1ஆண்டவரே! உமது நாட்டின்மீது
அருள் கூர்ந்தீர்;
யாக்கோபினரை முன்னைய
நன்னிலைக்குக் கொணர்ந்தீர்.
2உமது மக்களின் குற்றத்தை மன்னித்தீர்;
அவர்களின் பாவங்கள் அனைத்தையும்
மறைத்துவிட்டீர். (சேலா)
3உம் சினம் முழுவதையும்
அடக்கிக் கொண்டீர்;
கடும் சீற்றம் கொள்வதை
விலக்கிக் கொண்டீர்.
4எம் மீட்பராம் கடவுளே!
எங்களை முன்னைய
நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்;
எங்கள்மீது உமக்குள்ள சினத்தை
அகற்றிக்கொள்ளும்.
5என்றென்றுமா எங்கள்மேல் நீர்
சினம் கொள்வீர்?
தலைமுறைதோறுமா
உமது கோபம் நீடிக்கும்?
6உம் மக்கள் உம்மில் மகிழ்வுறுமாறு,
எங்களுக்குப் புத்துயிர் அளிக்கமாட்டீரோ?
7ஆண்டவரே, உமது பேரன்பை
எங்களுக்குக் காட்டியருளும்;
உமது மீட்பையும்
எங்களுக்குத் தந்தருளும்.
8ஆண்டவராம் இறைவன்
உரைப்பதைக் கேட்பேன்;
தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு
நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்;
அவர்களோ மடமைக்குத்
திரும்பிச் செல்லலாகாது.
9அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு
அவரது மீட்பு அண்மையில் உள்ளது
என்பது உறுதி; நம் நாட்டில்
அவரது மாட்சி குடிகொள்ளும்.
10பேரன்பும் உண்மையும்
ஒன்றையொன்று சந்திக்கும்;
நீதியும் நிறைவாழ்வும்
ஒன்றையொன்று முத்தமிடும்.
11மண்ணினின்று உண்மை முளைத்தெழும்;
விண்ணினின்று நீதி கீழ்நோக்கும்.
12நல்லதையே ஆண்டவர் அருள்வார்;
நல்விளைவை நம்நாடு நல்கும்.
13நீதி அவர்முன் செல்லும்;
அவர்தம் அடிச்சுவடுகளுக்கு
வழி வகுக்கும்.