1பேல் கூனிக் குறுகுகின்றது;

நெபோ குப்புற வீழ்கின்றது;

அவற்றின் சிலைகள்

காட்டு விலங்குகள் மீதும்

கால்நடைகள் மீதும்

சுமத்தப்படுகின்றன;

நீங்கள் பவனி எடுத்தவை பாரம் ஆயின;

களைத்துப்போன விலங்குகளுக்குச்

சுமையாயின.

2அவை ஒருங்கே குப்புற வீழ்கின்றன;

கூனிக் குறுகுகின்றன;

தங்களைச் சுமந்தவர்களை

அவற்றால் விடுவிக்க இயலவில்லை;

அவையும் நாடுகடத்தலுக்கு உள்ளாயின.

3யாக்கோபு வீட்டாரே,

இஸ்ரயேல் குடும்பத்தாருள்

எஞ்சியிருக்கும் அனைத்து மக்களே,

செவிகொடுங்கள்;

உதரத்திலிருந்தே உங்களைத்

தாங்குபவர் நான்,

கருவிலிருந்தே உங்களைச்

சுமப்பவர் நான்.

4உங்கள் முதுமைவரைக்கும்

நான் அப்படியே இருப்பேன்;

நரை வயதுவரைக்கும்

நான் உங்களைச் சுமப்பேன்;

உங்களை உருவாக்கிய நானே

உங்களைத் தாங்குவேன்;

நானே உங்களைச் சுமப்பேன்;

நானே விடுவிப்பேன்.

5யாருக்கு என்னை நிகராக்குவீர்கள்?

யாருக்கு என்னை இணையாக்குவீர்கள்?

யாருக்கு நிகராக

என்னை ஒப்பிடுவீர்கள்?

6மக்கள் தம் பையைத் திறந்து

பொன்னைக் கொட்டுகிறார்கள்;

தராசில் வெள்ளியை

நிறுத்துப் பார்க்கிறார்கள்;

பொற்கொல்லனைக் கூலிக்கு

அமர்த்துகிறார்கள்;

அவன் அதைத் தெய்வமாகச் செய்கிறான்;

பின் அதன்முன் வீழ்ந்து

வழிபடுகிறார்கள்.

7அதைத் தூக்கித்

தோள்மேல் சுமந்து போகின்றனர்;

அதற்குரிய இடத்தில்

அதை நிலைநிறுத்தி வைக்கின்றனர்;

அது அங்கேயே நிற்கிறது;

தன் இடத்திலிருந்து அது பெயராது;

எவன் அதனிடம் கூக்குரல் எழுப்பினாலும்

அது மறுமொழி தராது;

அவன் துயரத்திலிருந்து

அவனை விடுவிப்பதுமில்லை.

8கலகம் செய்வோரே,

இதை நினைவில் கொள்ளுங்கள்;

கவனத்தில் வையுங்கள்.

9தொன்றுதொட்டு நிகழ்ந்தவற்றை

நினைத்துப் பாருங்கள்;

நானே இறைவன்;

என்னையன்றி வேறு கடவுள் இல்லை;

என்னைப் போன்று வேறு எவரும் இல்லை.

10பின் நிகழவிருப்பதைத்

தொடக்கத்திலே நான் அறிவித்தேன்;

இனி நடப்பனவற்றை

பண்டைக் காலத்திலேயே

முன்னுரைத்தேன்;

“என் திட்டம் நிலைத்திருக்கும்;

என் விருப்பத்தை நிறைவேற்றுவேன்”

என்றுரைத்தேன்.

11இரைமேல் பாயும் பறவையைக்

கிழக்கிலிருந்து அழைக்கிறேன்;

என் திட்டத்தைச் செயல்படுத்தும்

ஒருவனைத்

தொலைநாட்டிலிருந்து வரவழைக்கிறேன்;

சொல்லியவன் நான்;

நானே அதை நிறைவேற்றுவேன்;

திட்டமிட்டவன் நான்;

நானே அதைச் செயல்படுத்துவேன்.

12கடின மனத்தோரே,

வெற்றிக்கு வெகு தொலைவில்

இருப்போரே,

செவி கொடுங்கள்.

13என் வெற்றியை

அருகில் வரவழைத்துள்ளேன்;

அது தொலையில் இல்லை,

என் விடுதலை காலம் தாழ்த்தாது;

சீயோனுக்கு நான்

விடுதலை வழங்குகின்றேன்;

இஸ்ரயேலில் என் மாட்சி

நிலைக்கச் செய்வேன்.