பாதுகாப்புக்காக வேண்டல்
(பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா)

1கடவுளே! என் விண்ணப்பக்

குரலைக் கேட்டருளும்;

என் எதிரியினால் விளையும்

அச்சத்தினின்று

என் உயிரைக் காத்தருளும்.

2பொல்லாரின் சூழ்ச்சியினின்றும்

தீயோரின் திட்டத்தினின்றும்

என்னை மறைத்துக் காத்திடும்.

3அவர்கள் தங்கள் நாவை வாளைப் போலக்

கூர்மையாக்குகின்றார்கள்;

நஞ்சுள்ள சொற்களை

அம்புபோல் எய்கின்றார்கள்;

4மறைவிடங்களில் இருந்துகொண்டு

மாசற்றோரைக்

காயப்படுத்துகின்றார்கள்;

அச்சமின்றி அவர்களைத்

திடீரெனத் தாக்குகின்றார்கள்;

5தீங்கு இழைப்பதில்

உறுதியாய் இருக்கின்றார்கள்;

‛நம்மை யார் பார்க்க முடியும்’

என்று சொல்லி மறைவாகக்

கண்ணிகளை வைப்பதற்குச்

சதித்திட்டம் தீட்டுகின்றார்கள்;

6நேர்மையற்ற செயல்களைச் செய்யத்

திட்டமிடுகின்றார்கள்;

‛எங்கள் திறமையில்

தந்திரமான சூழ்ச்சியை

உருவாக்கியுள்ளோம்’ என்கின்றார்கள்;

மனிதரின் உள்ளமும் உள்நோக்கமும்

மிக ஆழமானவை.

7ஆனால், கடவுள் அவர்கள்மேல்

அம்புகளை எய்ய,

அவர்கள் உடனே காயமுற்று வீழ்வார்கள்.

8தங்களது நாவினாலேயே

அவர்கள் அழிவார்கள்;

அவர்களைப் பார்ப்போர் அனைவரும்

எள்ளி நகைப்பார்கள்.

9அப்பொழுது எல்லா மனிதரும்

அச்சம் கொள்வர்;

கடவுளின் செயல்களை

எடுத்துரைப்பர்;

அவரது அருஞ்செயலைப்பற்றிச் சிந்திப்பர்.

10நேர்மையாளர் ஆண்டவரில் அகமகிழ்வர்;

அவரிடம் அடைக்கலம் புகுவர்;

நேரிய உள்ளத்தோர் அவரைப் போற்றிடுவர்.