புகழ்ச்சிப்பாடல்
(ஓய்வு நாளுக்கான புகழ்ப்பாடல்)

1ஆண்டவருக்கு நன்றியுரைப்பது

நன்று; உன்னதரே!

உமது பெயரைப்

புகழ்ந்து பாடுவது நன்று.

2காலையில் உமது பேரன்பையும்

இரவில் உமது வாக்குப் பிறழாமையையும்

3பத்துநரம்பு வீணையோடும்

தம்புரு, சுரமண்டல இசையோடும்

எடுத்துரைப்பது நன்று.

4ஏனெனில், ஆண்டவரே!

உம் வியத்தகு செயல்களால்

என்னை மகிழ்வித்தீர்;

உம் வலிமைமிகு செயல்களைக் குறித்து

நான் மகிழ்ந்து பாடுவேன்.

5ஆண்டவரே! உம் செயல்கள்

எத்துணை மேன்மையாவை;

உம் எண்ணங்கள் எத்துணை ஆழமானவை.

6அறிவிலிகள் அறியாததும்

மூடர் உணராததும் இதுவே:

7பொல்லார் புல்லைப்போன்று

செழித்து வளரலாம்;

தீமை செய்வோர் அனைவரும்

பூத்துக் குலுங்கலாம்!

ஆனால், அவர்கள் என்றும்

அழிவுக்கு உரியவரே;

8நீரோ ஆண்டவரே!

என்றுமே உயர்ந்தவர்.

9ஏனெனில், ஆண்டவரே!

உம் எதிரிகள் – ஆம், உம் எதிரிகள் –

அழிவது திண்ணம்;

தீமை செய்வோர் அனைவரும்

சிதறுண்டுபோவர்.

10காட்டைருமைக்கு நிகரான

வலிமையை எனக்கு அளித்தீர்;

புது எண்ணெயை என்மேல் பொழிந்தீர்.

11என் எதிரிகளின் வீழ்ச்சியை

நான் கண்ணாரக் கண்டேன்;

எனக்கு எதிரான பொல்லார்க்கு

நேரிட்டதை நான் காதாரக் கேட்டேன்.

12நேர்மையாளர் பேரீச்சை மரமெனச்

செழித்தோங்குவர்;

லெபனோனின் கேதுரு மரமெனத்

தழைத்து வளர்வர்.

13ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர்

நம் கடவுளின் கோவில் முற்றங்களில்

செழித்தோங்குவர்.

14அவர்கள் முதிர் வயதிலும் கனிதருவர்;

என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்;

15‛ஆண்டவர் நேர்மையுள்ளவர்;

அவரே என் பாறை;

அவரிடம் அநீதி ஏதுமில்லை’

என்று அறிவிப்பர்.