பாதுகாப்புக்காக மன்றாடல்
(பாடகர் தலைவர்க்கு: குழல்களுடன்; தாவீதின் புகழ்ப்பா)

1ஆண்டவரே, என் விண்ணப்பத்திற்குச்

செவிசாய்த்தருளும்;

என் பெருமூச்சைக் கவனித்தருளும்.

2என் அரசரே, என் கடவுளே,

என் கெஞ்சும் குரலை உற்றுக்கேளும்;

ஏனெனில் நான் உம்மை நோக்கியே

மன்றாடுகின்றேன்.

3ஆண்டவரே, விடியற்காலையில்

என் குரலைக் கேட்டருளும்;

வைகறையில் உமக்காக வழிமேல்

விழிவைத்துக் காத்திருப்பேன்.

4ஏனெனில், நீர் பொல்லாங்கைப் பார்த்து

மகிழும் இறைவன் இல்லை;

உமது முன்னிலையில் தீமைக்கு இடமில்லை.

5ஆணவமிக்கோர்

உமது கண்முன் நிற்க மாட்டார்;

தீங்கிழைக்கும் அனைவரையும்

நீர் வெறுக்கின்றீர்.

6பொய் பேசுவோரை நீர் அழித்திடுவீர்;

கொலை வெறியரையும் வஞ்சகரையும்

அருவருக்கின்றீர்.

7நானோ உம் பேரருளால்

உமது இல்லம் சென்றிடுவேன்;

உம் திருத்தூயகத்தை நோக்கி

இறையச்சத்துடன்

உம்மைப் பணிந்திடுவேன்;

8ஆண்டவரே, எனக்குப் பகைவர்

பலர் இருப்பதால்,

உமது நீதியின் பாதையில்

என்னை நடத்தும்;

உமது செம்மையான வழியை

எனக்குக் காட்டியருளும்.

9ஏனெனில், அவர்கள் வாயில்

உண்மை இல்லை; அவர்கள் உள்ளம்
அழிவை உண்டாக்கும்;

அவர்கள் தொண்டை திறந்த பிணக்குழி;

அவர்கள் நா வஞ்சகம் பேசும்.

10கடவுளே, அவர்களின் குற்றங்களுக்குரிய

தண்டனையை அவர்களுக்கு அளியும்;

அவர்கள் தங்கள் சூழ்ச்சிகளாலேயே

வீழ்ச்சியுறட்டும்;

அவர்களுடைய ஏராளமான

தீச்செயல்களை முன்னிட்டு,

அவர்களைப் புறம்பே தள்ளிவிடும்.

ஏனெனில், அவர்கள்

உம்மை எதிர்த்துள்ளார்கள்.

11ஆனால், உம்மிடம் அடைக்கலம் புகுவோர்

அனைவரும் மகிழ்வர்;

அவர்கள் எந்நாளும் களித்து ஆர்ப்பரிப்பர்;

நீர் அவர்களைப் பாதுகாப்பீர்;

உமது பெயரில் பற்றுடையோர்

உம்மில் அக்களிப்பர்.

12ஏனெனில், ஆண்டவரே,

நேர்மையாளர்க்கு நீர் ஆசிவழங்குவீர்;

கருணை என்னும் கேடயத்தால்

அவரை மறைத்துக் காப்பீர்.


5:9 உரோ 3:13.