1ஆண்டவருக்கு நன்றியுரைப்பது
நன்று; உன்னதரே!
உமது பெயரைப்
புகழ்ந்து பாடுவது நன்று.
2காலையில் உமது பேரன்பையும்
இரவில் உமது வாக்குப் பிறழாமையையும்
3பத்துநரம்பு வீணையோடும்
தம்புரு, சுரமண்டல இசையோடும்
எடுத்துரைப்பது நன்று.
4ஏனெனில், ஆண்டவரே!
உம் வியத்தகு செயல்களால்
என்னை மகிழ்வித்தீர்;
உம் வலிமைமிகு செயல்களைக் குறித்து
நான் மகிழ்ந்து பாடுவேன்.
5ஆண்டவரே! உம் செயல்கள்
எத்துணை மேன்மையாவை;
உம் எண்ணங்கள் எத்துணை ஆழமானவை.
6அறிவிலிகள் அறியாததும்
மூடர் உணராததும் இதுவே:
7பொல்லார் புல்லைப்போன்று
செழித்து வளரலாம்;
தீமை செய்வோர் அனைவரும்
பூத்துக் குலுங்கலாம்!
ஆனால், அவர்கள் என்றும்
அழிவுக்கு உரியவரே;
8நீரோ ஆண்டவரே!
என்றுமே உயர்ந்தவர்.
9ஏனெனில், ஆண்டவரே!
உம் எதிரிகள் – ஆம், உம் எதிரிகள் –
அழிவது திண்ணம்;
தீமை செய்வோர் அனைவரும்
சிதறுண்டுபோவர்.
10காட்டைருமைக்கு நிகரான
வலிமையை எனக்கு அளித்தீர்;
புது எண்ணெயை என்மேல் பொழிந்தீர்.
11என் எதிரிகளின் வீழ்ச்சியை
நான் கண்ணாரக் கண்டேன்;
எனக்கு எதிரான பொல்லார்க்கு
நேரிட்டதை நான் காதாரக் கேட்டேன்.
12நேர்மையாளர் பேரீச்சை மரமெனச்
செழித்தோங்குவர்;
லெபனோனின் கேதுரு மரமெனத்
தழைத்து வளர்வர்.
13ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர்
நம் கடவுளின் கோவில் முற்றங்களில்
செழித்தோங்குவர்.
14அவர்கள் முதிர் வயதிலும் கனிதருவர்;
என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்;
15‛ஆண்டவர் நேர்மையுள்ளவர்;
அவரே என் பாறை;
அவரிடம் அநீதி ஏதுமில்லை’
என்று அறிவிப்பர்.