பற்றுறுதியும் நம்பிக்கையும்
(தாவீதின் கழுவாய்ப் பாடல்)

1இறைவா, என்னைக் காத்தருளும்;

உம்மிடம் நான் அடைக்கலம்

புகுந்துள்ளேன்.

2நான் ஆண்டவரிடம் ‛நீரே என் தலைவர்;

உம்மையன்றி வேறு செல்வம்

எனக்கு இல்லை’ என்று சொன்னேன்.

3பூவுலகில் உள்ள தூயோர்
எவ்வளவோ உயர்ந்தோர்!

அவர்களோடு இருப்பதே எனக்குப் பேரின்பம்.

4வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றுவோர்

தங்கள் துன்பங்களைப்

பெருக்கிக்கொள்வர்;

அவற்றுக்குச் செலுத்தப்படும்

இரத்தப் பலிகளில்

நான் கலந்து கொள்ளேன்;

அவற்றின் பெயரைக்கூட

நாவினால் உச்சரியேன்.

5ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து;

அவரே என் கிண்ணம்;

எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே;

6இனிமையான நிலங்கள்

எனக்குப் பாகமாகக் கிடைத்தன;

உண்மையாகவே என் உரிமைச் சொத்து

வளமானதே.

7எனக்கு அறிவுரை வழங்கும்

ஆண்டவரைப் போற்றுகின்றேன்;

இரவில்கூட என் மனச்சான்று

என்னை எச்சரிக்கின்றது.

8ஆண்டவரை எப்போதும்

என் கண்முன் வைத்துள்ளேன்;

அவர் என் வலப்பக்கம் உள்ளார்;

எனவே, நான் அசைவுறேன்.

9என் இதயம் அக்களிக்கின்றது;

என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது;

என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும்.

10ஏனெனில், என்னைப்

பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்;

உம் அன்பனைப் படுகுழியைக்

காண விடமாட்டீர்.

11வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்;

உமது முன்னிலையில் எனக்கு

நிறைவான மகிழ்ச்சி உண்டு;

உமது வலப்பக்கத்தில்

எப்போதும் பேரின்பம் உண்டு.


16:8-11 திப 2:25-28. 16:10 திப 13:35.