1நீர் என் உடன்பிறப்பாக
இருக்கக் கூடாதா!
என் அன்னையிடம் பால் குடித்தவராய்
இருக்கலாகாதா!
தெருவில் கண்டாலும்
நான் உம்மை முத்தமிடுவேனே!
அப்போது எவருமே
என்னை இகழமாட்டார்.
2உம்மை என் தாய் வீட்டுக்குக்
கூட்டி வருவேன்;
எனக்குக் கற்றுத் தந்தவளின்
மனைக்குள் கொணர்ந்திடுவேன்;
மணமூட்டிய திராட்சை இரசத்தை
உமக்குக் குடிக்கக் கொடுப்பேன்;
என் மாதுளம் பழச்சாற்றைப்
பருகத் தருவேன்.
3இடக்கையால் அவர்
என் தலையைத் தாங்கிக் கொள்வார்;
வலக்கையால் அவர்
என்னைத் தழுவிக் கொள்வார்.
4எருசலேம் மங்கையரே,
ஆணையிட்டுக் கேட்கின்றேன்;
காதலை ஏன் தட்டி எழுப்புகின்றீர்?
தானே விரும்பும்வரை
அதை ஏன் தட்டி எழுப்புகின்றீர்?
5“யார் இவள்!
பாலைவெளியினின்று
எழுந்து வருபவள்;
தன் காதலர்மேல் சாய்ந்து கொண்டு
வருபவள் யார் இவள்?”
5கிச்சிலி மரத்தடியில்
நான் உம்மை எழுப்பினேன்;
அங்கேதான் உம்தாய்
பேறுகால வேதனையுற்றாள்.
அங்கேதான் உம்மைப் பெற்றவள்
பேறுகால வேதனையுற்றாள்.
6உம் நெஞ்சத்தில் இலச்சினைபோல்
என்னைப் பொறித்திடுக;
இலச்சினைப்போல்
உம் கையில் பதித்திடுக;
ஆம், அன்பு சாவைப்போல்
வலிமைமிக்கது;
அன்பு வெறி
பாதாளம்போல் பொறாதது;
அதன் பொறி,
எரிக்கும் நெருப்புப் பொறி;
அதன் கொழுந்து
பொசுக்கும் தீக்கொழுந்து.
7பெருங்கடலும்
அன்பை அணைக்க முடியாது;
வெள்ளப்பெருக்கும்
அதை மூழ்கடிக்க இயலாது;
அன்புக்காக ஒருவன்
தன் வீட்டுச் செல்வங்களை எல்லாம்
வாரியிறைக்கலாம்;
ஆயினும், அவன்
ஏளனம் செய்யப்படுவது உறுதி.
8நம்முடைய தங்கை சிறியவள்;
அவளுக்கு முலைகள்
முகிழ்க்கவில்லை;
அவளைப் பெண்பேச வரும்நாளில்
நம் தங்கைக்காக என் செய்வோம்?
9அவள் ஒரு மதிலானால்
அதன்மேல்
வெள்ளியரண்
கட்டிடுவோம்;
அவள் ஒரு கதவானால்
அதனை கேதுருப் பலகையால்
மூடிடுவோம்.
10நான் மதில்தான்;
என் முலைகள்
அதன் கோபுரங்கள் போல்வன;
அவர்தம் பார்வையில்
நான் நல்வாழ்வு தருபவள் ஆவேன்.
11பாகால்-ஆமோன் என்னுமிடத்தில்
சாலமோனுக்கு இருந்தது
ஒரு திராட்சைத் தோட்டம்,
திராட்சைத் தோட்டத்தை
அவர் காவலரிடம் ஒப்படைத்தார்;
அதன் கனிகளுக்காக எவரும்
ஆயிரம் வெள்ளிக் காசுகூடத் தருவார்.
12எனக்குரிய திராட்சைத் தோட்டம்
என்முன்னே உளது;
சாலமோனே,
அந்த ஆயிரம் வெள்ளிக்காசு
உம்மிடமே இருக்கட்டும்;
இருநூறு காசும்
பழங்களைக் காப்போர்க்கே சேரட்டும்.
13“தோட்டங்களில் வாழ்பவளே!
தோழர் கூர்ந்து கேட்கின்றனர்;
உன் குரலை
யான் கேட்கலாகாதோ!”
14“என் காதலரே!
விரைந்து ஓடிடுக;
கலைமான் அல்லது
மரைமான் குட்டிபோல
நறுமணம் நிறைந்த மலைகளுக்கு
விரைந்திடுக!”