இனிமைமிகு பாடல் 8


பாடல் 24: தலைவி கூற்று

1நீர் என் உடன்பிறப்பாக

இருக்கக் கூடாதா!

என் அன்னையிடம் பால் குடித்தவராய்

இருக்கலாகாதா!

தெருவில் கண்டாலும்

நான் உம்மை முத்தமிடுவேனே!

அப்போது எவருமே

என்னை இகழமாட்டார்.

2உம்மை என் தாய் வீட்டுக்குக்

கூட்டி வருவேன்;

எனக்குக் கற்றுத் தந்தவளின்

மனைக்குள் கொணர்ந்திடுவேன்;

மணமூட்டிய திராட்சை இரசத்தை

உமக்குக் குடிக்கக் கொடுப்பேன்;

என் மாதுளம் பழச்சாற்றைப்

பருகத் தருவேன்.

3இடக்கையால் அவர்

என் தலையைத் தாங்கிக் கொள்வார்;

வலக்கையால் அவர்

என்னைத் தழுவிக் கொள்வார்.

4எருசலேம் மங்கையரே,

ஆணையிட்டுக் கேட்கின்றேன்;

காதலை ஏன் தட்டி எழுப்புகின்றீர்?

தானே விரும்பும்வரை

அதை ஏன் தட்டி எழுப்புகின்றீர்?

5“யார் இவள்!

பாலைவெளியினின்று

எழுந்து வருபவள்;

தன் காதலர்மேல் சாய்ந்து கொண்டு

வருபவள் யார் இவள்?”

பாடல் 25: தலைவி கூற்று

5கிச்சிலி மரத்தடியில்

நான் உம்மை எழுப்பினேன்;

அங்கேதான் உம்தாய்

பேறுகால வேதனையுற்றாள்.

அங்கேதான் உம்மைப் பெற்றவள்

பேறுகால வேதனையுற்றாள்.

6உம் நெஞ்சத்தில் இலச்சினைபோல்

என்னைப் பொறித்திடுக;

இலச்சினைப்போல்

உம் கையில் பதித்திடுக;

ஆம், அன்பு சாவைப்போல்

வலிமைமிக்கது;

அன்பு வெறி

பாதாளம்போல் பொறாதது;

அதன் பொறி,

எரிக்கும் நெருப்புப் பொறி;

அதன் கொழுந்து

பொசுக்கும் தீக்கொழுந்து.

7பெருங்கடலும்

அன்பை அணைக்க முடியாது;

வெள்ளப்பெருக்கும்

அதை மூழ்கடிக்க இயலாது;

அன்புக்காக ஒருவன்

தன் வீட்டுச் செல்வங்களை எல்லாம்

வாரியிறைக்கலாம்;

ஆயினும், அவன்

ஏளனம் செய்யப்படுவது உறுதி.

பாடல் 26: தமையர்-தலைவி உரையாடல்

8நம்முடைய தங்கை சிறியவள்;

அவளுக்கு முலைகள்

முகிழ்க்கவில்லை;

அவளைப் பெண்பேச வரும்நாளில்

நம் தங்கைக்காக என் செய்வோம்?

9அவள் ஒரு மதிலானால்

அதன்மேல்

வெள்ளியரண்

கட்டிடுவோம்;

அவள் ஒரு கதவானால்

அதனை கேதுருப் பலகையால்

மூடிடுவோம்.

10நான் மதில்தான்;

என் முலைகள்

அதன் கோபுரங்கள் போல்வன;

அவர்தம் பார்வையில்

நான் நல்வாழ்வு தருபவள் ஆவேன்.

பாடல் 27: தலைவன் கூற்று

11பாகால்-ஆமோன் என்னுமிடத்தில்

சாலமோனுக்கு இருந்தது

ஒரு திராட்சைத் தோட்டம்,

திராட்சைத் தோட்டத்தை

அவர் காவலரிடம் ஒப்படைத்தார்;

அதன் கனிகளுக்காக எவரும்

ஆயிரம் வெள்ளிக் காசுகூடத் தருவார்.

12எனக்குரிய திராட்சைத் தோட்டம்

என்முன்னே உளது;

சாலமோனே,

அந்த ஆயிரம் வெள்ளிக்காசு

உம்மிடமே இருக்கட்டும்;

இருநூறு காசும்

பழங்களைக் காப்போர்க்கே சேரட்டும்.

பாடல் 28: தலைவன்-தலைவி உரையாடல்

13“தோட்டங்களில் வாழ்பவளே!

தோழர் கூர்ந்து கேட்கின்றனர்;

உன் குரலை

யான் கேட்கலாகாதோ!”

14“என் காதலரே!

விரைந்து ஓடிடுக;

கலைமான் அல்லது

மரைமான் குட்டிபோல

நறுமணம் நிறைந்த மலைகளுக்கு

விரைந்திடுக!”