மோசே பெற்ற வியத்தகு ஆற்றல்

1மோசே மறுமொழியாக, “இதோ, அவர்கள் என்னை நம்ப மாட்டார்கள்; என் பேச்சைக் கேட்கவும் மாட்டார்கள். ஏனெனில், ‘ஆண்டவர் உனக்குக் காட்சியளிக்கவில்லை’ என்று சொல்வார்கள்” என்று கூறினார்.
2ஆண்டவர் அவரை நோக்கி, “உன் கையில் இருப்பது என்ன?” என்று கேட்டார். ‘ஒரு கோல்’ என்றார் அவர்.
3‘அதைத்தரையில் விட்டெறி’ என ஆணை விடுத்தார் ஆண்டவர். அவரும் அதைத் தரையில் விட்டெறிந்தார். அது ஒரு பாம்பாக மாறியது. அதனருகிலிருந்து அவர் விலகி ஓடினார்.
4ஆண்டவர் அவரை நோக்கி, “நீ உன் கையை நீட்டி வாலைப் பிடித்துத் தூக்கு” என்றார். அவரும் தம் கையை நீட்டி அதனைத் தூக்கினார். அது அவருடைய கையில் கோலாக மாறிவிட்டது.
5“இது, தங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் — ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் — உனக்குக் காட்சியளித்தார் என அவர்கள் நம்பி ஏற்றுக் கொள்வதற்காகவே”.
6மேலும் ஆண்டவர் அவரை நோக்கி, “உன் கையை உன் மடிக்குள் இடு” என்றார். அவ்வாறே, அவர் தம் கையைத் தம் மடிக்குள் இட்டார். அதை வெளியே எடுத்தபோது, அந்தோ, அவரது கை தொழுநோய் கண்டு உறைபனி நிறமாயிருந்தது.
7பின்னர் ஆண்டவர், “உன் கையை உன் மடிக்குள் மறுபடியும் இடு” என்றார். அவ்வாறே அவரும் தம் கையை மறுபடியும் மடிக்குள் இட்டார். மடியிலிருந்து அதை அவர் எடுத்தபோது, இதோ தம் உடம்பின் நிறமாகவே அது மாறிவிட்டிருந்தது.
8அப்போது ஆண்டவர், “அவர்கள் உன்னை நம்பாமலும் முன்னைய அருஞ்செயலின் பொருளை உணராமலும் போனால், பின்னைய இவ்வருஞ்செயலின் பொருளை உணர்ந்தாவது நம்பக்கூடும்!
9அவர்கள் இவ்விரு அருஞ்செயல்களையும்கூட நம்பாமல் உன் பேச்சையும் கேட்காமல் போனால், நைல்நதி நீரை முகந்து கட்டாந்தரையில் ஊற்றுவாய். நைல் நதியில் முகந்த தண்ணீர் கட்டாந்தரையில் இரத்தமாக மாறிவிடும்” என்றார்.
10மோசே ஆண்டவரிடம்: “ஐயோ! ஆண்டவரே! நீர் உமது அடியானிடம் பேசுவதற்கும் முன்போ, பேசிய பின்போ, நாவன்மை அற்றவன் நான்! ஏனெனில், எனக்கு வாய் திக்கும்; நாவும் குழறும்” என்றார்.
11ஆண்டவர் அவரிடம், “மனிதனுக்கு வாய் அமைத்தவர் யார்? அவனை ஊமையாக அல்லது செவிடாக அல்லது பார்வையுள்ளவனாக அல்லது குருடனாக வைப்பவர் யார்? ஆண்டவராகிய நான்தானே!
12ஆகவே, இப்போதே போ! நானே உன் நாவில் இருப்பேன்; நீ பேச வேண்டியதை உனக்குக் கற்பிப்பேன்” என்றார்.
13அதற்கு அவர், “வேண்டாம், ஆண்டவரே! தகுதியுடைய வேறொருவனை நீர் இப்போதே அனுப்பிவைப்பீராக!” என்றுரைத்தார்.
14இதைக்கேட்டு ஆண்டவர் மோசேயின் மேல் சினம் கொண்டு பின்வருமாறு கூறினார்: “லேவியனான ஆரோன் உனக்குச் சகோதரன் அல்லவா? அவன் நாவன்மை உடையவன் என்று எனக்குத் தெரியும். இதோ அவன் உன்னைச் சந்திப்பதற்காக வந்து கொண்டிருக்கிறான். அவன் உன்னைக் காணும்போது மனமகிழ்வான்.
15நீ அவனிடம் பேசி, இவ்வார்த்தைகளை அவன் வாயில் வைப்பாய். நான் உன் வாயிலும் அவன் வாயிலும் இருந்து கொண்டு நீங்கள் செய்ய வேண்டியவற்றை உங்களுக்கு அறிவுறுத்துவேன்.
16உனக்குப் பதிலாக மக்களிடம் அவன் பேசுவதால், அவன் உனக்கு வாயாக இருப்பான். நீயோ அவனுக்குக் கடவுள் போல் இருப்பாய்.
17இந்தக் கோலைக் கையில் எடுத்துச் செல்வாய். இதைக் கொண்டு நீ அருஞ்செயல்கள் ஆற்றுவாய்!”

மோசே எகிப்திற்குத் திரும்புதல்

18மோசே தம் மாமனார் இத்திரோவிடம் திரும்பிச்சென்று, அவரை நோக்கி, “எகிப்தில் உள்ள என் இனத்தவரிடம் நான் திரும்பிப் போகவும், அவர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்களா என்று பார்க்கவும் வேண்டும்” என்று கூற, இத்திரோ மோசேயைப் பார்த்து, “சமாதானமாய்ப் போய்வா” என்றார்.
19மிதியான் நாட்டில் ஆண்டவரும் மோசேயை நோக்கி, “எகிப்திற்குத் திரும்பிப் போ; ஏனெனில், உன் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் எல்லோரும் இறந்துவிட்டனர்” என்றுரைத்தார்.
20எனவே, மோசே தம் மனைவியையும் தம் புதல்வர்களையும் ஒரு கழுதையின்மேல் ஏற்றிக்கொண்டு எகிப்து நாட்டுக்குத் திரும்பிச் சென்றார். கடவுளின் கோலையும் மோசே தம் கையில் எடுத்துக்கொண்டார்.
21ஆண்டவர் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: “பார், நீ எகிப்திற்குத் திரும்பிச் சென்றபின், நான் உன் கையில் ஒப்படைத்துள்ள எல்லா அருஞ் செயல்களையும் பார்வோன் முன்னிலையில் செய்து காட்டு.
22நான் அவன் இதயத்தைக் கடினப்படுத்துவேன். அவன் மக்களைப் போகவிடமாட்டான். நீ பார்வோனிடம், ‘ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: இஸ்ரயேல் என் மகன்; என் தலைப்பிள்ளை.
23நான் உனக்குக் கூறிவிட்டேன்; என்னை வழிபடுமாறு என் மகனைப் போகவிடு! அவனை அனுப்ப நீ மறுத்துவிட்டால் நானே உன் மகனை, உன் தலைப்பிள்ளையை வெட்டி வீழ்த்தப்போகிறேன்’ என்று சொல்வாய்”.
24ஆண்டவர் மோசேயை வழியில் ஒரு சத்திரத்தில் எதிர்கொண்டு அவரைக் கொல்லப்பார்த்தார்.
25அப்போது சிப்போரா ஒரு கூரிய கல்லை எடுத்துத் தன் மகனுக்கு விருத்தசேதனம் செய்து அதைக்கொண்டு மோசேயின் பாதங்களைத் தொட்டு, “நீர் எனக்கு இரத்த மணமகன்” என்றாள்.
26பின்பு, ஆண்டவர் அவரைவிட்டு விலகினார். அப்போது அவள், “விருத்தசேதனத்தின் வழியாய் நீர் எனக்கு இரத்த மணமகன்” என்றாள்.
27இதற்கிடையில் ஆண்டவர் ஆரோனை நோக்கி, “மோசேயைச் சந்திக்க பாலைநிலத்திற்குப் போ” என்றார். அவரும் சென்று கடவுளின் மலையில் அவரைச் சந்தித்து முத்தமிட்டார்.
28தம்மை அனுப்பியபொழுது, ஆண்டவர் கூறிய எல்லா வார்த்தைகளைப்பற்றியும் ஒப்படைத்த எல்லா அருஞ்செயல்களைப் பற்றியும் மோசே ஆரோனுக்கு அறிவுறுத்தினார்.
29மோசேயும் ஆரோனும் இஸ்ரயேல் மக்களின் பெரியோர்கள் அனைவரையும் ஒன்று கூட்டினார்கள்.
30ஆண்டவர் மோசேயிடம் கூறியிருந்த எல்லா வார்த்தைகளையும் ஆரோன் எடுத்துக் கூறினார். அருஞ்செயல்களையும் மக்கள் பார்க்கும் வண்ணம் செய்தார். மக்களும் நம்பினர்.
31ஆண்டவர் இஸ்ரயேல் மக்களைச் சந்தித்துவிட்டார் என்றும் அவர்களது துயரத்தைக் கண்ணோக்கிவிட்டார் என்றும் மக்கள் கேள்விப்பட்டபோது, குப்புறவிழுந்து தொழுதனர்.

4:23 விப 12:29.