1கடவுளே! நீர் எங்களை
வெறுத்து ஒதுக்கிவிட்டீர்;
எங்களை நொறுக்கிவிட்டீர்;
எங்கள்மீது சீற்றம் கொண்டீர்;
இப்பொழுதோ, எங்களை நோக்கித்
திரும்பியருளும்.
2நிலத்தை நீர் அதிரச் செய்தீர்;
அதில் பிளவு உண்டாகச் செய்தீர்;
அதன் வெடிப்புகளைச் சீர்ப்படுத்தும்,
அது ஆட்டம் கண்டுள்ளது;
3உம் மக்களைக்
கடும் துன்பத்தைக் காணச் செய்தீர்;
மதியை மயக்கும் மதுவை
எங்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர்.
4உமக்கு அஞ்சி நடப்போர்
எதிரிகளின் அம்பினின்று
தப்பித்துக்கொள்ளுமாறு
அவர்களுக்கெனக்
கொடி ஒன்றை ஏற்றிவைத்தீர். (சேலா)
5உம் அன்பர்கள் விடுதலை பெறுமாறு,
உமது வலக்கரத்தால்
எங்களுக்குத் துணை செய்யும்;
எங்கள் விண்ணப்பத்திற்குப் பதிலளியும்!
6கடவுள் தமது தூயகத்தினின்று
இவ்வாறு உரைத்தார்;
வெற்றிக் களிப்பிடையே
செக்கேமைப் பங்கிடுவேன்;
சுக்கோத்துப் பள்ளத்தாக்கை
அளந்து கொடுப்பேன்.
7கிலயாது என்னுடையது;
மனாசேயும் என்னுடையதே;
எப்ராயிம் என் தலைச்சீரா;
யூதா என் செங்கோல்!
8மோவாபு எனக்குப்
பாதம்கழுவும் பாத்திரம்;
ஏதோமின்மீது
என் மிதியடியை எறிவேன்;
பெலிஸ்தியாவை வென்று ஆர்ப்பரிப்பேன்.
9அரண்சூழ் நகரினுள்
என்னை இட்டுச் செல்பவர் யார்?
ஏதோம் வரை
என்னைக் கூட்டிச் செல்பவர் யார்?
10கடவுளே! நீர் எங்களைக்
கைவிட்டு வீட்டீர் அன்றோ!
கடவுளே! நீர் எங்கள் படைகளோடு
புறப்படவில்லை அன்றோ!
11எதிரியை மேற்கொள்ள
எங்களுக்கு உதவும்;
மனிதர் தரும் உதவியோ வீண்;
12கடவுளின் துணையால்
வீரத்துடன் போரிடுவோம்;
அவரே நம் எதிரிகளை மிதித்து விடுவார்.