மோவாபின் நம்பிக்கையற்ற நிலை

1சீயோன் மகளின் மலையில்

நாட்டை ஆள்பவனுக்குச்

சேலா நகரிலிருந்து பாலைநிலம் வழியாகச்

செம்மறியாடு அனுப்புங்கள்.

2சிறகடித்து அலையும் பறவை போலும்

கூடு இழந்த குஞ்சுபோலும்

மோவாபிய மகளிர்

அர்னோன் துறைகளில் காணப்படுவர்.

3வாருங்கள்; அறிவுரை கூறுங்கள்;

நடுநிலையோடு நடந்துகொள்ளுங்கள்;

நண்பகலில் உங்கள் நிழலை

இரவு போலாக்கி,

விரட்டியடிக்கப்பட்டவர்களுக்கு

மறைத்து வையுங்கள்;

தப்பி ஓடுகிறவர்களைக்

காட்டிக் கொடுக்காதீர்கள்.

4மோவாபிலிருந்து துரத்தப்பட்டவர்கள்

உங்களிடமே தங்கியிருக்கட்டும்;

அழிக்க வருபவனின்

பார்வையிலிருந்து தப்ப

அவர்களுக்கு அடைக்கலமாய் இருங்கள்;

ஒடுக்குபவன் ஒழிந்து போவான்;

அழிவு ஓய்ந்து போகும்;

மிதிக்கிறவர்கள்

நாட்டில் இல்லாது போவர்.

5அப்பொழுது, ஆண்டவர் தம் பேரன்பால்

ஓர் அரியணையை அமைப்பார்;

அதன்மேல் தாவீதின் கூடாரத்தைச் சார்ந்த

ஒருவர் வீற்றிருப்பார்;

அவர் உண்மையுடன் ஆள்பவர்;

நீதியை நிலைநாட்டுபவர்;

நேர்மையானதைச் செய்ய விரைபவர்.

6மோவாபின் இறுமாப்பைப்பற்றி

நாங்கள் கேள்வியுற்றோம்;

அவன் ஆணவம் பெரிதே;

அவன் இறுமாப்பையும் ஆணவத்தையும்

செருக்கையும் குறித்துக்

கேள்விப்பட்டோம்.

அவன் தற்புகழ்ச்சிகள் யாவும் பொய்யுரையே.

7ஆதலால் மோவாபு அழுது புலம்பட்டும்;

மோவாபுக்காக யாவரும் கதறியழட்டும்;

கீர் அரசேத்தின்

திராட்சை அடைகளை நினைந்து,

நெஞ்சம் தளர்ந்து விம்மியழுங்கள்.

8எஸ்போனின் வயல்வெளி நிலங்கள்

வாடுகின்றன,

மக்களினங்களின் தலைவர்களை

விழத் தள்ளிய சிபிமானின்

திராட்சைத் தோட்டத்துக் கிளைகள்

அழிந்துவிட்டன.

அவை ஒருபுறம் யாசேரைத் தொட்டன;

பாலை நிலம்வரை படர்ந்திருந்தன;

அவற்றின் தளிர்கள் செழிப்புடன் வளர்ந்து

கடல்கடந்து படர்ந்து சென்றன.

9ஆதலால் யாசேருக்காக அழுததுபோல்

நான் சிபிமாவின்

திராட்சைத் தோட்டத்திற்காகக்

கண்ணீர் விடுகின்றேன்;

எஸ்போன்! எலயாரே! உங்களை

என் கண்ணீரால் நனைக்கின்றேன்;

ஏனெனில் உங்கள் கோடைக் கனிக்காகவும்

அறுவடைக்காகவும் எழும்

மகிழ்ச்சி ஆரவாரம் அடங்கி விட்டது.

10வளமான வயல் நிலங்களிலிருந்து

அக்களிப்பும் மகிழ்ச்சியும் அகற்றப்பட்டன.

திராட்சைத் தோட்டங்களில்

பாடல்கள் பாடுவார் யாருமில்லை;

ஆரவாரம் எழுப்புவார் எவருமில்லை.

இரசம் எடுப்பதற்கு ஆலையில்

திராட்சைக்கனி பிழிவாருமில்லை;

பழம் பிழிவாரின் பூரிப்பும்

இல்லாதொழிந்தது;

11ஆதலால், மோவாபுக்காக என் நெஞ்சமும்,

கீர்கேரசிற்காக என் இதயமும்

வீணையின் நரம்புபோல் துடிக்கின்றது;

12மோவாபியர் உயரமான

தொழுகை மேடுகளில்

வழிபாடு செய்து களைத்தும்,

திருத்தலங்களுக்குச் சென்று மன்றாடியும்

அவர்களுக்கு ஒன்றும் இயலாமற் போயிற்று.

13இதுவே கடந்த காலத்தில் மோவாபைக் குறித்து ஆண்டவர் கூறிய திருவாக்கு.
14ஆனால், இப்பொழுது ஆண்டவர் கூறுவது: கூலியாள் கணக்கிடுவதற்கு ஒப்ப, மூன்று ஆண்டுகளில், மோவாபு நாட்டில் திரளான மக்கள் கூட்டம் இருப்பினும், அதன் மேன்மை அழிவுறும்; ஒருசிலரே நாட்டில் எஞ்சியிருப்பர்; அவர்களும் வலிமை இழந்திருப்பர்.