அரசருக்காக மன்றாடல்
(சாலமோனுக்கு உரியது)

1கடவுளே, அரசருக்கு உமது

நீதித்தீர்ப்பை வழங்கும்

ஆற்றலை அளியும்;

அரச மைந்தரிடம்

உமது நீதி விளங்கச் செய்யும்.

2அவர் உம் மக்களை

நீதியோடு ஆள்வாராக!

உம்முடையவரான எளியோர்க்கு

நீதித்தீர்ப்பு வழங்குவாராக!

3மலைகள் மக்களுக்குச்

சமாதானத்தைக் கொடுக்கட்டும்;

குன்றுகள் நீதியை விளைவிக்கட்டும்.

4எளியோரின் மக்களுக்கு

அவர் நீதி வழங்குவாராக!

ஏழைகளின் பிள்ளைகளைக் காப்பாராக;

பிறரை ஒடுக்குவோரை

நொறுக்கி விடுவாராக!

5கதிரவனும் நிலாவும் உள்ளவரையில்,

உம் மக்கள் தலைமுறை தலைமுறையாக

உமக்கு அஞ்சி நடப்பார்களாக.

6அவர் புல்வெளியில் பெய்யும்

தூறலைப்போல் இருப்பாராக;

நிலத்தில் பொழியும் மழையைப் போல்

விளங்குவாராக.

7அவர் காலத்தில்

நீதி தழைத்தோங்குவதாக;

நிலா உள்ள வரையில்

மிகுந்த சமாதானம் நிலவுவதாக.

8ஒரு கடலிலிருந்து

அடுத்த கடல்வரைக்கும்

அவர் ஆட்சி செலுத்துவார்;

பேராற்றிலிருந்து

உலகின் எல்லை வரைக்கும்

அவர் அரசாள்வார்.

9பாலைவெளி வாழ்வோர்

அவர்முன் குனிந்து வணங்குவர்;

அவர் எதிரிகள் மண்ணை நக்குவார்கள்.

10தர்சீசு அரசர்களும்

தீவுகளின் அரசர்களும்

காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்;

சேபாவிலும் செபாவிலுமுள்ள அரசர்கள்

நன்கொடைகளைக் கொண்டுவருவார்கள்.

11எல்லா அரசர்களும் அவர்முன்

தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள்;

எல்லா இனத்தவரும்

அவருக்கு ஊழியம் செய்வார்கள்.

12தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும்

திக்கற்ற எளியோரையும்

அவர் விடுவிப்பார்.

13வறியோர்க்கும் ஏழைகட்கும்

அவர் இரக்கம் காட்டுவார்;

ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார்.

14அவர்கள் உயிரைக் கொடுமையினின்றும்

வன்முறையினின்றும் விடுவிப்பார்;

அவர்கள் இரத்தம் அவர் பார்வையில்

விலைமதிப்பற்றது.

15அவர் நீடுழி வாழ்க! சேபாவின் பொன்

அவருக்குக் கொடுக்கப்படும்;

அவருக்காக இடையறாது

வேண்டுதல் செய்யப்படுவதாக!

அவர்மீது ஆசிகள் வழங்கப்பெறுமாறு

நாள் முழுதும் மன்றாடப்படுவதாக!

16நாட்டில் தானியம் மிகுந்திடுக!

மலைகளின் உச்சிகளில்

பயிர்கள் அசைந்தாடுக!

லெபனோனைப்போல்

அவை பயன் தருக!

வயல்வெளிப் புல்லென

நகரின் மக்கள் பூத்துக் குலுங்குக!

17அவர் பெயர்

என்றென்றும் நிலைத்திருப்பதாக!

கதிரவன் உள்ளவரையில்

அவர் பெயர் நிலைப்பதாக!

அவர்மூலம் மனிதர்

ஆசிபெற விழைவராக!

எல்லா நாட்டினரும் அவரை

நற்பேறு பெற்றவரென வாழ்த்துவராக!

18ஆண்டவராகிய கடவுள்,

இஸ்ரயேலின் கடவுள் போற்றி! போற்றி!

அவர் ஒருவரே

வியத்தகு செயல்களைப் புரிகின்றார்!

19மாட்சி பொருந்திய அவரது பெயர்

என்றென்றும் புகழப்பெறுவதாக!

அவரது மாட்சி

உலகெல்லாம் நிறைந்திருப்பதாக!

ஆமென், ஆமென்.

20(ஈசாயின் மகனாகிய தாவீதின்

மன்றாட்டுகள் நிறைவுற்றன.)


72:8 செக் 9:10.