மக்களின் பாவங்கள் கண்டிக்கப்படல்

1மீட்க இயலாதவாறு ஆண்டவரின்

கை குறுகிவிடவில்லை;

கேட்க முடியாதவாறு ஆண்டவரின் காது

மந்தமாகி விடவில்லை.

2உங்கள் தீச்செயல்களே உங்களுக்கும்,

உங்கள் கடவுளுக்கும் இடையே

பிளவை உண்டாக்கியுள்ளன;

உங்கள் பாவங்களே

அவர் செவி சாய்க்காதவாறு

அவரது முகத்தை உங்களுக்கு

மறைத்துள்ளன.

3உங்கள் கைகள் இரத்தப்பழியால்

கறைபட்டுள்ளன;

உங்கள் விரல்கள் தீமையால்

தீட்டுப்பட்டுள்ளன.

உங்கள் உதடுகள்

பொய்களை உதிர்க்கின்றன;

உங்கள் நாக்கு

தீயவற்றை முணுமுணுக்கின்றது.

4நீதியான வழக்கைக் கொண்டு வருபவர்

எவரும் இல்லை;

உண்மையுடன் வழக்காடுபவர்

யாருமில்லை;

வெறுமையான வாதங்கள்மீது

நம்பிக்கை வைத்துப்

பொய்யைப் பேசி,

வஞ்சனையைக் கருத்தரித்துத்

தீமையைப் பெற்றெடுக்கின்றனர்.

5நச்சுப் பாம்பின் முட்டைகளை

அடைகாக்கிறார்கள்;

சிலந்திப் பூச்சியின் வலையைப்

பின்னுகிறார்கள்;

அவற்றின் முட்டைகளை விழுங்குபவர்

சாவார்;

உடைபடும் முட்டையிலிருந்து

கட்டுவிரியன் வெளிவரும்.

6அவற்றின் வலைகள்

உடையாகப் பயன்படா;

அவற்றின் வேலைப்பாடுகளைக்

கொண்டு எவரும் தம்மைப்

போர்த்துக்கொள்ளமாட்டார்;

அவர்களின் செயல்கள் தீயன;

அவர்களின் கையில் இருப்பன

வன்முறைச் செயல்களே!

7தீமை செய்ய அவர்கள் கால்கள்

விரைகின்றன;

குற்றமற்ற இரத்தம் சிந்த

அவர்கள் துடிக்கின்றனர்;

அவர்கள் எண்ணங்கள் தீயவை;

பாழாக்குதலும் அழிவுமே

அவர்கள் வழித்தடங்களில் உள்ளன.

8அமைதி வழியை அவர்கள் அறியார்;

நீதியின் பாதையில்

அவர்கள் நடக்கவில்லை;

தாங்கள் செல்லும் பாதைகளைக்

கோணலாக்கினர்;

அவற்றில் நடப்பவர் எவரும்

அமைதியை அறியார்.

மக்கள் தம் பாவங்களை அறிக்கையிடல்

9ஆதலால், நீதி எங்களுக்கு

வெகு தொலையில் உள்ளது;

நேர்மை எங்களை நெருங்கி வரவில்லை.

ஒளிக்கெனக் காத்திருந்தோம்;

காரிருள்தான் கிட்டியது;

விடியலை எதிர்பார்த்தோம்;

இருளிலேயே நடக்கின்றோம்;

10பார்வையற்றோரைப் போல்

சுவரைப்பிடிக்க

நாங்கள் தடவுகின்றோம்;

கண்ணில்லாதவரைப்போல்

எங்கள் வழியில் தடுமாறுகின்றோம்;

நண்பகலிலும் மங்கிய பொழுதிலும்

செத்தவர்போல் இருக்கின்றோம்.

11கரடியைப் போல் நாங்கள் யாவரும்

உறுமுகின்றோம்;

புறாக்களைப்போல் பெருமூச்சுடன்

விம்முகின்றோம்;

நீதித்தீர்ப்புக்காகக் காத்திருந்தோம்,

ஒன்றையும் காணவில்லை;

விடுதலையை எதிர்பார்த்திருந்தோம்,

அது எங்களுக்குத் தொலையில் உள்ளது.

12உம் திருமுன் எங்கள் குற்றங்கள்

பெருகியுள்ளன;

எங்கள் பாவங்கள் எங்களுக்கு எதிராய்ச்

சான்று சொல்கின்றன;

எங்கள் குற்றங்கள் எங்களோடு தான்

இருக்கின்றன;

எங்கள் தீச்செயல்களை

நாங்களே அறிவோம்.

13ஆண்டவருக்கு எதிராகக்

கிளர்ச்சி செய்து

அவரை வஞ்சித்தோம்;

எங்கள் கடவுளைப் பின்பற்றாமல்

அகன்று போனோம்;

ஒடுக்குவதையும் கிளர்ச்சி செய்வதையும்

பற்றிப் பேசினோம்;

பொய்யானவற்றை மனதில் உருவாக்கி

அவற்றை மொழிந்தோம்.

14நீதி துரத்தப்பட்டது;

நேர்மை தொலையில் நின்றது;

பொது இடங்களில்

வாய்மை நிலைகுலைந்தது;

உண்மைக்கு அங்கே இடம் இல்லை.

15உண்மை என்பதே

இல்லாமல் போய்விட்டது;

தீமையினின்று விலகியவர்

சூறையாடப்படுகின்றார்;

ஆண்டவர் அதைக் கண்டார்;

அவர் பார்வையில் நீதியின்மை

தீயதாய்ப் பட்டது.

மக்களை மீட்க ஆண்டவரின் ஆயத்தம்

16இதில் தலையிட ஓர் ஆள்கூட

இல்லை என்று கண்டு

ஆண்டவர் திகைப்புற்றார்;

அவரது கையே அவருக்கு

வெற்றி கொணர்ந்து;

அவரது நேர்மையே

அவரைத் தாங்கி நின்றது.

17அவர் நேர்மையை மார்புக் கவசமாய்

அணிந்துகொண்டார்;

விடுதலையைத் தலைச்சீராவாய்த்

தம் தலையில் வைத்துக்கொண்டார்;

அநீதிக்குப் பழிவாங்குதலை

ஆடையாய் உடுத்திக் கொண்டார்;

அன்புவெறியை மேலாடையாகப்

போர்த்திக் கொண்டார்.

18தம் பகைவரின் செயல்களுக்குத்

தக்க கைம்மாறு அளிப்பார்;

அவர்களிடம் தம் சீற்றத்தைக் காட்டுவார்;

தம் எதிரிகளுக்குத்

தக்க தண்டனை வழங்குவார்;

தீவு நாடுகளுக்கும்

தகுந்த பதிலடி கொடுப்பார்.

19மேலை நாட்டினர்

ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்;

கீழைநாட்டினர்

அவரது மாட்சிக்கு நடுங்குவர்;

ஆண்டவரின் பெருங்காற்று அடித்து வர,

ஓடிவரும் ஆறென அவர் வருவார்.

20சீயோனுக்கு மீட்பராக அவர் வருவார்;

யாக்கோபில் தீயதனின்று

திரும்பியவரிடம் வருவார்,

என்கிறார் ஆண்டவர்.

21அவர்களுடன் நான் செய்து கொள்ளும்

உடன்படிக்கை இதுவே:

உன்மேல் இருக்கும் என் ஆவியும்

உன் வாயில் நான் வைத்துள்ள

என் வார்த்தைகளும்

உன் வாயினின்றும்

உன் வழி மரபினர் வாயினின்றும்

வழிவழிவரும் உன்

தலைமுறையினர் வாயினின்றும்

இன்றும் என்றென்றும் நீங்கிவிடாது,

என்கிறார் ஆண்டவர்.


59:7-8 உரோ 3:15-17. 59:16 எசா 63:5. 59:17 எபே 6:14,17; 1 தெச 5:8.