இறைவனின் தீர்ப்பும் திருவருளும்
(பாடகர் தலைவர்க்கு: அகிமெலக்கின் வீட்டுக்குத் தாவீது போனாரென்று ஏதோமியன் தோயேகு சவுலுக்கு அறிவித்த போது தாவீது பாடிய அறப்பாடல்)

1வலியோனே! தீமை செய்வதில்

ஏன் பெருமை கொள்கின்றாய்?

இறைவனின் பேரன்பு

எந்நாளும் உள்ளது.

2கேடுவிளைவிக்க நீ திட்டமிடுகின்றாய்;

உனது நா தீட்டிய கத்தி போன்றது;

வஞ்சகத்தில் தேர்ந்தோன் நீ அன்றோ!

3நன்மை செய்வதைவிட

தீமை செய்வதையே விரும்புகின்றாய்;

உண்மை பேசுவதைவிட

பொய் பேசுவதையே

விரும்புகின்றாய். (சேலா)

4நரம்பில்லா நாவுடையோனே!

நீ விரும்பும் சொற்கள் அனைத்தும்

கேடு விளைவிப்பனவே!

5ஆகவே! கடவுள் உன்னை

என்றும் மீளாதபடி நொறுக்கிவிடுவார்;

உன்னைத் தூக்கி எறிவார்;

கூடாரத்தினின்று

உன்னைப் பிடுங்கி எறிவார்;

உயிர் வாழ்வோரின் உலகினின்று

உன்னை வேரோடு

களைந்து விடுவார். (சேலா)

6நேர்மையாளர் அதன்

கடுமையைக் கண்டு திகிலடைவர்;

மேலும், உன்னை

எள்ளி நகையாடிக் கூறுவர்;

7‛இதோ! பாருங்கள்; இவன் தான்

கடவுளைத் தன் புகலிடமாய்க்

கொள்ளாதவன்;
தன் செல்வப் பெருக்கில்

நம்பிக்கை வைத்தவன்;

அழிவுச் செயலையே

புகலிடமாய்க் கொண்டவன்!’

8நானோ, கடவுளின் இல்லத்தில்

பச்சை ஒலிவமரக்கன்றுபோல்

இருக்கின்றேன்;

கடவுளின் பேரன்பில்

எப்போதும் நிலையாக நம்பிக்கை

வைத்திருக்கின்றேன்.

9கடவுளே! நீர் இவ்வாறு

எனக்குச் செய்துள்ளதால்,

உமக்கு என்றென்றும் நன்றி கூறுவேன்;

உம் அன்பரின் முன்னிலையில்,

உம் பெயர்மீது நம்பிக்கை கொள்வேன்;

இதுவே நன்று.


52 தலைப்பு: 1 சாமு 22:2-9.