1அல்லேலூயா! நெஞ்சார
ஆண்டவருக்கு
நன்றி செலுத்துவேன்;
நீதிமான்களின் மன்றத்திலும் சபையிலும்
அவருக்கு நன்றி செலுத்துவேன்.
2ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை;
அவற்றில் இன்பம் காண்போர்
அனைவரும் அவற்றை ஆய்ந்துணர்வர்.
3அவரது செயல்
மேன்மையும் மாண்பும் மிக்கது;
அவரது நீதி என்றென்றும்
நிலைத்துள்ளது.
4அவர் தம் வியத்தகு செயல்களை என்றும்
நினைவில் நிலைக்கச் செய்துள்ளார்;
அருளும் இரக்கமும் உடையவர் ஆண்டவர்.
5அவர் தமக்கு அஞ்சி நடப்போர்க்கு
உணவு அளிக்கின்றார்;
தமது உடன்படிக்கையை
என்றும் நினைவில் கொள்கின்றார்;
6வேற்றினத்தாரின் உரிமைச் சொத்தைத்
தம் மக்களுக்கு அளித்தார்;
இவ்வாறு ஆற்றல்மிக்க தம் செயல்களை
அவர்களுக்கு வெளிப்படுத்தினார்.
7அவர்தம் ஆற்றல்மிகு செயல்கள்
நம்பிக்கைக்குரியவை; நீதியானவை;
அவர்தம் கட்டளைகள் அனைத்தும்
நிலையானவை.
8என்றென்றும் எக்காலமும்
அவை நிலைமாறாதவை;
உண்மையாலும் நீதியாலும்
அவை உருவானவை.
9தம் மக்களுக்கு அவர் மீட்பை அளித்தார்;
தம் உடன்படிக்கை
என்றென்றும் நிலைக்குமாறு செய்தார்;
அவரது திருப்பெயர் தூயது;
அஞ்சுதற்கு உரியது.
10ஆண்டவர்பற்றிய அச்சமே
ஞானத்தின் தொடக்கம்;
அவர்தம் கட்டளைகளைக்
கடைப்பிடிப்போர் நல்லறிவுடையோர்;
அவரது புகழ்
என்றென்றும் நிலைத்துள்ளது.