1இறைவா, என்னைக் காத்தருளும்;
உம்மிடம் நான் அடைக்கலம்
புகுந்துள்ளேன்.
2நான் ஆண்டவரிடம் ‛நீரே என் தலைவர்;
உம்மையன்றி வேறு செல்வம்
எனக்கு இல்லை’ என்று சொன்னேன்.
3பூவுலகில் உள்ள தூயோர்
எவ்வளவோ உயர்ந்தோர்!
அவர்களோடு இருப்பதே எனக்குப் பேரின்பம்.
4வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றுவோர்
தங்கள் துன்பங்களைப்
பெருக்கிக்கொள்வர்;
அவற்றுக்குச் செலுத்தப்படும்
இரத்தப் பலிகளில்
நான் கலந்து கொள்ளேன்;
அவற்றின் பெயரைக்கூட
நாவினால் உச்சரியேன்.
5ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து;
அவரே என் கிண்ணம்;
எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே;
6இனிமையான நிலங்கள்
எனக்குப் பாகமாகக் கிடைத்தன;
உண்மையாகவே என் உரிமைச் சொத்து
வளமானதே.
7எனக்கு அறிவுரை வழங்கும்
ஆண்டவரைப் போற்றுகின்றேன்;
இரவில்கூட என் மனச்சான்று
என்னை எச்சரிக்கின்றது.
8ஆண்டவரை எப்போதும்
என் கண்முன் வைத்துள்ளேன்;
அவர் என் வலப்பக்கம் உள்ளார்;
எனவே, நான் அசைவுறேன்.
9என் இதயம் அக்களிக்கின்றது;
என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது;
என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும்.
10ஏனெனில், என்னைப்
பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்;
உம் அன்பனைப் படுகுழியைக்
காண விடமாட்டீர்.
11வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்;
உமது முன்னிலையில் எனக்கு
நிறைவான மகிழ்ச்சி உண்டு;
உமது வலப்பக்கத்தில்
எப்போதும் பேரின்பம் உண்டு.