சூடானுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு

1எத்தியோப்பியாவின் ஆறுகளுக்கு

அப்பால் சிறகடித்து ஒலியெழுப்பும்

உயிரினங்கள் உடையதோர்

நாடு உள்ளது.

2அது நாணல் படகுகளில் நீரின்மேலே

கடல் வழியாகத் தூதரை அனுப்புகிறது;

விரைவாய்ச் செல்லும் தூதர்களே,

உயர்ந்து வளர்ந்து,

பளபளப்பான தோலுடைய

இனத்தாரிடம் செல்லுங்கள்;

அருகிலும் தொலைவிலும் உள்ளோரை

அச்சுறுத்திய

மக்கள் கூட்டத்தார் அவர்கள்;

ஆற்றல் வாய்ந்தவர்கள்,

பகைவரை மிதித்து

வெற்றிகொள்பவர்கள் அந்த நாட்டினர்;

ஆறுகள் குறுக்காகப்

பாய்ந்தோடும் நாடும் அது.

3உலகில் குடியிருக்கும் அனைத்து மக்களே,

மண்ணுலகில் வாழ்வோரே,

மலைகளின்மேல் கொடியேற்றும்போது

உற்று நோக்குங்கள்;

எக்காளம் ஊதும்போது

செவிகொடுங்கள்;

4ஏனெனில், ஆண்டவர் என்னிடம்

இவ்வாறு சொன்னார்:

‟பகலில் அடிக்கும்

வெப்பம் குறைந்த வெயில்போலும்,

அறுவடைக்கால வெயிலால்

உண்டாகும் பனிமேகம் போன்றும்

என் இருப்பிடத்தில் அமைதியாய் இருந்து

நான் கவனித்துப் பார்ப்பேன்”

5ஏனெனில், அறுவடைக்கு முன்

பூக்கள் பூத்துக் காய்த்து,

கனிதரும் பருவம் எய்தும்போது,

தழைகளை எதிரி

அரிவாள்களால் அறுத்தெறிவான்;

படரும் கொடிகளை
அரிந்து அகற்றிவிடுவான்.

6அவை அனைத்தும், மலைகளில்

பிணந்தின்னும் பறவைகளுக்கும்

தரையில் வாழுகின்ற

விலங்குகளுக்கும் விடப்படும்.

பிணந்தின்னும் பறவைகள்

கோடைக் காலத்திலும்

தரை வாழும் விலங்குகள்

குளிர்காலத்திலும்
அவற்றின் மேல் தங்கியிருக்கும்.

7உயர்ந்து வளர்ந்து பளபளப்பான தோலுடைய இனத்தாரின் நாட்டிலிருந்து அந்நேரத்தில் படைகளின் ஆண்டவருக்குக் காணிக்கைப் பொருள்கள் கொண்டு வரப்படும். அருகிலும் தொலையிலும் உள்ளோரை அச்சுறுத்திய மக்கள் கூட்டத்தார் அவர்கள். அந்நாட்டினர் ஆற்றல் வாய்ந்தோர்; பகைவர்மீது வெற்றிகொள்வோர். ஆறுகள் குறுக்காகப் பாய்ந்தோடும் அந்த நாட்டிலிருந்து படைகளின் ஆண்டவரது பெயர் தங்கியுள்ள சீயோன் மலைக்கு அக்காணிக்கைகள் கொண்டு வரப்படும்.

18:1-7 செப் 2:12.