3பரிசை, கேடயம் தயார் செய்யுங்கள்;
போருக்குப் புறப்பட்டுச் செல்லுங்கள்.
4குதிரைகளுக்குச் சேணம் பூட்டுங்கள்;
படைவீரரே, அவற்றின்மீது ஏறுங்கள்;
தலைக் கவசங்களுடன்
அணிவகுத்து நில்லுங்கள்;
ஈட்டிகளைத் தீட்டிக்கொள்ளுங்கள்.
மார்புக் கவசங்களை
அணிந்து கொள்ளுங்கள்.
5நான் காண்பது என்ன?
அவர்கள் திகிலடைந்து
புறமுதுகிட்டு ஓடுகிறார்கள்;
அவர்களுடைய படைவீரர்கள்
முறியடிக்கப் படுகிறார்கள்;
திரும்பிப் பாராது தப்பி ஓடுகிறார்கள்;
6ஓட்டத்தில் வல்லவர்
ஓடிப்போக முடியாது;
படைவீரரும் தப்பியோட இயலாது;
வடக்கே யூப்பிரத்தீசு பேராற்றங்கரையில்
அவர்கள் தடுமாறிக் கீழே விழுவர்.
7நைல்நதி போல் பொங்கி எழுந்து,
அலைமோதும் நதிகளெனப்
பாய்ந்து வரும் இவன் யார்?
8நைல்நதிபோல் பொங்கி எழுந்து
அலைமோதும் நதிகளெனப்
பாய்ந்து வருகின்றது எகிப்து.
நான் பொங்கி எழுந்து,
மண்ணுலகை மூடிக்கொள்வேன்;
நகரையும் அதன் குடிகளையும்
அழித்தொழிப்பேன் என்று
அவன் சொல்லிக்கொள்கிறான்.
9குதிரைகளே, பாய்ந்து செல்லுங்கள்;
தேர்களே, விரைந்து ஓடுங்கள்;
படைவீரர்களே,
முன்னேறிச் செல்லுங்கள்.
எத்தியோப்பியரும் லீபியரும்
கேடயம் ஏந்தட்டும்!
லீதியர் அம்புகளைத் தொடுத்து
நாணேற்றட்டும்!
10அந்த நாள், படைகளின்
ஆண்டவராகிய தலைவரின் நாள்;
ஆண்டவர் தம் எதிரிகளைப்
பழிவாங்கும் நாள்,
வாள் உண்டு நிறைவுகொள்ளும்;
குருதி குடித்து வெறிகொள்ளும்.
வடக்கு நாட்டு யூப்பிரத்தீசு
பேராற்றங்கரையில்
படைகளின் ஆண்டவராகிய
தலைவருக்குப் பலியிடப்படும்.
11கன்னிப் பெண் எகிப்தே!
கிலயாதுக்குச் சென்று,
பொன் மெழுகு கொண்டுவா,
பல்வகை மருந்துகளை
நீ பயன்படுத்துவது வீணே!
உன் காயங்கள் ஆறவே ஆறா.
12மக்களினத்தார் உன் இழிவுபற்றிக்
கேள்வியுற்றனர்;
உன் அழுகுரல்
மண்ணுலகை நிறைந்தது;
படைவீரன் படைவீரனோடு
இடறிக்கொள்ள
இருவரும் சேர்ந்து கீழே விழுந்தனர்.
14எகிப்தில் அறிவியுங்கள்;
மிக்தோலில் பறைசாற்றுங்கள்;
மெம்பிசிலும் தகபனகேசிலும்
முரசறையுங்கள்;
அணிவகுத்து நில்; தயாராய் இரு!
உன்னைச் சுற்றிலும் உள்ளவை
வாளுக்கு இரையாகும்.
15உன் படைவீரர் வீழ்ச்சியுற்றது ஏன்?
அவர்கள் எதிர்த்து நிற்காதது ஏன்?
ஆண்டவர் அவனைத்
தள்ளிவிட்டதால் அன்றோ!
16அவர் பலரை இடறிவிழச் செய்தார்.
‘எழுந்திருங்கள், கொடுங்கோலன்
வாளினின்று தப்பிப்போம்;
நம் சொந்த மக்களிடம்
நம் தாய் நாட்டுக்கே
திரும்பிச் செல்வோம்’ என்று
ஒருவர் மற்றவரிடம் சொல்லிக்கொண்டனர்.
17‘வாய்ப்பை நழுவவிடும் வாயாடி’ என்று
எகிப்திய மன்னன் பார்வோனுக்குப்
பெயர் சூட்டுங்கள்.
18படைகளின் ஆண்டவர் என்னும்
பெயருடைய மன்னர் கூறுகிறார்:
வாழும் என் மேல் ஆணை!
மலைகளுக்குள் தாபோர் போலவும்
கடலோரத்துக் கர்மேல் போலவும்
ஒருவன் ஆற்றலுடன் வருவான்.
19மகள் எகிப்தே! அடிமைத்தனத்துக்கென
மூட்டை கட்டிக்கொள்;
மெம்பிசு அழிந்துபோகும்;
குடியிருப்பாரற்றுப் பாழாய்ப் போகும்.
20எகிப்து ஓர் அழகான இளம்பசு!
வடக்கினின்று உண்ணி ஒன்று
அவள்மீது வந்து அமர்ந்துள்ளது.
21அவள் நடுவில் உள்ள கூலிப் படையினர்
கொழுத்த கன்று போன்றவர்கள்;
அவர்களும் புறமுதுகுகாட்டி
ஒருமிக்க ஓடிவிட்டார்கள்.
அவர்களால்
எதிர்த்து நிற்க முடியவில்லை.
அவர்களுடைய அழிவின் நாள்,
அவர்களது தண்டனையின் காலம்
அவர்கள்மேல் வந்துற்றது.
22நழுவிச் செல்லும் பாம்பு போன்று
அவள் சீறுகின்றாள்;
அவள் எதிரிகள் வலிமையோடு
அணிவகுத்து வருகின்றார்கள்;
மரம் வெட்டிகள் போல் கோடரிகளோடு
அவளை எதிர்த்து வருகின்றார்கள்.
23அவளது காடு
ஆள் நுழையமுடியாததாய் இருக்கிறது.
அவர்கள் அதை வெட்டுவார்கள்,
என்கிறார் ஆண்டவர்.
அவர்கள் வெட்டுக்கிளிகளைவிட
மிகுதியானவர்கள்.
அவர்களைக் கணக்கிட முடியாது.
24மகள் எகிப்து
இகழ்ச்சிக்கு உள்ளாவாள்;
வடக்கு நாட்டு மக்களிடம்
அவள் கையளிக்கப்படுவாள்.
27என் ஊழியன் யாக்கோபே, அஞ்சாதே;
இஸ்ரயேலே, கலங்காதே!
தொலை நாட்டினின்று
உன்னை நான் மீட்பேன்;
அடிமைத்தன நாட்டினின்று
உன் வழிமரபினரை விடுவிப்பேன்;
யாக்கோபு திரும்பிவந்து
அமைதியில் இளைப்பாறுவான்;
அவனை அச்சுறுத்துவார் எவருமிலர்.
28என் ஊழியன் யாக்கோபே,
அஞ்சாதே, என்கிறார் ஆண்டவர்.
நான் உன்னோடு இருக்கிறேன்;
எந்த மக்களினத்தாரிடையே
உன்னைத் துரத்தியடித்தேனோ,
அவர்கள் அனைவரையும்
முற்றிலும் அழித்தொழிப்பேன்;
உன்னையோ
முற்றிலும் அழிக்க மாட்டேன்;
உன்னை நீதியோடு தண்டிப்பேன்;
உன்னை எவ்வகையிலேனும்
தண்டியாது விடேன்.