1ஆண்டவரே, உம்மை நோக்கி,
என் உள்ளத்தை உயர்த்துகின்றேன்.
2என் கடவுளே,
உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்;
நான் வெட்கமுற விடாதேயும்;
என் பகைவர் என்னைக் கண்டு
நகைக்க விடாதேயும்.
3உண்மையிலேயே, உம்மை நம்பும் எவரும்
வெட்கமுறுவதில்லை;
காரணமின்றித் துரோகம் செய்பவரோ
வெட்கத்திற்கு உள்ளாவர்.
4ஆண்டவரே, உம் பாதைகளை
நான் அறியச்செய்தருளும்;
உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்.
5உமது உண்மை நெறியில்
என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்;
ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்;
உம்மையே நான் நாள் முழுவதும்
நம்பியிருக்கின்றேன்;
6ஆண்டவரே, உமது இரக்கத்தையும்,
உமது பேரன்பையும் நினைந்தருளும்;
ஏனெனில், அவை
தொடக்கமுதல் உள்ளவையே.
7என் இளமைப் பருவத்தின் பாவங்களையும்,
என் குற்றங்களையும் நினையாதேயும்,
உமது பேரன்பிற்கேற்ப
என்னை நினைத்தருளும்;
ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர்.
8ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்;
ஆகையால், அவர் பாவிகளுக்கு
நல்வழியைக் கற்பிக்கின்றார்.
9எளியோரை நேரிய வழியில்
அவர் நடத்துகின்றார்; எளியோருக்குத்
தமது வழியைக் கற்பிக்கின்றார்.
10ஆண்டவரது உடன்படிக்கையையும்
ஒழுங்குமுறையையும் கடைப்பிடிப்போர்க்கு,
அவருடைய பாதைகளெல்லாம்
பேரன்பும் உண்மையும்
உள்ளனவாய் விளங்கும்.
11ஆண்டவரே, உமது பெயரின் பொருட்டு
என் குற்றத்தை மன்னித்தருளும்;
ஏனெனில், என் குற்றம் மிகப் பெரியது.
12ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர் எவரோ
அவருக்குத் தாம் தேர்ந்துகொள்ளும்
வழியை அவர் கற்பிப்பார்.
13அவர் நலமுடன் வாழ்வார்;
அவருடைய மரபினர்
நாட்டைச் சொந்தமாக்கிக்கொள்வர்.
14ஆண்டவரின் அன்புறவு அவருக்கு
அஞ்சி நடப்போருக்கே உரித்தாகும்;
அவர் அவர்களுக்கு தமது
உடன்படிக்கையை வெளிப்படுத்துவார்;
15என் கண்கள் எப்போதும்
ஆண்டவரை நோக்கியிருக்கின்றன;
அவரே என் கால்களை
வலையிலிருந்து விடுவிப்பார்.
16என்னை நோக்கித் திரும்பி
என் மீது இரங்கும்; ஏனெனில்,
நான் துணையற்றவன்; துயருறுபவன்.
17என் வேதனைகள் பெருகிவிட்டன;
என் துன்பத்தினின்று
என்னை விடுவித்தருளும்.
18என் சிறுமையையும்
வருத்தத்தையும் பாரும்;
என் பாவங்கள் அனைத்தையும்
மன்னித்தருளும்.
19என் எதிரிகள் பெருகிவிட்டதைப் பாரும்.
அவர்கள் எத்துணைக் கொடுமையாய்
என்னை வெறுக்கின்றனர்!
20என் உயிரைக் காப்பாற்றும்;
என்னை விடுவித்தருளும்;
உம்மிடம் அடைக்கலம் புகுந்துள்ள
என்னை வெட்கமுற விடாதேயும்.
21வாய்மையும் நேர்மையும்
எனக்கு அரணாய் இருக்கட்டும்;
ஏனெனில், நான் உம்மையே
நம்பியிருக்கின்றேன்.
22கடவுளே, இஸ்ரயேலரை
அவர்கள் படும் துன்பங்கள்
அனைத்தினின்றும் மீட்டருளும்.