மக்களில் மகிழ்ச்சியுறும் மாமன்னர் போற்றி!

1அல்லேலூயா!

ஆண்டவருக்குப் புதியதொரு
பாடலைப் பாடுங்கள்;

அவருடைய அன்பர் சபையில்

அவரது புகழைப் பாடுங்கள்.

2இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக்

குறித்து மகிழ்ச்சி கொள்வதாக!

சீயோனின் மக்கள் தம் அரசரை

முன்னிட்டுக் களிகூர்வார்களாக!

3நடனம் செய்து அவரது பெயரைப்

போற்றுவார்களாக;

மத்தளம் கொட்டி, யாழிசைத்து

அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக!

4ஆண்டவர் தம் மக்கள் மீது

விருப்பம் கொள்கின்றார்;

தாழ்நிலையிலுள்ள அவர்களுக்கு

வெற்றியளித்து மேன்மைப் படுத்துவார்.

5அவருடைய அன்பர்

மேன்மையடைந்து களிகூர்வராக!

மெத்தைகளில் சாய்ந்து

மகிழ்ந்து கொண்டாடுவராக!

6அவர்களின் வாய்

இறைவனை ஏத்திப் புகழட்டும்;

அவர்களின் கையில் இருபுறமும்

கூர்மையான வாள் இருக்கட்டும்.

7அவர்கள் வேற்றினத்தாரிடம்

பழிதீர்த்துக் கொள்வார்கள்;

மக்களினங்களுக்கு

தண்டனைத் தீர்ப்பிடுவார்கள்;

8வேற்றின மன்னர்களை

விலங்கிட்டுச் சிறைசெய்வார்கள்;

உயர்குடி மக்களை

இரும்பு விலங்குகளால் கட்டுவார்கள்.

9முன்குறித்து வைத்த தீர்ப்பை

அவர்களிடம் நிறைவேற்றுவார்கள்;

இத்தகைய மேன்மை

ஆண்டவர் தம் அன்பர்

அனைவருக்கும் உரித்தானது.

அல்லேலூயா!