1யூதாவில் கடவுள் தம்மையே
வெளிப்படுத்தியுள்ளார்;
இஸ்ரயேலில் அவரது பெயர்
மாண்புடன் திகழ்கின்றது.
2எருசலேமில் அவரது கூடாரம்
இருக்கின்றது; சீயோனில்
அவரது உறைவிடம் இருக்கின்றது.
3அங்கே அவர் மின்னும் அம்புகளை
முறித்தெறிந்தார்.
கேடயத்தையும் வாளையும்
படைக்கலன்களையும்
தகர்த்தெறிந்தார். (சேலா)
4ஆண்டவரே, நீர் ஒளிமிக்கவர்;
உமது மாட்சி என்றுமுள
மலைகளினும் உயர்ந்தது.
5நெஞ்சுறுதி கொண்ட வீரர்
கொள்ளையிடப்பட்டனர்;
அவர்கள் துயிலில் ஆழ்ந்துவிட்டனர்;
அவர்களின் கைகள்
போர்க்கலன்களைத் தாங்கும்
வலுவிழந்தன.
6யாக்கோபின் கடவுளே,
உமது கடிந்துரையால்
குதிரைகளும் வீரர்களும்
மடிந்து விழுந்தனர்.
7ஆண்டவரே,
நீர் அஞ்சுதற்கு உரியவர்;
நீர் சினமுற்ற வேளையில்
உம் திருமுன் நிற்கக்கூடியவர் யார்?
8-9கடவுளே! நீதித் தீர்ப்பளிக்க
நீர் எழுந்தபோது,
மண்ணுலகில் ஒடுக்கப்பட்டோரைக்
காக்க விழைந்தபோது,
வானின்று தீர்ப்பு முழங்கச் செய்தீர்;
பூவுலகு அச்சமுற்று அடங்கியது. (சேலா)
10மாறாக, சினமுற்ற மாந்தர்,
உம்மைப் புகழ்தேத்துவர்;
உமது கோபக் கனலுக்குத் தப்பியோர்
உமக்கு விழாக்கொண்டாடுவர்;
11உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப்
பொருத்தனை செய்து
அதை நிறைவேற்றுங்கள்;
அவரைச் சுற்றலுமிருக்கிற அனைவரும்
அஞ்சுதற்குரிய அவருக்கே
காணிக்கைகளைக்
கொண்டு வருவராக!
12செருக்குற்ற தலைவர்களை
அவர் அழிக்கின்றார்;
பூவுலகின் அரசர்க்குப் பேரச்சம் ஆனார்.