1வாருங்கள்; ஆண்டவரைப்
புகழ்ந்து பாடுங்கள்;
நமது மீட்பின் பாறையைப்
போற்றி ஆர்ப்பரியுங்கள்.
2நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்;
புகழ்ப் பாக்களால் அவரைப்
போற்றி ஆர்ப்பரிப்போம்.
3ஏனெனில், ஆண்டவர்
மாண்புமிகு இறைவன்;
தெய்வங்கள் அனைத்திற்கும்
மேலான பேரரசர்.
4பூவுலகின் ஆழ்பகுதிகள்
அவர்தம் கையில் உள்ளன;
மலைகளின் கொடுமுடிகளும்
அவருக்கே உரியன.
5கடலும் அவருடையதே;
அவரே அதைப் படைத்தார்;
உலர்ந்த தரையையும்
அவருடைய கைகளே உருவாக்கின.
6வாருங்கள்; தாள்பணிந்து
அவரைத் தொழுவோம்;
நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன்
முழந்தாளிடுவோம்.
7அவரே நம் கடவுள்;
நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்;
நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள்.
இன்று நீங்கள் அவரது குரலுக்குச்
செவிகொடுத்தால் எத்துணை நலம்!
8அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில்
மாசாவிலும் செய்ததுபோல்,
உங்கள் இதயத்தைக்
கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
9அங்கே உங்கள் மூதாதையர்
என்னைச் சோதித்தனர்;
என் செயல்களைக் கண்டிருந்தும்
என்னைச் சோதித்துப் பார்த்தனர்.
10நாற்பது ஆண்டளவாய்
அந்தத் தலைமுறை
எனக்கு வெறுப்பூட்டியதால்,
நான் உரைத்தது: ‛அவர்கள்
உறுதியற்ற உள்ளம் கொண்ட மக்கள்;
என் வழிகளை அறியாதவர்கள்’.
11எனவே, நான் சினமுற்று,
‛நான் அளிக்கும்
இளைப்பாற்றியின் நாட்டிற்குள்
நுழையவே மாட்டார்கள்’ என்று
ஆணையிட்டுக் கூறினேன்.