எரேமியாவின் அழைப்பு

1பென்யமின் நாட்டு அனத்தோத்தில் இருந்த குருக்களுள் ஒருவரான இலிக்கியாவின் மகன் எரேமியாவின் சொற்கள்:
2ஆமோன் மகனும் யூதா அரசருமான யோசியாவின் காலத்தில், அவரது ஆட்சியின் பதின்மூன்றாம் ஆண்டில் ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது.
3யோசியா மகனும் யூதா அரசனுமாகிய யோயாக்கீம் காலத்திலும், யோசியா மகனும் யூதா அரசனுமாகிய செதேக்கியா ஆட்சியேற்ற பதினோராம் ஆண்டின் இறுதி வரையிலும், அதாவது எருசலேம் மக்கள் நாடுகடத்தப்பட்ட அதே ஆண்டின் ஐந்தாம் மாதம்வரை ஆண்டவரின் வாக்கு அவருக்கு அருளப்பட்டது.

4எனக்கு அருளப்பட்ட

ஆண்டவரின் வாக்கு:

5“தாய் வயிற்றில் உன்னை நான்

உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன்;

நீ பிறக்குமுன்பே உன்னைத்

திருநிலைப்படுத்தினேன்;

மக்களினங்களுக்கு இறைவாக்கினனாக

உன்னை ஏற்படுத்தினேன்.”

6நான், “என் தலைவராகிய ஆண்டவரே,

எனக்குப் பேசத் தெரியாதே,

சிறுபிள்ளைதானே” என்றேன்.

7ஆண்டவர் என்னிடம் கூறியது:

“‘சிறுபிள்ளை நான்’

என்று சொல்லாதே;

யாரிடமெல்லாம் உன்னை

அனுப்புகின்றேனோ

அவர்களிடம் செல்;

எவற்றை எல்லாம் சொல்லக்

கட்டளை இடுகின்றேனோ

அவற்றைச் சொல்.

8அவர்கள்முன் அஞ்சாதே.

ஏனெனில், உன்னை விடுவிக்க

நான் உன்னோடு இருக்கின்றேன்,

என்கிறார் ஆண்டவர்.”

9ஆண்டவர் தம் கையை நீட்டி

என் வாயைத் தொட்டு

என்னிடம் கூறியது:

“இதோ பார்! என் சொற்களை

உன் வாயில் வைத்துள்ளேன்.

10பிடுங்கவும் தகர்க்கவும்,

அழிக்கவும் கவிழ்க்கவும்,

கட்டவும் நடவும்,

இன்று நான் உன்னை

மக்களினங்கள் மேலும்}

அரசுகள் மேலும்

பொறுப்பாளனாக ஏற்படுத்தியுள்ளேன்”.

11ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: ‘எரேமியா, நீ காண்பது என்ன?’ என்னும் கேள்வி எழ, “வாதுமை* மரக்கிளையைக் காண்கிறேன்” என்றேன்.
12அதற்கு ஆண்டவர் என்னிடம், “நீ கண்டது சரியே. என் வாக்கைச் செயலாக்க நானும் விழிப்பாயிருப்பேன்” என்றார்.
13ஆண்டவரின் வாக்கு இரண்டாம் முறை எனக்கு அருளப்பட்டது: “நீ காண்பது என்ன?” என்னும் கேள்வி எழ, “கொதிக்கும் பானையைக் காண்கிறேன். அதன் வாய் வடக்கிலிருந்து சாய்ந்திருக்கின்றது” என்றேன்.
14ஆண்டவர் என்னிடம் கூறியது: “நாட்டில் குடியிருப்போர் அனைவர் மீதும் வடக்கிலிருந்தே தீமை பாய்ந்து வரும்.”
15இதோ வடக்கிலுள்ள அரச குடும்பத்தார் அனைவரையும் நான் அழைக்கிறேன், என்கிறார் ஆண்டவர். அவர்கள் வந்து ஒவ்வொருவரும் எருசலேமின் வாயில்களிலும், அதன் சுற்றுச் சுவர்களுக்கு எதிரிலும், யூதா நகர்களுக்கு எதிரிலும் தம் அரியணையை அமைப்பர்.
16என் மக்களின் தீய செயல்களுக்காக அவர்களுக்கெதிராகத் தீர்ப்புக் கூறப் போகிறேன். அவர்கள் என்னைப் புறக்கணித்தார்கள். வேற்றுத் தெய்வங்களுக்குத் தூபம் காட்டினார்கள். தங்கள் கைவேலைப்பாடுகளை வழிபட்டார்கள்.
17நீயோ உன் இடையை வரிந்து கட்டிக்கொள். புறப்படு, நான் கட்டளையிடும் அனைத்தையும் அவர்களிடம் சொல். அவர்கள் முன் கலக்கமுறாதே. இல்லையேல், அவர்கள் முன் உன்னைக் கலக்கமுறச் செய்வேன்.
18இதோ, இன்று நான் உன்னை நாடு முழுவதற்கும், அதாவது, யூதாவின் அரசர்களுக்கும் அதன் தலைவர்களுக்கும் அதன் குருக்களுக்கும் நாட்டின் மக்களுக்கும் எதிராக அரண்சூழ் நகராகவும் இரும்புத் தூணாகவும் வெண்கலச் சுவராகவும் ஆக்கியுள்ளேன்.
19அவர்கள் உனக்கு எதிராகப் போராடுவார்கள். எனினும் உன்மேல் வெற்றி கொள்ள அவர்களால் இயலாது. ஏனெனில் உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்” என்கிறார் ஆண்டவர்.

1:2 2 அர 22:3-23:7; 2 குறி 24:8-35:19. 1:3 2 அர 23:36-24:7,18-25:21; 2 குறி 36:5-8,11-21.
1:11 எபிரேயத்தில், ‘விழிப்பாயிருக்கும் மரம்’ என்பது பொருள்.