1நீர் வானங்களைப் பிளந்து

இறங்கி வரமாட்டீரா?

மலைகள் உம் திருமுன் நடுநடுங்குமே!

2விறகின்மேல் தீ

கொழுந்துவிட்டு எரிவது போலும்,

தண்ணீரை நெருப்பு

கொதிக்கச் செய்வது போலும்,

அவற்றின் நிலைமை இருக்கும்.

இவற்றால் உம் பெயர்

உம் பகைவருக்குத் தெரியவரும்;

வேற்றினத்தார் உம் திருமுன் நடுங்குவர்.

3நாங்கள் எதிர்பாராத

அச்சம் தரும் செயல்களை

நீர் செய்தபோது நீர் இறங்கி வந்தீர்;

மலைகள் உம் முன்னே உருகி ஓடின!

4தம்மை நம்பியிருப்போருக்காகச்

செயலாற்றும் கடவுள்

உம்மையன்றி வேறு யார்?

முற்காலம் முதல் இதுபற்றி

எவரும் கேள்வியுற்றதில்லை;

செவியுற்றதுமில்லை,

கண்ணால் பார்த்ததுமில்லை.

5மகிழ்ச்சியுடன்

நேர்மையைக் கடைப்பிடிப்போர்க்கும்

உம்மையும் உம் வழிகளையும்

நினைவில் கொள்வோர்க்கும்

நீர் துணை செய்ய விரைகிறீர்;

இதோ, நீர் சினமடைந்தீர்;

நாங்கள் பாவம் செய்தோம்;

நெடுங்காலமாய்ப் பாவம் செய்திருக்க,

நாங்கள் மீட்கப்படுவது எங்ஙனம்?

6நாங்கள் அனைவரும்

தீட்டுப்பட்டவரைப்போல் உள்ளோம்;

எங்கள் நேரிய செயல்கள் எல்லாம்

அழுக்கடைந்த ஆடைபோல் ஆயின;

நாங்கள் யாவரும் இலைபோல்

கருகிப் போகின்றோம்;

எங்கள் தீச்செயல்கள்

காற்றைப் போல்

எங்களை அடித்துச் சென்றன.

7உம் பெயரைப் போற்றுவார்

எவரும் இல்லை;

உம்மைப் பற்றிக்கொள்ள முயல்பவர்

எவரும் இல்லை;

நீர் உம் முகத்தை

எங்களுக்கு மறைத்துள்ளீர்;

எங்கள் தீச்செயல்களின் பிடியில்

எங்களை அழியவிட்டீர்.

8ஆயினும், ஆண்டவரே

நீரே எங்கள் தந்தை;

நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்;

நாங்கள் அனைவரும்

உம் கைவேலைப்பாடுகளே.

9ஆண்டவரே, கடுஞ்சினம் கொள்ளாதிரும்;

குற்றத்தை என்றென்றும் நினையாதிரும்;

உம் மக்களாகிய எங்கள் அனைவரையும்

கண்ணோக்கும்.

10உம் புனித நகர்கள் பாலை நிலமாயின;

சீயோன் பாழ் நிலமாயிற்று;

எருசலேம் பாழடைந்து கிடக்கின்றது.

11எம் மூதாதையர் உம்மைப் போற்றிப் பாடிய

தூய்மையும் மாட்சியும் மிக்க

எங்கள் திருக்கோவில்

நெருப்புக்கு இரையாயிற்று;

எங்களுக்கு அருமையானவை

அனைத்தும் அழிந்து போயின.

12ஆண்டவரே, இவற்றைக் கண்டும்

நீர் வாளாவிருப்பீரோ?

மவுனமாயிருந்து

எங்களைக் கடுமையாய் வருத்துவீரோ?


64:4 1 கொரி 2:9.