1ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: “அக்காலத்தில் இஸ்ரயேலின் குடும்பங்கள் எல்லாவற்றுக்கும் நான் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்.”

2ஆண்டவர் கூறுவது இதுவே:

“வாளுக்குத் தப்பிப் பிழைத்த மக்கள்

பாலைநிலத்தில்

என் அருளைக் கண்டடைந்தனர்;

இஸ்ரயேலர் இளைப்பாற விரும்பினர்.

3ஆண்டவர் அவர்களுக்குத்*

தொலையிலிருந்து தோன்றினார்.

உனக்கு நான்

முடிவில்லாத அன்பு காட்டியுள்ளேன்;

எனவே, பேரன்பால்

உன்னை ஈர்த்துள்ளேன்.

4கன்னிப் பெண்ணாகிய இஸ்ரயேலே!

உன்னை நான் மீண்டும்

கட்டி எழுப்புவேன்;

நீயும் கட்டி எழுப்பப்படுவாய்;

மீண்டும் உன் மேளதாளங்களை

நீ எடுத்துக் கொள்வாய்;

மகிழ்ச்சியுற்றோர் போல

நடனம் ஆடிக் கொண்டு

நீ வெளியேறுவாய்;

5சமாரியாவின் மலைகள்மேல்

திராட்சைத் தோட்டங்களை

நீ மீண்டும் அமைப்பாய்;

தோட்டக்காரர் பயிரிட்டு

விளைச்சலை உண்டு மகிழ்வர்.

6ஏனெனில், ஒரு நாள் வரும்;

அப்பொழுது எப்ராயிம் மலையில்,

‘எழுந்திருங்கள்;

நாம் சீயோனுக்குப் போவோம்;

நம் கடவுளாகிய ஆண்டவரிடம்

செல்வோம்’ என்று

காவலர் அழைப்பு விடுப்பர்.

7ஆண்டவர் தொடர்ந்து கூறுகிறார்:

யாக்கோபை முன்னிட்டு

மகிழ்ந்து பாடுங்கள்;

மக்களினத் தலைவனைக் குறித்து

ஆர்ப்பரியுங்கள்;

முழக்கம் செய்யுங்கள், புகழ்பாடுங்கள்;

‘ஆண்டவர் இஸ்ரயேலில்

எஞ்சியோராகிய தம் மக்களை

மீட்டருளினார்!’ என்று

பறைசாற்றுங்கள்.

8இதோ! வடக்கு நாட்டிலிருந்து

அவர்களை நான் அழைத்து வருவேன்;

மண்ணுலகின் கடை எல்லைகளினின்று

அவர்களைக் கூட்டிச் சேர்ப்பேன்.

அவர்களுள் பார்வையற்றோரும்

காலூனமுற்றோரும் கருவுற்றோரும்

பேறுகாலப் பெண்டிரும் அடங்குவர்;

பெரும் கூட்டமாய் அவர்கள்

இங்குத் திரும்பி வருவர்.

9அழுகையோடு அவர்கள்

திரும்பி வருவார்கள்;

ஆறுதலளித்து* அவர்களை

நான் அழைத்து வருவேன்;

நீரோடைகள் ஓரமாக அவர்களை

நான் நடத்திச் செல்வேன்;

இடறிவிழாதவாறு சீரான வழியில்

அவர்கள் நடக்கச் செய்வேன்.

ஏனெனில், நான்

இஸ்ரயேலின் தந்தை,

எப்ராயிமோ என் தலைப்பிள்ளை.

10மக்களினத்தாரே,

ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்;

தொலையிலுள்ள கடலோரப் பகுதிகளில்

அதை அறிவியுங்கள்;

‘இஸ்ரயேலைச் சிதறடித்தவரே

அதைக் கூட்டிச் சேர்ப்பார்;

ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல்

அதைக் காப்பார்’ என்று சொல்லுங்கள்.

11ஏனெனில், யாக்கோபை

ஆண்டவர் மீட்டார்;

அவனிலும் வலியவன் கையினின்று

அவனை விடுவித்தார்.

12அவர்கள் வந்து சீயோனின் உச்சியில்

பாடி மகிழ்வார்கள்;

தானியம், திராட்சை இரசம்,

எண்ணெய், ஆட்டுக்குட்டிகள்,

கன்றுகாலிகள், ஆகிய

ஆண்டவரின் கொடைகளை முன்னிட்டுப்

பூரிப்படைவார்கள்;

அவர்களது வாழ்க்கை

நீர்வளம் மிக்க

தோட்டம் போல் இருக்கும்;

அவர்கள் இனிமேல்,

ஏங்கித் தவிக்க மாட்டார்கள்.

13அப்பொழுது கன்னிப்பெண்கள்

நடனம் ஆடிக் களித்திருப்பர்;

அவ்வாறே இளைஞரும் முதியோரும்

மகிழ்ந்திருப்பர்;

அவர்களுடைய அழுகையை நான்

மகிழ்ச்சியாக மாற்றுவேன்;

அவர்களுக்கு ஆறுதல் அளிப்பேன்;

துன்பத்திற்குப் பதிலாக

இன்பத்தை அருள்வேன்.

14குருக்களைச் செழுமையால் நிரப்புவேன்;

என் மக்கள் எனது வள்ளன்மையால்

நிறைவு பெறுவர், என்கிறார் ஆண்டவர்.

15ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்;

இராமாவிலே ஒரு குரல் கேட்கின்றது;

ஒரே புலம்பலும் அழுகையுமாய்

இருக்கின்றது.

இராகேல் தம் குழந்தைகளுக்காக

அழுதுகொண்டிருக்கின்றார்;

ஆறுதல் பெற அவர் மறுக்கின்றார்;

ஏனெனில், அவருடைய குழந்தைகள்

அவரோடு இல்லை.

16ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்;

நீ அழுகையை நிறுத்து;

கண்ணீர் வடிக்காதே;

ஏனெனில் உனது உழைப்புக்குப்

பயன் கிடைக்கும்,

என்கிறார் ஆண்டவர்.

தங்கள் பகைவரின் நாட்டினின்று

அவர்கள் திரும்பி வருவார்கள்.

17உன் எதிர்காலத்தைப் பொறுத்தமட்டில்

நம்பிக்கை உண்டு,

என்கிறார் ஆண்டவர்.

உன் பிள்ளைகள்

தம் நாட்டுக்குத் திரும்புவர்.

18எப்ராயிமின் புலம்பலை

நான் உண்மையாகவே கேட்டேன்;

“பணியாத இளம் காளையை

அடித்துத் திருத்துவதுபோல

நீர் என்னைத் தண்டித்துத் திருத்தினீர்;

நீர் என்னைத் திரும்ப

அழைத்துச் செல்லும்;

நானும் திரும்பி வரவேன்;

ஏனெனில், என் கடவுளாகிய

ஆண்டவர் நீரே.

19உம்மை விட்டு விலகிச் சென்றபின்

நான் மனம் வருந்தினேன்;

பயிற்றுவிக்கப்பட்டபின்

நான் மார்பில் அறைந்து கொண்டேன்;

என் இளமையின் அவமானம்

இன்னும் என்னிடம் காணப்பட்டது.

நான் வெட்கித் தலை குனிந்தேன்.”

20“எப்ராயிம் என் அருமை மகன் அல்லவா?

நீ என் அன்புக் குழந்தை அல்லவா?

உனக்கு எதிராக நான்

அடிக்கடி பேசியபோதிலும்,

உன்னை நான் இன்னும்

நினைவில் கொண்டிருக்கிறேன்;

உனக்காக என் இதயம்

ஏங்கித் தவிக்கின்றது;

திண்ணமாய் உனக்கு நான்

இரக்கம் காட்டுவேன்”

என்கிறார் ஆண்டவர்.

21உனக்கெனச் சாலை

அடையாளங்களை அமைத்துக்கொள்;

உனக்கெனக் “கைகாட்டிகளை

நாட்டிக்கொள்;

நீ நடந்து சென்ற வழியாகிய

நெடுஞ்சாலையை நினைவில் கொள்.

கன்னிப் பெண்ணாகிய இஸ்ரயேலே,

திரும்பி வா;

இந்த உன் நகரங்களுக்குத் திரும்பி வா.

22நம்பிக்கைத் துரோகம் செய்த மகளே!

இன்னும் எத்துணைக் காலம்

நீ அலைந்து திரிவாய்?

ஆண்டவராகிய நான்

விந்தையான ஒன்றை

உலகில் படைத்துள்ளேன்;

ஒரு பெண் தன் கணவனைப்

பாதுகாக்கின்றாள்.”

23இஸ்ரயேலின் கடவுளாகிய

படைகளின் ஆண்டவர்

கூறுவது இதுவே;

அடிமைத்தனத்தினின்று அவர்களை

நான் திரும்பக் கொணரும் பொழுது,

‘நீதியின் இருப்பிடமே,

தூய்மை மிகு மலையே!

ஆண்டவர் உனக்கு

ஆசி வழங்குவாராக!’

என்னும் வாழ்த்துரை

யூதா நாட்டிலும்

அதன் நகர்களிலும்

மீண்டும் எதிரொலிக்கும்.

24யூதாவிலும் அதன் எல்லா நகர்களிலும்

மக்கள் குடியிருப்பர்;

விவசாயிகளும், ஆடு மேய்க்கும்

இடையர்களும் சேர்ந்து வாழ்வர்.

25ஏனெனில், சோர்ந்த உள்ளங்களுக்கு

நான் புத்துயிர் அளிப்பேன்;

வாடிய நெஞ்சங்களுக்கு

நான் நிறைவளிப்பேன்.

26அப்பொழுது நான்

விழித்தெழுந்து பார்த்தேன்;

என் தூக்கம்

எனக்கு இன்பமாய் இருந்தது.

27இதோ நாள்கள் வருகின்றன. அப்பொழுது இஸ்ரயேல் வீட்டையும் யூதா வீட்டையும் மனிதர்கள், விலங்குகளின் புதுப்பிறப்புகளால் நிரப்புவேன், என்கிறார் ஆண்டவர்.
28பிடுங்கவும் தகர்க்கவும், அழிக்கவும் கவிழ்க்கவும், தீங்கிழைக்கவும் அவர்களைப் பொறுத்தமட்டில் நான் எப்படி விழிப்பாய் இருந்தேனோ, அப்படியே கட்டவும் நடவும் விழிப்பாய் இருப்பேன், என்கிறார் ஆண்டவர்.

29அக்காலத்தில் அவர்கள்,

‘தந்தையர் புளித்த திராட்சைப்

பழங்களைத் தின்ன,

பிள்ளைகளின் பல் கூசிற்றாம்’

என்று சொல்ல மாட்டார்கள்.

30ஆனால், எல்லாரும் அவரவர் தம்

தீச்செயலின் பொருட்டே சாவர்.

புளித்த திராட்சைப் பழம்

தின்பவனுக்குத்தான் பல் கூசும்.

31இதோ, நாள்கள் வருகின்றன. அப்பொழுது நான் இஸ்ரயேல் வீட்டாரோடும் யூதாவின் வீட்டாரோடும் புதிய உடன்படிக்கை ஒன்றைச் செய்து கொள்வேன், என்கிறார் ஆண்டவர்.
32அவர்களுடைய மூதாதையரை எகிப்து நாட்டினின்று விடுவிப்பதற்காக, அவர்களை நான் கைப்பிடித்து நடத்தி வந்தபொழுது அவர்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையைப் போன்று இது இராது. நான் அவர்களின் தலைவராய் இருந்தும், என் உடன்படிக்கையை அவர்கள் மீறி விட்டார்கள், என்கிறார் ஆண்டவர்.
33அந்நாள்களுக்குப் பிறகு, இஸ்ரயேல் வீட்டாரோடு நான் செய்யவிருக்கும் உடன்படிக்கை இதுவே; என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்; அதை அவர்களது இதயத்தில் எழுதிவைப்பேன். நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள், என்கிறார் ஆண்டவர்.
34இனிமேல் எவரும் ‘ஆண்டவரை அறிந்துகொள்ளும்’ எனத் தமக்கு அடுத்திருப்பவருக்கோ சகோதரருக்கோ கற்றுத்தர மாட்டார். ஏனெனில் அவர்களுள் பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் என்னை அறிந்துகொள்வர், என்கிறார் ஆண்டவர். அவர்களது தீச்செயலை நான் மன்னித்துவிடுவேன்; அவர்களுடைய பாவங்களை இனிமேல் நினைவு கூறமாட்டேன்.

35ஆண்டவர் பகலில் ஒளி வீசக்

கதிரவனை ஏற்படுத்தியுள்ளார்;

இரவில் ஒளி கொடுக்க

நிலாவையும் விண்மீன்களையும்

நியமித்துள்ளார்;

அலைகள் முழங்குமாறு

கடல் கொந்தளிக்கச் செய்துள்ளார்;

‘படைகளின் ஆண்டவர்’ என்பது

அவரது பெயராம்.

அவர் கூறுவது இதுவே;

36மேற்கண்ட நியமங்கள்

என் திருமுன்னின்று

மறைந்துவிடுமாயின்,

இஸ்ரயேலின் வழிமரபினர்

என் முன்னிலையில்

ஒரு தனி இனமாய்

என்றென்றும் இல்லாமல்

போய்விடுவர், என்கிறார் ஆண்டவர்.

37ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:

மேலே வான்வெளி

அளக்கப்படக் கூடுமாயின்,

கீழே பூவுலகின் அடித்தளங்களைக்

கண்டுபிடிக்க இயலுமாயின்,

இஸ்ரயேலின் வழிமரபினரின்

அனைத்துச் செயல்களையும் முன்னிட்டு

அவர்கள் அனைவரையும்

நான் தள்ளிவிடுவேன்,

என்கிறார் ஆண்டவர்.

38இதோ, நாள்கள் வருகின்றன. அப்பொழுது ஆண்டவருக்காக இந்நகர் அனனியேல் கோபுரம் முதல் மூலை வாயில்வரை கட்டியெழுப்பப்படும், என்கிறார் ஆண்டவர்.
39அதன் எல்லை நேராகக் காரேபு மலைவரை சென்று, கோவாவை நோக்கித் திரும்பும்.
40பிணச் சாம்பல் பள்ளத்தாக்கு முழுவதும், கிதரோன் நீரோடை முதல் கிழக்கே குதிரை வாயிலின் மூலைவரை உள்ள வயல்வெளி முழுவதும் ஆண்டவருக்குப் புனிதமானதாய் இருக்கும். இந்த இடம் இனி என்றுமே பிடுங்கி எறியப் படாது; அழித்தொழிக்கப்படாது.

31:15 தொநூ 35:16-19; மத் 2:18. 31:29 எசே 18:2. 31:31 மத் 26:28; மாற் 14:24; லூக் 22:20; 1 கொரி 11:25; 2 கொரி 3:6. 31:31-34 எபி 8:8-12. 31:33 எபி 10:16.
31:3 ‘எனக்கு’ என்பது எபிரேய பாடம். 31:9 ‘மன்றாட்டுக்களோடு’ என்பது எபிரேய பாடம்.