ஞானமுள்ளவரின் செயல்கள்

1உன் பணத்தை வைத்துத் துணிந்து
கடல் வாணிபம் செய்;
ஒருநாள் அது வட்டியோடு திரும்பிவரும்.

2உன் பணத்தைப் பிரித்து ஏழெட்டு
இடங்களில் முதலாக வை.
ஏனெனில், எங்கு, எவ்வகையான
இடர் நேருமென்பதை
நீ அறிய இயலாது.

3வானத்தில் கார்முகில் திரண்டு வருமாயின்,
ஞாலத்தில் மழை பெய்யும்.
மரம் வடக்கு நோக்கி விழுந்தாலும்
தெற்கு நோக்கி விழுந்தாலும்
விழுந்த இடத்திலேதான் கிடக்கும்.

4காற்று தக்கவாறு இல்லையென்று
காத்துக்கொண்டே இருப்போர்,
விதை விதைப்பதில்லை;
வானிலை தக்கபடி இல்லை என்று
சொல்லிக்கொண்டே இருப்போர்
அறுவடை செய்வதில்லை.

5காற்றின் போக்கையோ, கருவுற்ற பெண்ணின் வயிற்றில் உயிர் வளரும் வகையையோ நீ அறிய இயலாது; அவ்வாறே, அனைத்தையும் செய்கிற கடவுளின் செயல்களையும் உன்னால் அறியமுடியாது.
6காலையில் விதையைத் தெளி; மாலையிலும் அப்படியே செய். அதுவோ இதுவோ எது பயன்தரும் என்று உன்னால் கூறமுடியாது. ஒருவேளை இரண்டுமே நல்விளைச்சலைத் தரலாம்.
7ஒளி மகிழ்ச்சியூட்டும்; கதிரவனைக் கண்டு கண்கள் களிக்கும்.
8மனிதன் எத்தணை ஆண்டுகள் வாழ்ந்தாலும் அவன் தன் வாழ்நாளெல்லாம் மகிழ்ச்சியுடன் இருக்கட்டும். இருள் சூழ்ந்த நாள்கள் பல இருக்கும் என்பதையும் அவன் மறக்கலாகாது. அதற்குப்பின் வருவதெல்லாம் வீணே.

இளையோருக்கு அறிவுரை

9இளையோரே! இளமைப் பருவம் மகிழ்ச்சியோடிருப்பதற்கே. இளமையின் நாள்களில் உள்ளக் களிப்புடனிருங்கள். மனம் விரும்புவதைச் செய்யுங்கள்; கண்களின் நாட்டத்தை நிறைவேற்றுங்கள். ஆனால், நீங்கள் செய்கிற ஒவ்வொரு செயலுக்கும் உரிய தீர்ப்பைக் கடவுள் வழங்குவார் என்பதை மறவாதீர்கள்.
10மனக் கவலையை ஒழியுங்கள். உடலுக்கு ஊறு வராதபடி காத்துக் கொள்ளுங்கள்; குழந்தைப் பருவமும் இளமையும் மறையக் கூடியவையே.