1கடவுளே! என் மன்றாட்டுக்குச்
செவி சாய்த்தருளும்;
நான் முறையிடும் வேளையில்
உம்மை மறைத்துக் கொள்ளாதேயும்.
2என் விண்ணப்பத்தைக் கேட்டு
மறுமொழி அருளும்;
என் கவலைகள் என் மன அமைதியைக்
குலைத்துவிட்டன.
3என் எதிரியின் கூச்சலாலும்,
பொல்லாரின் ஒடுக்குதலாலும்
நடுங்குகின்றேன்;
ஏனெனில், அவர்கள் எனக்கு
இடையூறு பல செய்கின்றனர்;
சினமுற்று என்னைப் பகைக்கின்றனர்.
4கடுந்துயரம்
என் உள்ளத்தைப் பிளக்கின்றது;
சாவின் திகில் என்னைக்
கவ்விக்கொண்டது.
5அச்சமும் நடுக்கமும்
என்னை ஆட்கொண்டன;
திகில் என்னைக் கவ்விக்கொண்டது.
6நான் சொல்கின்றேன்;
‛புறாவுக்கு உள்ளது போன்ற
சிறகுகள் எனக்கு யார் அளிப்பார்?
நான் பறந்து சென்று இளைப்பாறுவேனே!
7இதோ! நெடுந்தொலை சென்று,
பாலை நிலத்தில்
தஞ்சம் புகுந்திருப்பேனே! (சேலா)
8பெருங்காற்றினின்றும்
புயலினின்றும் தப்பிக்கப்
புகலிடம் தேட விரைந்திருப்பேனே!
9என் தலைவரே! அவர்களின்
திட்டங்களைக் குலைத்துவிடும்;
அவர்களது பேச்சில்
குழப்பத்தை உண்டாக்கும்;
ஏனெனில், நகரில் வன்முறையையும்
கலகத்தையும் காண்கின்றேன்’.
10இரவும் பகலும் அவர்கள்
அதன் மதில்கள் மேல் ஏறி
அதைச் சுற்றி வருகின்றனர்;
கேடும் கொடுமையும்
அதில் நிறைந்திருக்கின்றன.
11அதன் நடுவே இருப்பது அழிவு;
அதன் தெருக்களில் பிரியாதிருப்பன
கொடுமையும் வஞ்சகமுமே!
12என்னை இழித்துரைக்கின்றவன்
என் எதிரியல்ல; அப்படியிருந்தால்,
பொறுத்துக்கொள்வேன்;
எனக்கெதிராய்த் தற்பெருமை கொள்பவன்
எனக்குப் பகைவன் அல்ல;
அப்படியிருந்தால், அவனிடமிருந்து
என்னை மறைத்துக்கொள்வேன்.
13ஆனால், அவன் வேறு யாரும் அல்ல;
என் தோழனாகிய நீயே;
என் நண்பனும் என்னோடு
நெருங்கிப் பழகினவனுமாகிய நீதான்.
14நாம் ஒன்று சேர்ந்து உரையாடினோம்;
கடவுளின் இல்லத்தில்
பெருங்கூட்டத்தினிடையே
நடமாடினோம்;
15என் எதிரிகளுக்குத்
திடீரெனச் சாவு வரட்டும்;
அவர்கள் உயிரோடு
பாதாளத்தில் இறங்கட்டும்;
ஏனெனில் அவர்கள் தங்குமிடத்தில்
அவர்கள் நடுவிலேயே
தீமை புகுந்து விட்டது.
16நான் கடவுளை நோக்கி மன்றாடுவேன்;
ஆண்டவரும் என்னை மீட்டருள்வார்.
17காலை, நண்பகல், மாலை வேளைகளில்
நான் முறையிட்டுப் புலம்புகின்றேன்;
அவர் என் குரலைக் கேட்டருள்வார்.
18அணிவகுத்து என்னை
எதிர்த்து வந்தோர் மிகப் பலர்;
என்னோடு போரிட்டோர் கையினின்று
அவர் என்னை விடுவித்துப் பாதுகாத்தார்.
19தொன்றுதொட்டு
அரியணையில் வீற்றிருக்கும்
கடவுள் எனக்குச் செவிசாய்ப்பார்;
அவர்களைத் தாழ்த்திவிடுவார்; (சேலா)
ஏனெனில், அவர்கள் தம்
நெறிமுறையை மாற்றிக் கொள்ளவில்லை;
கடவுளுக்கு அஞ்சுவதும் இல்லை.
20தன்னோடு நட்புறவில்
இருந்தவர்களை எதிர்த்து
அந்த நண்பன் தன் கையை ஓங்கினான்;
தன் உடன்படிக்கையையும் மீறினான்.
21அவன் பேச்சு
வெண்ணெயிலும் மிருதுவானது;
அவன் உள்ளத்திலோ போர்வெறி;
அவன் சொற்கள்
எண்ணெயிலும் மென்மையானவை;
அவையோ உருவிய வாள்கள்.
22ஆண்டவர் மேல்
உன் கவலையைப் போட்டுவிடு;
அவர் உனக்கு ஆதரவளிப்பார்;
அவர் நேர்மையாளரை
ஒருபோதும் வீழ்ச்சியுற விடமாட்டார்.
23கடவுளே, நீர் அவர்களைப்
படுகுழியில் விழச்செய்யும்;
கொலைவெறியரும் வஞ்சகரும்
தம் ஆயுள் காலத்தில்
பாதிகூடத் தாண்டமாட்டார்;
ஆனால், நான்
உம்மையே நம்பியிருக்கின்றேன்.