரிகள் அனைவரும்

உன்னை நோக்கிக்

கோணல்வாய் காட்டுகின்றனர்;

சீழ்க்கையடித்துப்

பற்களை நறநற வென்று

கடிக்கின்றனர்;

‘நாம் அவளைப்

பாழாக்கினோம்’ என்றனர்.

‘இந்நாளுக்காகவே

நாம் காத்திருந்தோம்;

இப்போதுதான் நம்மால்

அதைக் காணமுடிந்தது’ என்றனர்.

17ஆண்டவர்

தாம் திட்டமிட்டபடியே செய்தார்;

நெடுநாள்களுக்குமுன்

தாம் முன்னெச்சரிக்கை செய்தவாறு

செயல்பட்டார்;

ஈவிரக்கமின்றி

இடித்துத் தள்ளினார்;

உன் எதிரிகளை

மகிழ்ச்சியடையச் செய்தார்;

பகைவனின் ஆற்றலைப்

பெருகச் செய்தார்.

18அவர்களின் இதயம்

என் தலைவனை நோக்கிக்

கூக்குரலிடுகின்றது;

மகள் சீயோனின் மதிலே!

இரவும் பகலும் வெள்ளமெனக்

கண்ணீர் பொழி!

உனக்கு ஓய்வு வேண்டாம்!

கண்ணீர் விடாமல்

நீ இருக்க வேண்டாம்!

19எழு! இரவில் முதற் சாமத்தில்

குரலெழுப்பு!

உள்ளத்தில் உள்ளதை

என் தலைவர் திருமுன்

தண்ணீரைப் போல் ஊற்றிவிடு!

தெருமுனையில்

பசியால் மயங்கி விழும்

குழந்தைகளின் உயிருக்காக,

அவரை நோக்கி

உன் கைகளை உயர்த்து!

20கண்ணோக்கும் ஆண்டவரே!

எண்ணிப் பாரும்;

யாருக்கு இப்படிச்

செய்திருக்கின்றீர்?

பெண்கள் தங்கள்

கர்ப்பத்தின் கனிகளையே,

கைக்குழந்தைகளையே,

தின்ன வேண்டுமோ?

குருவும், இறைவாக்கினரும்

என் தலைவரின் திருத்தூயகத்தில்

கொல்லப்படவேண்டுமோ?

21வீதிகளின் புழுதியில்

சிறியோரும் பெரியோரும்

வீழ்ந்து கிடக்கின்றனர்!

என் கன்னியரும் காளையரும்

வாளால் வீழ்த்தப்பட்டனர்!

உமது சீற்றத்தின் நாளில்

ஈவிரக்கமின்றி

அவர்களைக் கொன்று குவித்தீர்!

22திருவிழாவுக்கு அழைப்பது போல,

எப்பக்கமும் எனக்கெதிராகப்

பேரச்சத்தை வரவழைத்தீர்!

ஆண்டவரது சீற்றத்தின் நாளில்

உயிர்தப்பிப் பிழைத்தவரோ

எஞ்சியவரோ எவரும் இல்லை!

நான் பேணி வளர்த்தவர்களை

என் எதிரி கொன்றழித்தான்!