1சீயோனின் வெற்றி
வைகறை ஒளியெனவும்,
அதன் மீட்பு சுடர் விளக்கெனவும்
வெளிப்படும்வரை,
அதனை முன்னிட்டு மவுனமாயிரேன்;
எருசலேம் பொருட்டுச்
செயலற்று அமைதியாயிரேன்.
2பிறஇனத்தார்
உன் வெற்றியைக் காண்பர்;
மன்னர் யாவரும்
உன் மேன்மையைப் பார்ப்பர்;
ஆண்டவர் தம் நாவினால் சூட்டும்
புதியதொரு பெயரால்
நீ அழைக்கப்படுவாய்.
3ஆண்டவரின் கையில் நீ
அழகிய மணிமுடியாகத் திகழ்வாய்;
உன் கடவுளின் கரத்தில்
அரச மகுடமாய் விளங்குவாய்.
4‘கைவிடப்பட்டவள்’ என்று
இனி நீ பெயர்பெற மாட்டாய்;
‘பாழ்பட்டது’ என
இனி உன் நாடு அழைக்கப்படாது;
நீ ‘எப்சிபா’* என்று அழைக்கப்படுவாய்;
உன் நாடு ‘பெயுலா’**என்று பெயர் பெறும்.
ஏனெனில், ஆண்டவர் உன்னை
விரும்புகின்றார்;
உன் நாடு மணவாழ்வு பெறும்.
5இளைஞன் கன்னிப் பெண்ணை
மணப்பதுபோல
உன்னை எழுப்பியவர்
உன்னை மணந்து கொள்வார்;
மணமகன் மணப்பெண்ணில்
மகிழ்வதுபோல்
உன் கடவுள் உன்னில் மகிழ்வார்.
6எருசலேமே, உன் மதில்கள்மேல்
காவலரை நிறுத்தியுள்ளேன்;
இராப்பகலாய் ஒருபோதும்
அவர்கள் அமைதியாய் இரார்;
ஆண்டவருக்கு நினைப்பூட்டுவோரே!
நொடிப்பொழுதும் அமைதியாய் இராதீர்.
7அவர் எருசலேமை நிலைநாட்டி,
பூவுலகில் அது புகழ் பெறும்வரை
அவரை ஓய்வெடுக்க விடாதீர்.
8ஆண்டவர் தம் வலக்கையின் மேலும்
வலிமைமிக்க தம் புயத்தின் மேலும்
ஆணையிட்டுக் கூறியது:
உன் தானியத்தை இனி
நான் உன் பகைவருக்கு
உணவாகக் கொடுக்கமாட்டேன்;
உன் உழைப்பால் கிடைத்த
திராட்சை இரசத்தை
வேற்றின மக்கள் பருகமாட்டார்கள்.
9அறுவடை செய்தவர்களே
அதை உண்டு ஆண்டவரைப் போற்றுவர்.
பழம் பறித்தவர்களே
என் தூயகச் சுற்றுமுற்றங்களில்
இரசம் பருகுவர்.
10செல்லுங்கள், வாயில்கள் வழியாய்க்
கடந்து செல்லுங்கள்;
மக்கள் வரப் பாதையைத் தயாராக்குங்கள்;
அமையுங்கள், நெடுஞ்சாலையைச்
சீராக அமையுங்கள்;
கற்களை அகற்றுங்கள்;
மக்களினங்கள்முன்
கொடியைத் தூக்கிப் பிடியுங்கள்.
11உலகின் கடைக்கோடி வரை
ஆண்டவர் பறைசாற்றியது:
“மகள் சீயோனிடம் சொல்லுங்கள்:
இதோ, உன் மீட்பு வருகின்றது,
அவரது வெற்றிப்பரிசு
அவருடன் உள்ளது;
அவரது செயலின் பயன்
அவர் முன்னே உள்ளது.”
12‘புனித மக்களினம்’ என்றும்
‘ஆண்டவரால் விடுதலை அடைந்தவர்கள்’ என்றும்
அவர்கள் அழைக்கப்படுவார்கள்;
நீயோ, ‘தேடிக் கண்டுபிடிக்கப்பட்டவன்’
என்றும்
இனி ‘கைவிடப்படாத நகர்’ என்றும்
பெயர் பெறுவாய்.