1ஆண்டவரே, என் விண்ணப்பத்திற்குச்
செவிசாய்த்தருளும்;
என் பெருமூச்சைக் கவனித்தருளும்.
2என் அரசரே, என் கடவுளே,
என் கெஞ்சும் குரலை உற்றுக்கேளும்;
ஏனெனில் நான் உம்மை நோக்கியே
மன்றாடுகின்றேன்.
3ஆண்டவரே, விடியற்காலையில்
என் குரலைக் கேட்டருளும்;
வைகறையில் உமக்காக வழிமேல்
விழிவைத்துக் காத்திருப்பேன்.
4ஏனெனில், நீர் பொல்லாங்கைப் பார்த்து
மகிழும் இறைவன் இல்லை;
உமது முன்னிலையில் தீமைக்கு இடமில்லை.
5ஆணவமிக்கோர்
உமது கண்முன் நிற்க மாட்டார்;
தீங்கிழைக்கும் அனைவரையும்
நீர் வெறுக்கின்றீர்.
6பொய் பேசுவோரை நீர் அழித்திடுவீர்;
கொலை வெறியரையும் வஞ்சகரையும்
அருவருக்கின்றீர்.
7நானோ உம் பேரருளால்
உமது இல்லம் சென்றிடுவேன்;
உம் திருத்தூயகத்தை நோக்கி
இறையச்சத்துடன்
உம்மைப் பணிந்திடுவேன்;
8ஆண்டவரே, எனக்குப் பகைவர்
பலர் இருப்பதால்,
உமது நீதியின் பாதையில்
என்னை நடத்தும்;
உமது செம்மையான வழியை
எனக்குக் காட்டியருளும்.
9ஏனெனில், அவர்கள் வாயில்
உண்மை இல்லை; அவர்கள் உள்ளம்
அழிவை உண்டாக்கும்;
அவர்கள் தொண்டை திறந்த பிணக்குழி;
அவர்கள் நா வஞ்சகம் பேசும்.
10கடவுளே, அவர்களின் குற்றங்களுக்குரிய
தண்டனையை அவர்களுக்கு அளியும்;
அவர்கள் தங்கள் சூழ்ச்சிகளாலேயே
வீழ்ச்சியுறட்டும்;
அவர்களுடைய ஏராளமான
தீச்செயல்களை முன்னிட்டு,
அவர்களைப் புறம்பே தள்ளிவிடும்.
ஏனெனில், அவர்கள்
உம்மை எதிர்த்துள்ளார்கள்.
11ஆனால், உம்மிடம் அடைக்கலம் புகுவோர்
அனைவரும் மகிழ்வர்;
அவர்கள் எந்நாளும் களித்து ஆர்ப்பரிப்பர்;
நீர் அவர்களைப் பாதுகாப்பீர்;
உமது பெயரில் பற்றுடையோர்
உம்மில் அக்களிப்பர்.
12ஏனெனில், ஆண்டவரே,
நேர்மையாளர்க்கு நீர் ஆசிவழங்குவீர்;
கருணை என்னும் கேடயத்தால்
அவரை மறைத்துக் காப்பீர்.