மாலை மன்றாட்டு
(பாடகர் தலைவர்க்கு: நரம்பிசைக் கருவிகளுடன்; தாவீதின் புகழ்ப்பா)

1எனக்கு நீதி அருள்கின்ற கடவுளே,

நான் மன்றாடும்போது

எனக்குப் பதிலளித்தருளும்;

நான் நெருக்கடியில் இருந்தபோது,

நீர் எனக்குத் துணைபுரிந்தீர்;

இப்போதும் எனக்கு இரங்கி,

என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்தருளும்;

2மானிடரே! எவ்வளவு காலம்

எனக்குரிய மாட்சிக்கு

இழுக்கைக் கொண்டு வருவீர்கள்?

எவ்வளவு காலம் வெறுமையை விரும்பிப்

பொய்யானதை நாடிச் செல்வீர்கள்? (சேலா)

3ஆண்டவர் என்னைத் தம்

அன்பனாகத் தேர்ந்தெடுத்துள்ளார்;

நான் மன்றாடும் போது

அவர் எனக்குச் செவி சாய்க்கின்றார்;

– இதை அறிந்துகொள்ளுங்கள்.

4சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள்;

படுக்கையில் உங்கள் உள்ளத்தோடு பேசி

அமைதியாயிருங்கள். (சேலா)

5முறையான பலிகளைச் செலுத்துங்கள்;

ஆண்டவரை நம்புங்கள்.

6‛நலமானதை எங்களுக்கு அருள யார் உளர்?’

எனக் கேட்பவர் பலர்.

ஆண்டவரே, எங்கள்மீது உமது

முகத்தின் ஒளி வீசும்படிச் செய்தருளும்.

7தானியமும் திராட்சையும்

நன்கு விளையும் காலத்தில் அடையும்

மகிழ்ச்சியைவிட மேலான மகிழ்ச்சியை

நீர் என் உள்ளத்திற்கு அளித்தீர்.

8இனி, நான் மன அமைதியுடன்

படுத்துறங்குவேன்; ஏனெனில்,

ஆண்டவரே, நான் தனிமையாயிருந்தாலும்

நீரே என்னைப் பாதுகாப்புடன்
வாழச் செய்கின்றீர்.


4:4 எபே 4:26.