4நீ அவர்களுக்குச் சொல்ல வேண்டியது;
“ஆண்டவர் கூறுவது இதுவே;
விழுந்தவன் எழுவதில்லையா?
பிரிந்து சென்றவன்
திரும்பி வருவதில்லையா?
5ஏன் இந்த எருசலேமின் மக்கள்
என்றென்றைக்கும்
என்னை விட்டு விலகிப்
பொய்யைப் பற்றிக்கொண்டு
நிற்கின்றார்கள்?
ஏன் திரும்பிவர மறுக்கின்றார்கள்?
6நான் செவிசாய்த்தேன்; உற்றுக்கேட்டேன்.
அவர்கள் சரியானதைச்
சொல்லவில்லை.
“நான் என்ன செய்துவிட்டேன்?” என்று
கூறுகிறார்களேயன்றி
எவருமே தம் தீச்செயலுக்காக
வருந்தவில்லை.
போர்க்களத்தில்
பாய்ந்தோடும் குதிரைபோல
யாவருமே தம் வழியில்
விரைகின்றார்கள்.
7வானத்துக் கொக்கு
தன் காலங்களை அறிந்துள்ளது.
புறாவும் தகைவிலானும் நாரையும்
தாம் இடம் பெயரும் காலத்தை
அறிந்துள்ளன.
என் மக்களோ,
ஆண்டவரின் நீதியை உணரவில்லையே!
8“நாங்கள் ஞானிகள்;
ஆண்டவரின் சட்டம்
எங்களோடு உள்ளது” என
நீங்கள் எவ்வாறு கூறமுடியும்?
மறைநூல் அறிஞரின்
பொய் எழுதும் எழுதுகோல்
பொய்யையே எழுதிற்று.
9ஞானிகள் வெட்கமடைவர்;
திகிலுற்றுப் பிடிபடுவர்;
ஏனெனில், அவர்கள்
ஆண்டவரின் வாக்கைப்
புறக்கணித்தார்கள்;
இதுதான் அவர்களின் ஞானமா?
10ஆகவே, நான்
அவர்களுடைய மனைவியரை
வேற்றவருக்குக் கொடுப்பேன்;
அவர்களுடைய நிலங்களைக்
கைப்பற்றியோருக்கே கொடுப்பேன்;
ஏனெனில், சிறியோர் முதல்
பெரியோர் வரை அனைவரும்
கொள்ளை இலாபம் தேடுகின்றார்கள்.
இறைவாக்கினர் முதல்
குருக்கள்வரை அனைவரும்
ஏமாற்றுவதையே
தொழிலாகக் கொண்டுள்ளார்கள்.
11அமைதியே இல்லாத பொழுது
‘அமைதி, அமைதி’ என்று கூறி
என் மகளாகிய மக்களுக்கு
ஏற்பட்ட காயத்தை
மேலோட்டமாகவே குணப்படுத்தினர்.
12அருவருப்பானதைச் செய்தபோது
அவர்கள் வெட்கம் அடைந்தார்களா?
அப்போதுகூட அவர்கள்
வெட்கம் அடையவில்லை;
நாணம் என்பது என்னவென்று
அவர்களுக்குத் தெரியாது;
எனவே மடிந்து விழுந்தவர்களோடு
அவர்களும் மடிந்து விழுவர்;
நான் அவர்களை தண்டிக்கும் போது
அவர்கள் வீழ்த்தப்படுவர்,
என்கிறார் ஆண்டவர்.
13நான் கனிகளை
ஒன்று சேர்க்க விரும்பினேன்.
ஆனால், திராட்சைக் கொடியில்
பழங்கள் இல்லை;
அத்தி மரங்களில் கனிகள் இல்லை.
இலைகள்கூட உதிர்ந்து போயின.
நான் அவர்களுக்குக் கொடுத்தது
அவர்களிடமிருந்து நழுவிப் போயிற்று.
14நாம் இங்கு ஏன் அமர்ந்திருக்கிறோம்?
ஒன்றிணைவோம்;
அரண் சூழ் நகர்களுக்குப் போவோம்;
அங்குச் சென்று மடிவோம்;
ஏனெனில், நம் கடவுளாகிய ஆண்டவர்
நம்மை மடியும்படி விட்டுவிட்டார்;
நஞ்சு கலந்த நீரை
நாம் குடிக்கச் செய்தார்;
ஏனெனில், நாம் ஆண்டவருக்கு எதிராகப்
பாவம் செய்தோம்.
15நாங்கள் அமைதிக்காகக்
காத்திருந்தோம்;
ஆனால் பயனேதும் இல்லை.
நலம் பெறும் காலத்தை
எதிர்ப்பார்த்திருந்தோம்;
பேரச்சமே மிஞ்சியது.
16தாணிலிருந்து அவனுடைய
குதிரைகளின் சீறல் கேட்கின்றது;
வலிமை வாய்ந்த குதிரைகளின் கனைப்பு
நாட்டையெல்லாம் நடுங்கச் செய்கின்றது.
அவர்கள் வந்து
நாட்டையும் அதிலுள்ள அனைத்தையும்
நகரையும் அதில் குடியிருப்போரையும்
விழுங்கிவிடுவார்கள்.
17நான் உங்கள் நடுவில்
பாம்புகளை அனுப்புவேன்.
எதற்கும் மயங்கா
நச்சுப் பாம்புகளை அனுப்புவேன்;
அவை உங்களைக் கடிக்கும்,
என்கிறார் ஆண்டவர்.
18துயரம் என்னை மேற்கொண்டது;
என் உள்ளம் நலிந்து போய்விட்டது.
19இதோ என் மகளாகிய
மக்களின் அழுகுரல்
தூரத்து நாட்டிலிருந்து கேட்கிறதே;
சீயோனில் ஆண்டவர் இல்லையா?
அவளின் அரசர் அங்கே இல்லையா?
செதுக்கிய உருவங்களாலும்
வேற்றுத் தெய்வச் சிலைகளாலும்
எனக்கு ஏன் சினமூட்டினார்கள்?
20அறுவடைக் காலம் முடிந்துவிட்டது;
வேனிற்காலம் கடந்துவிட்டது;
நமக்கோ இன்றும்
விடுதலை கிடைக்கவில்லை.
21என் மகளாகிய
மக்களுக்கு ஏற்பட்ட முறிவு
எனக்கே ஏற்பட்டதாகும்.
நான் துயருறுகிறேன்.
திகில் என்னைப் பற்றிக் கொண்டுள்ளது.
22அம்முறிவில் தடவக் கிலயாதில்
பொன்மெழுகு இல்லையா?
அங்கே மருத்துவர் இல்லையா?
அப்படியானால், என் மகளாகிய மக்கள்
ஏன் இன்னும் குணமாகவில்லை?