1கடவுளே! என் விண்ணப்பக்
குரலைக் கேட்டருளும்;
என் எதிரியினால் விளையும்
அச்சத்தினின்று
என் உயிரைக் காத்தருளும்.
2பொல்லாரின் சூழ்ச்சியினின்றும்
தீயோரின் திட்டத்தினின்றும்
என்னை மறைத்துக் காத்திடும்.
3அவர்கள் தங்கள் நாவை வாளைப் போலக்
கூர்மையாக்குகின்றார்கள்;
நஞ்சுள்ள சொற்களை
அம்புபோல் எய்கின்றார்கள்;
4மறைவிடங்களில் இருந்துகொண்டு
மாசற்றோரைக்
காயப்படுத்துகின்றார்கள்;
அச்சமின்றி அவர்களைத்
திடீரெனத் தாக்குகின்றார்கள்;
5தீங்கு இழைப்பதில்
உறுதியாய் இருக்கின்றார்கள்;
‛நம்மை யார் பார்க்க முடியும்’
என்று சொல்லி மறைவாகக்
கண்ணிகளை வைப்பதற்குச்
சதித்திட்டம் தீட்டுகின்றார்கள்;
6நேர்மையற்ற செயல்களைச் செய்யத்
திட்டமிடுகின்றார்கள்;
‛எங்கள் திறமையில்
தந்திரமான சூழ்ச்சியை
உருவாக்கியுள்ளோம்’ என்கின்றார்கள்;
மனிதரின் உள்ளமும் உள்நோக்கமும்
மிக ஆழமானவை.
7ஆனால், கடவுள் அவர்கள்மேல்
அம்புகளை எய்ய,
அவர்கள் உடனே காயமுற்று வீழ்வார்கள்.
8தங்களது நாவினாலேயே
அவர்கள் அழிவார்கள்;
அவர்களைப் பார்ப்போர் அனைவரும்
எள்ளி நகைப்பார்கள்.
9அப்பொழுது எல்லா மனிதரும்
அச்சம் கொள்வர்;
கடவுளின் செயல்களை
எடுத்துரைப்பர்;
அவரது அருஞ்செயலைப்பற்றிச் சிந்திப்பர்.
10நேர்மையாளர் ஆண்டவரில் அகமகிழ்வர்;
அவரிடம் அடைக்கலம் புகுவர்;
நேரிய உள்ளத்தோர் அவரைப் போற்றிடுவர்.