1அந்நாளில் ஓர் ஆடவனை ஏழு
பெண்கள் பிடித்துக்கொண்டு,
‟நாங்கள் எங்கள் சொந்த உணவை
உண்டு வாழ்வோம்;
எங்கள் சொந்த ஆடைகளை
உடுத்திக்கொள்வோம்;
உமது பெயரை மட்டும்
எங்களுக்கு வழங்கி எங்கள்
இழிவை நீக்குவீராக” என்பார்கள்.
2அந்நாளில் ஆண்டவரால்
துளிர்க்கும் தளிர்,
அழகும் மேன்மையும்
வாய்ந்ததாய் இருக்கும்;
நாட்டில் விளையும் நற்கனிவகைகள்,
இஸ்ரயேலில் தப்பிப் பிழைத்தவர்களின்
பெருமையும் மேன்மையுமாய் அமையும்.
3அந்நாளில் சீயோனில் எஞ்சியிருப்போரும்,
எருசலேமில் தப்பி வாழ்வோரும்
‛புனிதர்’ எனப் பெயர் பெறுவர்;
உயிர் பிழைப்பதற்கென்று
எருசலேமில் பெயர் எழுதப்பட்டோரும்
‛புனிதர்’ எனப்படுவர்.
4என் தலைவர் சீயோன் மகளின் தீட்டைக்
கழுவித் தூய்மைப்படுத்துவார்;
நீதியின்படி தீர்ப்பிடும்
அவரது தன்மையாலும்
நெருப்புத்தணலையொத்த
அவரது ஆற்றலாலும்
எருசலேமின் இரத்தக் கறைகளைக் கழுவி
அதனைத் தூய்மைப்படுத்துவார்.