“ஆண்டவர் கூறுவது இதுவே:
சாவுக்குரியோர் சாவர்
வாளுக்குரியோர் வாளால் மாள்வர்;
பஞ்சத்துக்குரியோர் பஞ்சத்தால் மடிவர்;
நாடு கடத்தலுக்குரியோர் நாடு கடத்தப்படுவர்.”
5எருசலேமே! யாராவது
உனக்கு இரக்கம் காட்டுவார்களா?
உன் நிலைபற்றி வருந்துவார்களா?
திரும்பிப் பார்த்து நலம் விசாரிப்பார்களா?
6ஆண்டவர் கூறுவது:
“நீ என்னைப் புறக்கணித்து விட்டாய்;
என்னைக் கைவிட்டு ஓடிவிட்டாய்;
எனவே, உன்னை அழிப்பதற்கு
என் கையை உனக்கு
எதிராய் நீட்டினேன்;
இரக்கம் காட்டிச் சலித்துப் போனேன்.
7நாட்டின் வாயில்களில் நான்
அவர்களை முறத்தால்
தூற்றிச் சிதறடித்தேன்;
அவர்களைத் தனியாகத்
தவிக்க விட்டேன்;
என் மக்களை அழித்துவிட்டேன்;
ஏனெனில் அவர்கள் தங்கள்
தீயவழியிலிருந்து திரும்பவில்லை.
8கடற்கரை மணலைவிட அவர்களின்
கைம்பெண்களின் எண்ணிக்கையை
மிகுதியாக்கினேன்;
இளைஞர்களின் அன்னையருக்கு
எதிராகக் கொலைஞனைப்
பட்டப்பகலில் கூட்டி வந்தேன்;
திடீரென அவள் துயரும் திகிலும்
அடையச் செய்தேன்;
9எழுவரைப் பெற்றவள் சோர்வுற்றாள்;
மூச்சுத் திணறினாள்;
அவள் வாழ்வில்
கதிரவன் மறைந்து விட்டான்;
அவள் வெட்கி நாணமுற்றாள்;
எஞ்சியிருப்போரை
அவர்களுடைய எதிரிகளின்முன்
வாளுக்கு இரையாக்குவேன்,”
என்கிறார் ஆண்டவர்.
15ஆண்டவரே, உமக்கு எல்லாம் தெரியும்;
நீர் என்னை அறிவீர்;
என்னை நினைவுகூரும்;
எனக்கு உதவியருளும்;
என்னைத் துன்புறுத்துவோரை
என் பொருட்டுப் பழிவாங்கும்;
நீர் பொறுமையுள்ளவர்;
என்னைத் தள்ளிவிடாதேயும்;
உம்பொருட்டு நான்
வசைமொழிகளுக்கு ஆளாகிறேன்
என்பதை நினைவில் கொள்ளும்.
16நான் உம் சொற்களைக்
கண்டடைந்தேன்;
அவற்றை உட்கொண்டேன்;
உன் சொற்கள் எனக்கு மகிழ்ச்சி தந்தன;
என் உள்ளத்திற்கு உவகை அளித்தன.
ஏனெனில், படைகளின் ஆண்டவரே,
உம் பெயரே எனக்கு வழங்கலாயிற்று.
17களியாட்டக் கூட்டங்களில் அமர்ந்து
நான் மகிழ்ச்சி கொண்டாடவில்லை.
உம் கை என்மேல் இருந்ததால்
நான் தனியனாய் இருந்தேன்.
சினத்தால் நீர் என்னை நிரப்பியிருந்தீர்.
18எனக்கு ஏன் தீராத வேதனை?
குணமாகாக் கொடிய காயம்?
நீர் எனக்குக் கானல் நீரென,
ஏமாற்றும் ஓடையென ஆகிவிட்டீரோ!
19எனவே, ஆண்டவர் கூறுவது இதுவே:
“நீ திரும்பி வந்தால் நான் உன்னை
முன்னைய நிலைக்குக்
கொண்டு வருவேன்.
என்முன் வந்து நிற்பாய்;
பயனில நீக்கிப் பயனுள பேசின்,
நீ என் இறைவாக்கினனாக இருப்பாய்.
அவர்கள் உன்னிடம்
திரும்பி வருவார்கள்;
நீ அவர்களிடம் திரும்ப வேண்டாம்.
20நான் உன்னை அவர்கள்முன்
வலிமை வாய்ந்த
வெண்கலச் சுவராக்குவேன்;
அவர்கள் உனக்கு எதிராய்ப்
போராடுவார்கள்; ஆனால்,
உன்மேல் வெற்றி கொள்ள மாட்டார்கள்;
ஏனெனில் உன்னை
விடுவிக்கவும் காக்கவும்
நான் உன்னோடு இருக்கிறேன்,
என்கிறார் ஆண்டவர்.
21தீயோரின் கையினின்று
நான் உன்னைக் காப்பேன்;
முரடரின் பிடியினின்று
உன்னை மீட்பேன்.”