1ஆனால் துயரமுற்றிருந்த நாட்டினருக்கு மனச்சோர்வு தோன்றாது; முற்காலத்தில் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் ஆண்டவர் அவமதிப்புக்கு உட்படுத்தினார்; பிற்காலத்திலோ, பெருங்கடல் வழிப்பகுதி யோர் தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பு, பிற இனத்தார் வாழும் கலிலேயா நாடு ஆகிய பகுதிகளுக்கு மேன்மை வரச்செய்வார்.

வரவிருக்கும் அரசர்

2காரிருளில் நடந்துவந்த மக்கள்

பேரொளியைக் கண்டார்கள்;

சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில்

குடியிருப்போர்மேல்

சுடர் ஒளி உதித்துள்ளது.

3ஆண்டவரே! அந்த இனத்தாரைப்

பல்கிப் பெருகச் செய்தீர்;

அவர்கள் மகிழ்ச்சியை

மிகுதிப்படுத்தினீர்;

அறுவடை நாளில் மகிழ்ச்சியுறுவது போல்

உம் திருமுன் அவர்கள்

அகமகிழ்கிறார்கள்;

கொள்ளைப் பொருளைப் பங்கிடும் போது

அக்களிப்பதுபோல் களிகூர்கிறார்கள்.

4மிதியான் நாட்டுக்குச் செய்தது போல

அவர்களுக்குச் சுமையாக இருந்த

நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர்;

அவர்கள் தோளைப் புண்ணாக்கிய

தடியைத் தகர்த்துப் போட்டீர்;

அவர்களை ஒடுக்குவோரின்

கொடுங்கோலை ஓடித்தெறிந்தீர்.

5அமளியுற்ற போர்க்களத்தில்

போர்வீரன் அணிந்திருந்த

காலணிகளும், இரத்தக் கறைபடிந்த

ஆடைகள் அனைத்தும்

நெருப்புக்கு இரையாக எரிக்கப்படும்.

6ஏனெனில், ஒரு குழந்தை

நமக்குப் பிறந்துள்ளார்;

ஓர் ஆண்மகவு நமக்குத்

தரப்பட்டுள்ளார்;

ஆட்சிப்பொறுப்பு

அவர் தோள்மேல் இருக்கும்;

அவர் திருப்பெயரோ

‘வியத்தகு ஆலோசகர்,

வலிமைமிகு இறைவன்,

என்றுமுள தந்தை,

அமைதியின் அரசர்’

என்று அழைக்கப்படும்.

7அவரது ஆட்சியின் உயர்வுக்கும்

அமைதி நிலவும் அவரது அரசின்

வளர்ச்சிக்கும் முடிவு இராது;

தாவீதின் அரியணையில் அமர்ந்து

தாவீதின் அரசை நிலைநாட்டுவார்;

இன்றுமுதல் என்றென்றும்

நீதியோடும் நேர்மையோடும்

ஆட்சிபுரிந்து அதை

நிலை பெயராது உறுதிப்படுத்துவார்;

படைகளின் ஆண்டவரது பேரார்வம்

இதைச் செய்து நிறைவேற்றும்.

8யாக்கோபுக்கு எதிராக ஓர் வார்த்தையை

ஆண்டவர் அனுப்பியுள்ளார்;

அது இஸ்ரயேல்மேல் இறங்கித்

தன் செயலைச் செய்யும்.

இஸ்ரயேலுக்குத் தண்டனைத் தீர்ப்பு

9எப்ராயிமியர், சமாரியாவின் குடிகள்

ஆகிய அனைத்து மக்களும்

இதை அறிந்து கொள்வார்கள்.

10செருக்கினாலும் இதயத்தில் எழும்

இறுமாப்பினாலும்

அவர்கள் சொல்லுவதாவது:

“செங்கல் கட்டடம் இடிந்து வீழ்ந்தது:

எனினும், செதுக்கிய கற்களால்

நாங்கள் கட்டியெழுப்புவோம்.

காட்டத்தி மரங்கள்

வெட்டி வீழ்த்தப்பட்டன;

எனினும், அவற்றிற்குப் பதிலாகக்

கேதுரு மரங்களை வைப்போம்”.

11ஆதலால் ஆண்டவர்

இரட்சீனின் அதிகாரிகளை

அவர்களுக்கு எதிராய்க்

கிளர்ந்தெழச் செய்தார்;

அவர்கள் பகைவரைத் தூண்டி விட்டார்.

12கிழக்கிலிருந்து சிரியரும்,

மேற்கிலிருந்து பெலிஸ்தியரும்

வந்தார்கள்;

தங்கள் வாயை விரிவாய்த்திறந்து

இஸ்ரயேலரை விழுங்கிவிட்டார்கள்;

இவையெல்லாம் நடந்தும்,

அவரது சீற்றம் தணியவிலலை;

ஓங்கிய அவரது சினக் கை

இன்னும் மடங்கவில்லை.

13தங்களை நொறுக்க வைத்தவரிடம்

மக்கள் திரும்பவில்லை;

படைகளின் ஆண்டவரைத்

தேடவுமில்லை.

14ஆதலால், ஆண்டவர் இஸ்ரயேலில்

உயர்ந்தோர்முதல் தாழ்ந்தோர்வரை

அனைவரையும்,

ஒலிவமரக்கிளையையும் நாணலையும்

ஒரேநாளில் வெட்டி வீழ்த்துவார்;

15முதியவரும், மதிப்புமிக்கவருமே

உயர்ந்தோர்;

பொய்யைப் போதிக்கும்

இறைவாக்கினரோ தாழ்ந்தோர்.

16இந்த மக்களை வழிநடத்தியோர்

அவர்களை நெறிபிறழச் செய்தனர்;

அவர்களால் வழிநடத்தப்பட்டவரோ

அழிந்துபோயினர்.

17ஆதலால், அவர்களுடைய

இளைஞரைக் குறித்து

என் தலைவருக்கு மகிழ்ச்சி இல்லை;

அவர்களிடையே வாழும் திக்கற்றோர்,

கைம்பெண்கள்மேல்

இரக்கம் காட்டவில்லை;

அவர்கள் அனைவரும்

இறைப்பற்று இல்லாதவர்கள்;

தீச்செயல் புரிபவர்கள்;

எல்லாரும் மதிகேட்டையே பேசினர்;

இவையெல்லாம் நடந்தும்

அவர் சீற்றம் தணியவில்லை;

ஓங்கிய அவரது சினக் கை

இன்னும் மடங்கவில்லை.

18கொடுமை தீயைப்போல்

கொழுந்து விட்டு எரிந்தது;

அது முட்புதர்களையும்

நெருஞ்சி முள்களையும் தீய்த்துவிட்டது;

காட்டின் அடர்ந்த பகுதிகளை

அது கொளுத்திவிட்டது;

அதனால் புகைமண்டலம் சுழன்று

மேலே எழுந்தது.

19படைகளின் ஆண்டவரது சினத்தால்

நாடு நெருப்புக்கு இரையானது;

மக்கள் நெருப்புக்கு

விறகைப் போல் ஆனார்கள்;

ஒருவரும் தம் அடுத்திருப்பாரை

விட்டு வைக்கவில்லை.

20அவர்கள் வலப்புறம் காண்பனவற்றைப்

பிடுங்கித் தின்றும் பசி அடங்கவில்லை;

இடப்புறம் இருப்பனவற்றை

எடுத்து விழுங்கியும்

மனம் நிறைவடையவில்லை;

ஒவ்வொருவரும் தம் குழந்தையின்

சதையைக் கூடத் தின்றனர்;

21மனாசே குடும்பத்தார்

எப்ராயிம் குடும்பத்தாரையும்

எப்ராயிம் குடும்பத்தார்

மனாசே குடும்பத்தாரையும்

கொன்று தின்றனர்;

இரு குடும்பத்தாரும் ஒன்றுசேர்ந்து

யூதாவின் மேல் பாய்ந்தனர்;

இவையெல்லாம் நடந்தும்

அவரது சீற்றம் தணியவில்லை;

ஓங்கிய அவரது சினக் கை

இன்னும் மடங்கவில்லை;


9:1 மத் 4:15. 9:2 மத் 4:16; லூக் 1:79. 9:7 லூக் 1:32-33.