பெருமை மிகு எருசலேம்
(கோராகியரின் புகழ்ப்பாடல்)

1நகரின் அடித்தளம்

திருமலைகளின்மீது

அமைந்துள்ளது.

2யாக்கோபின் உறைவிடங்கள்

அனைத்தையும்விட

ஆண்டவர் சீயோன் நகர வாயில்களை

விரும்புகின்றார்.

3கடவுளின் நகரே! உன்னைப்பற்றி

மேன்மையானவை

பேசப்படுகின்றன. (சேலா)

4எகிப்தையும் பாபிலோனையும்

என்னை அறிந்தவைகளாகக் கொள்வேன்;

பெலிஸ்தியர், தீர் மற்றும் எத்தியோப்பியா

நாட்டினரைக் குறித்து,

‛இவர்கள் இங்கேயே

பிறந்தவர்கள்’ என்று கூறப்படும்.

5‛இங்கேதான் எல்லாரும் பிறந்தனர்;

உன்னதர்தாமே அதை

நிலைநாட்டியுள்ளார்!’ என்று

சீயோனைப்பற்றிச் சொல்லப்படும்.

6மக்களினங்களின் பெயர்களைப்

பதிவு செய்யும்போது,

‛இவர் இங்கேதான் பிறந்தார்’ என

ஆண்டவர் எழுதுவார். (சேலா)

7ஆடல் வல்லாருடன்

பாடுவோரும் சேர்ந்து

‛எங்கள் நலன்களின் ஊற்று

உன்னிடமே உள்ளது;

எல்லாரின் உறைவிடமும்

உன்னிடமே உள்ளது’ என்பர்.