குருக்களுக்கான உடைகள் செய்தல்
(விப 28:1-14)

1நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிறத் துகிலால் நெய்த மெல்லிய ஆடைகள் தூயதலத் திருப்பணிக்காகச் செய்யப்பட்டன. ஆண்டவர் மோசேக்கு அளித்த கட்டளைப்படி ஆரோனுக்காகத் திருவுடைகள் செய்யப்பட்டன.
2பொன்னையும், நீலம், கருஞ்சிவப்பு, சிவப்பு நிற நூலையும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டையும் பயன்படுத்தி ஏப்போதை அவர் செய்தார்.
3நீலம், கருஞ்சிவப்பு சிவப்புநிற நூல், கலைத்திறனுடன் அமைந்த மெல்லிய நார்ப்பட்டு ஆகியவற்றை அணிசெய்ய, பொன்தகடுகளை அடித்து இழைகளாக வெட்டினார்.
4ஏப்போதுக்கு இரு தோள்பட்டைகள் செய்து, அதன் இரு பக்கத்து ஓரங்களிலும் இணைத்தார்.
5ஏப்போதை இணைக்கும் தோள்பட்டை, அதன் ஒரு பகுதியாகவும், அதைப்போன்றே கலை நுணுக்கத்துடன் பொன்னாலும், நீலம், கருஞ்சிவப்பு, சிவப்பு நிற நூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும், ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே தயாரிக்கப்பெற்றது.
6பன்னிற மணிக்கற்களுக்கு மெருகேற்றி அவற்றைப் பொன்னிழைப் பின்புலத்தில் பதித்தனர். இஸ்ரயேல் புதல்வரின் பெயர்களை அவற்றின்மேல் முத்திரையாகப் பொறித்துப்பதித்தனர்.
7ஏப்போதின் தோள்பட்டைமேல் அவற்றை இஸ்ரயேல் புதல்வரின் நினைவுக் கற்களாக ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே பொருத்தினர்.

மார்புப் பட்டை செய்தல்
(விப 28:15-30)

8மார்புப்பட்டை, ஏப்போது போலவே, கலை வேலைப்பாட்டுடன் செய்யப்பட்டது. அது பொன்னாலும், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும் செய்யப்பட்டிருந்தது.
9மார்புப்பட்டை ஒரு சாண் நீளம், ஒரு சாண் அகலம் என்று சதுர வடிவமானதாயும் இரண்டாக மடிந்ததாயும் அமைந்தது.
10அதன்மேல் கற்களை நான்கு வரிசையாகப் பதித்தனர்; முதல் வரிசையில் பதுமராகம், புட்பராகம், மரகதம்;
11இரண்டாம் வரிசையில் மாணிக்கம், நீலமணி, வைரம்;
12மூன்றாம் வரிசையில் கெம்பு, வைடூரியம், செவ்வந்திக்கல்;
13நான்காம் வரிசையில் படிகப் பச்சை, கோமேதகம், கடல்வண்ணக்கல். இவையாவும் பொன்னிழைப் பின்புலத்தில் பதிக்கப்பட்டன.
14இந்த கற்கள் இஸ்ரயேல் புதல்வர் பெயர்களுக்கேற்பப் பன்னிரண்டு பெயர்களைக் கொண்டிருந்தன. அவை ஒவ்வொன்றிலும் ஒரு பெயர் வீதம் பன்னிரண்டு பெயர்களும் முத்திரை பொறிப்பதுபோல் வெட்டப்பட்டன.
15மார்புப் பட்டைமேல் பொருத்துவதற்காகப் பின்னல் வேலைப்பாட்டுடன் அமைந்த சங்கிலிகளைப் பசும்பொன்னால் செய்தனர்.
16மேலும், பொன் பதக்கங்கள் இரண்டும் பொன் வளையங்கள் இரண்டும் செய்தனர். பின்னர் அந்த இரு வளையங்களை மார்புப் பட்டையின் இரு மூலைகளிலும் பொருத்தி,
17இரு பொன் சங்கிலிகளையும் மார்புப் பட்டையின் மூலைகளிலுள்ள இரு வளையங்களில் மாட்டினர்.
18சங்கிலிகளின் மற்ற இரு முனைகளையும் இரு பதக்கங்களில் மாட்டினர். இவற்றை ஏப்போதின் தோள்பட்டையோடு, அதன் முன்புறமாய் பொருத்தினர்.
19இரு பொன் வளையங்கள் செய்து, அவற்றை மார்புப் பட்டையின் இரு விளிம்புகளில், உட்புற ஓரங்களில், ஏப்போதை அடுத்து இணைத்தனர்.
20மேலும், இரு பொன் வளையங்கள் செய்து அவற்றை ஏப்போதின் இரு தோள்பட்டைகளில் முன்பக்கம், கீழ்ப்பகுதியில், அது இணையும் இடத்தில் ஏப்போதின் பின்னலழகுடைய இடைக் கச்சைக்கு மேலே கோர்த்துவிட்டனர்.
21பின்னர், மார்புப் பட்டையின் வளையங்களை ஏப்போதின் வளையங்களுடன் நீல நாடாவால் இணைத்தனர். இவ்வாறு மார்புப் பட்டை ஏப்போதின் பின்னலழகு இடைக்கச்சையிலிருந்து அகலாமல் ஏப்போதின் மேல் படிந்து நிற்கும். இதுவும் ஆண்டவர் மோசேக்கு கட்டளையிட்டபடியே செய்யப்பட்டது.

குருக்களுக்கான பிற உடைகள் செய்தல்
(விப 28:31-43)

22அவர் ஏப்போதின் அங்கி முழுவதையும் நீல நிறத்தில் நெசவு வேலைப்பாட்டுடன் செய்தார்.
23அந்த அங்கியின் திறப்பைச் சுற்றிலும், மேலாடைகள் திறப்பில் அமைவது போன்று நெசவு வேலைப்பாடுள்ள ஒரு கரை அமைக்கப்பட்டது. இதனால் அங்கி கிழியாதிருக்கும்.
24அங்கியின் விளிம்பெங்கும் நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிறநூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும் மாதுளைத் தொங்கல் செய்து விடப்பட்டது.
25பசும்பொன்னால் மணிகள் செய்து அம் மணிகளை அங்கியின் விளிம்பெங்கும் உள்ள மாதுளைத் தொங்கல்களுக்கு இடையே இட்டனர்.
26ஒரு மணி, ஒரு மாதுளைத் தொங்கல்; பின்னும் ஒரு மணி, ஒரு மாதுளைத் தொங்கல் என்று திருப்பணி அங்கியின் விளிம்பெங்கும் அமைந்திருந்தன. இதுவும் ஆண்டவர் மோசேக்கு ஆணையிட்டபடியே செய்யப்பட்டது.
27ஆரோனுக்காகவும் அவர் புதல்வருக்காகவும் மெல்லிய நார்ப்பட்டால் உள்ளங்கி தைக்கப்பட்டது.
28மெல்லிய நார்ப்பட்டால் தலைப்பாகையும் தொப்பிகளும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டால் குறுங்கால்சட்டைகளும் செய்யப்பட்டன.
29முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும் நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும் பின்னல் வேலைப்பாட்டுடன் இடைக்கச்சை செய்யப்பட்டது. இதுவும் ஆண்டவர் மோசேக்கு ஆணையிட்டபடியே செய்யப்பட்டது.
30புனித மணிமுடிக்கான பட்டத்தைப் பசும் பொன்னால் செய்து, அதன் மேல் “ஆண்டவருக்கு அர்ப்பணம்” என்று முத்திரைபோல் பொறித்து வைத்தனர்.
31அது ஒரு நீல நாடாவால் தலைப்பாகையின் மேல் இணைக்கப்பட்டது. இதுவும் மோசேக்கு ஆண்டவர் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டது.

கூடாரவேலை நிறைவுபெறுதல்
(விப 35:10-19)

32சந்திப்புக் கூடாரத்தின் திருஉறைவிட வேலையெல்லாம் முடிவடைந்தது. ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டவாறே இஸ்ரயேல் மக்கள் செய்து முடித்திருந்தனர்.
33மோசேயிடம் கொண்டுவரப்பட்டவை; திருஉறைவிடக் கூடாரம், அதன் அனைத்துத் துணைக்கலன்கள், கொக்கிகள், சட்டங்கள், குறுக்குச் சட்டங்கள், தூண்கள், பாதப்பொருத்துக்கள்.
34செந்நிறமாகப் பதனிட்ட செம்மறிக்கிடாய்த் தோல்விரிப்புகள், வெள்ளாட்டுத் தோல்விரிப்புகள், திருத்தூயகத் தொங்குதிரை,
35உடன்படிக்கைப் பேழை, அதன் தண்டுகள், இரக்கத்தின் இருக்கை,
36மேசை, அதன் அனைத்துத் துணைக்கலன்கள், திருமுன்னிலை அப்பம்,
37பசும்பொன் விளக்குத்தண்டு, அதில் வரிசையாக அமைந்த அகல்கள், அதன் அனைத்துத் துணைக்கலன்கள், விளக்குக்கான எண்ணெய்,
38பொன் பீடம், திருப்பொழிவு எண்ணெய், நறுமணத்தூபம், கூடார நுழைவாயிலின் தொங்குதிரை,
39வெண்கலப் பலிபீடம், அதன் வெண்கல வலைப்பின்னல், அதன் தண்டுகள், அதன் அனைத்துத் துணைக்கலன்கள், நீர்த் தொட்டி, அதன் ஆதாரம்,
40முற்றத்தின் தொங்குதிரைகள், அதன் தூண்கள், பாதப்பொருத்துகள், முற்றத்தின் நுழைவாயிலுக்கான தொங்குதிரை, பூண்கள், முளைகள், சந்திப்புக் கூடாரத்தின் திருஉறைவிடத் திருப்பணிக்குத் தேவையான அனைத்துத் துணைக்கலன்கள்,
41தூயகத்தில் பணிபுரிவதற்கான அழகுறப் பின்னப்பட்ட உடைகள், குருவாகிய ஆரோனுக்கும் அவர் புதல்வருக்கும் குருத்துவப் பணி புரிவதற்கான திருவுடைகள் ஆகியவை.
42ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி இஸ்ரயேல் மக்கள் எல்லா வேலைகளையும் நுணுக்கமாகச் செய்து முடித்திருந்தனர்.
43மோசே எல்லா வேலைகளையும் பார்வையிட்டார். ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடியே அவை யாவும் செய்யப்பட்டிருந்தன. மோசே அவர்களுக்கு ஆசி வழங்கினார்.