1உலகில் மனிதரைக் கவலையில் ஆழ்த்திக்கொண்டிருக்கும் ஒரு தீங்கைக் கண்டேன்.
2கடவுள் ஒருவருக்குச் செல்வத்தையும் நல்வாழ்வையும் மேன்மையையும் கொடுக்கிறார். ஆம், அவர் விரும்புவதெல்லாம் அவருக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றைத் துய்க்கவோ கடவுள் அவருக்கு வாய்ப்பளிப்பதில்லை. அடுத்தவர் ஒருவர் அவற்றைத் துய்த்து மகிழ்கிறார். இங்கே பயனின்மையும் கடுந்துயரமும் காணப்படுகின்றன.
3ஒருவருக்கு நூறு பிள்ளைகள் இருக்கலாம். அவர் நீண்ட ஆயுளுடனும் வாழலாம். அவர் நெடுங்காலம் உயிரோடிருந்தும், தமக்குள்ள செல்வத்தால் இன்பம் அடையாமலும், இறந்தபின் அடக்கம் செய்யப்படாமலும் மறைவாரானால், அவரைவிடக் கருச்சிதைந்த பிண்டமே மேல் என்கிறேன்.
4அப்பிண்டம் தோன்றுவதால் பயனில்லை. அது இருளில் மறைகிறது; அதன் பெயரை இருள் மூடிவிடும்.
5அது கதிரவனைக் கண்டதுமில்லை; எதையும் அறிந்ததுமில்லை. ஆனால் அதன் நிலை அவருடையதை விட மேலானது.
6வாழ்கையில் இன்பம் துய்க்காமல் இரண்டாயிரம் ஆண்டுகள் உயிர் வாழும் மனிதர் கூட அதைவிட மேலானவர் இல்லை. ஏனெனில், இருவரும் ஒரே இடத்திற்கு செல்கின்றனர் அல்லவா?
7வயிற்றுக்காகவே ஒருவர் வேலை செய்கிறார்; ஆனால், அவருக்குப் போதுமான உணவு கிடைப்பதில்லை.
8இப்படியிருக்க, மதிகேடரைவிட ஞானமுள்ளவர் எவ்வகையில் மேலானவர்? அல்லது ஏழை ஒருவருக்கு மனிதர்முன் திறமையுடன் நடந்துகொள்ளத் தெரிந்திருந்தும், அதனால் அவருக்குப் பயனென்ன?
9இல்லாத ஒன்றை அடைய விரும்பி அலைந்து திரிவதை விட உள்ளதே போதும் என்ற மனநிறைவோடியிருப்பதே மேல். ஆனால், இதுவும் வீணே; காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்.
10இப்பொழுது நடக்கும் ஒவ்வொன்றும் நெடுங்காலத்திற்கு முன்பே முடிவு செய்யப்பட்டதாகும். மனிதர் யாரென்று நமக்குத் தெரியும். தம்மைவிட வலிமை வாய்ந்தவருடன் வாதாட அவரால் இயலாது.
11பேச்சு நீள நீள, அதன் பயன் குறைந்து கொண்டே போகும். அதனால் மனிதர் அடையும் நன்மை என்ன?
12மனிதருடைய வாழ்நாள் குறுகியது; பயனற்றது; நிழலைப்போல மறைவது. அதில் தமக்கு நலமானது எது என்பதை யாரால் அறியக் கூடும்? தம் மறைவிற்குப் பிறகு உலகில் என்ன நடக்கும் என்பதை யாரால் தெரிந்து கொள்ள இயலும்?