வழிகாட்டிப் பாதுகாக்குமாறு வேண்டல்
(தாவீதின் புகழ்ப்பா)

1ஆண்டவரே, உம்மை நோக்கி,

என் உள்ளத்தை உயர்த்துகின்றேன்.

2என் கடவுளே,

உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்;

நான் வெட்கமுற விடாதேயும்;

என் பகைவர் என்னைக் கண்டு

நகைக்க விடாதேயும்.

3உண்மையிலேயே, உம்மை நம்பும் எவரும்

வெட்கமுறுவதில்லை;

காரணமின்றித் துரோகம் செய்பவரோ

வெட்கத்திற்கு உள்ளாவர்.

4ஆண்டவரே, உம் பாதைகளை

நான் அறியச்செய்தருளும்;

உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்.

5உமது உண்மை நெறியில்

என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்;

ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்;

உம்மையே நான் நாள் முழுவதும்

நம்பியிருக்கின்றேன்;

6ஆண்டவரே, உமது இரக்கத்தையும்,

உமது பேரன்பையும் நினைந்தருளும்;

ஏனெனில், அவை

தொடக்கமுதல் உள்ளவையே.

7என் இளமைப் பருவத்தின் பாவங்களையும்,

என் குற்றங்களையும் நினையாதேயும்,

உமது பேரன்பிற்கேற்ப

என்னை நினைத்தருளும்;

ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர்.

8ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்;

ஆகையால், அவர் பாவிகளுக்கு

நல்வழியைக் கற்பிக்கின்றார்.

9எளியோரை நேரிய வழியில்

அவர் நடத்துகின்றார்; எளியோருக்குத்

தமது வழியைக் கற்பிக்கின்றார்.

10ஆண்டவரது உடன்படிக்கையையும்

ஒழுங்குமுறையையும் கடைப்பிடிப்போர்க்கு,

அவருடைய பாதைகளெல்லாம்

பேரன்பும் உண்மையும்

உள்ளனவாய் விளங்கும்.

11ஆண்டவரே, உமது பெயரின் பொருட்டு

என் குற்றத்தை மன்னித்தருளும்;

ஏனெனில், என் குற்றம் மிகப் பெரியது.

12ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர் எவரோ

அவருக்குத் தாம் தேர்ந்துகொள்ளும்

வழியை அவர் கற்பிப்பார்.

13அவர் நலமுடன் வாழ்வார்;

அவருடைய மரபினர்
நாட்டைச் சொந்தமாக்கிக்கொள்வர்.

14ஆண்டவரின் அன்புறவு அவருக்கு

அஞ்சி நடப்போருக்கே உரித்தாகும்;

அவர் அவர்களுக்கு தமது

உடன்படிக்கையை வெளிப்படுத்துவார்;

15என் கண்கள் எப்போதும்

ஆண்டவரை நோக்கியிருக்கின்றன;

அவரே என் கால்களை

வலையிலிருந்து விடுவிப்பார்.

16என்னை நோக்கித் திரும்பி

என் மீது இரங்கும்; ஏனெனில்,

நான் துணையற்றவன்; துயருறுபவன்.

17என் வேதனைகள் பெருகிவிட்டன;

என் துன்பத்தினின்று

என்னை விடுவித்தருளும்.

18என் சிறுமையையும்

வருத்தத்தையும் பாரும்;

என் பாவங்கள் அனைத்தையும்

மன்னித்தருளும்.

19என் எதிரிகள் பெருகிவிட்டதைப் பாரும்.

அவர்கள் எத்துணைக் கொடுமையாய்
என்னை வெறுக்கின்றனர்!

20என் உயிரைக் காப்பாற்றும்;

என்னை விடுவித்தருளும்;

உம்மிடம் அடைக்கலம் புகுந்துள்ள

என்னை வெட்கமுற விடாதேயும்.

21வாய்மையும் நேர்மையும்

எனக்கு அரணாய் இருக்கட்டும்;

ஏனெனில், நான் உம்மையே

நம்பியிருக்கின்றேன்.

22கடவுளே, இஸ்ரயேலரை

அவர்கள் படும் துன்பங்கள்

அனைத்தினின்றும் மீட்டருளும்.