1அல்லேலூயா! என் நெஞ்சே!
நீ ஆண்டவரைப் போற்றிடு;
2நான் உயிரோடு உள்ளளவும்
ஆண்டவரைப் போற்றிடுவேன்;
என் வாழ்நாளெல்லாம் என் கடவுளைப்
புகழ்ந்து பாடிடுவேன்.
3ஆட்சித் தலைவர்களை நம்பாதீர்கள்;
உன்னை மீட்க இயலாத
மானிட மக்களை நம்ப வேண்டாம்.
4அவர்களின் ஆவி பிரியும்போது
தாங்கள் தோன்றிய மண்ணுக்கே
அவர்கள் திரும்புவார்கள்;
அந்நாளில் அவர்களின் எண்ணங்கள்
அழிந்துபோம்.
5யாக்கோபின் இறைவனைத்
தம் துணையாகக் கொண்டிருப்போர்
பேறுபெற்றோர்;
தம் கடவுளாகிய ஆண்டவரையே
நம்பியிருப்போர் பேறுபெற்றோர்.
6அவரே விண்ணையும் மண்ணையும்
கடலையும் அவற்றிலுள்ள யாவற்றையும்
உருவாக்கியவர்;
என்றென்றும் நம்பிக்கைக்கு
உரியவராய் இருப்பவரும் அவரே!
7ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான
நீதியை நிலைநாட்டுகின்றார்;
பசித்திருப்போர்க்கு
உணவளிக்கின்றார்;
சிறைப்பட்டோர்க்கு
விடுதலை அளிக்கின்றார்.
8ஆண்டவர் பார்வையற்றோரின்
கண்களைத் திறக்கின்றார்;
தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்;
நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார்.
9ஆண்டவர் அயல் நாட்டினரைப்
பாதுகாக்கின்றார்;
அனாதைப் பிள்ளைகளையும்
கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்;
ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக்
கவிழ்த்துவிடுகின்றார்.
10சீயோனே! உன் கடவுள், என்றென்றும்,
எல்லாத் தலைமுறைகளுக்கும்
ஆட்சி செய்வார். அல்லேலூயா!